RSS

Saturday, November 3, 2007

வௌவால் காவியம்...!!

சமீபத்தில் செய்தி ஒன்றில் கேட்ட விசயம் என்னை இக்கவி எழுத இசைத்தது.

வௌவால்களின் மீது இரக்கம் காட்டி அதற்கு அடைக்களம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் ஒரு தம்பதிகளைப் பற்றி சொன்னார்கள். உலகிலேயே பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் ஒரு உயிரியான வௌவால்கள் மேல் கருணை காட்டிய முதல் தம்பதிகள் அவர்கள் தானாம்.



அநேகமாக வௌவாலுக்காக எழுதிய முதல் கவிதை இது தான் என்று நினைக்கிறேன்..!!

இயற்கையின் படைப்பு பலருக்கும் பிடிக்காத வௌவாலும் ஒன்று..!

படைத்தல் இயற்கை என்பதால் பாவப்பட்ட உயிர் வௌவால் என்ன செய்யும்??




வௌவால் காவியம்

பகலவன் துயில விரையும்
மாலை ஆறஞ்சு
நேரம்..!
பாழடைந்த மண்டபம் அருகில்

தனிமைப் பயணம்..!



சட்டென்று குதித்தது
சருகுகள் இடையே அந்த

சின்ன கரிய வௌவால்..!



மெல்ல என் கண்ணோக்கி

மெதுவாக தமிழ் பகர்ந்தது...!


"நீர் கவியென்று யாமறிவோம்."

நிதானமாக சொல்ல விழைந்தது.


"எவையெல்லாமோ கவிக்கரு
எய்தி முக்தி அடைகையில்
எம்மையும் வைத்து பாடுவீரோ??!!"

கெஞ்சி நின்று கேள்வி கேட்டது

பிஞ்சு குட்டி வெண்ணுள்ள
வௌவால்..!!

பார்த்து புன்னகைத்து
பகலவனின் பளிங்கு
வெளிச்சம் அணையுமுன்
பக்கத்தில் அமர்ந்து
பையில் துலாவி
காகித பதிவில்
எழுத முனைந்தேன்..!


காத்திருந்தது தலைகீழாக
கள்ளமில்லா
வௌவால்..!

"எலியும் பறவையும்
எடுத்து வைத்ததுபோல்
இறக்கையும் எலி உருவமுமாய்
உண்டான விசித்திரம்..!!

வேகத்திலும் விசையறிந்து
திசை குறி தப்பாது
பறக்கும் அற்புதம்..!!

சந்துபொந்தில் இல்லை
உறக்கம்... அந்தரத்தில்
அரும்பும் தூக்கம்..!!

தண்ணீர் தேசத்தில்
எலி நாயகருக்காய்
கண்ணீர் விடவைத்தார்
வைரக் கவிஞர்..!!

வருந்தி வாழும்

வௌவாலுக்கும் காவியம்
வடிப்போம் வள்ளல்
நெஞ்சுடையீர்..!

தலைகீழாய் பிறந்து
நேராய் நீ வாழ்கையில்
தலைகீழாய் வாழும்
தாயுள்ள வௌவால்
நேராய் கேட்கிறது
அன்பு வைக்க ஏன்
அருளில்லையென்று..!"


எழுதுகோலின் இடைபற்றி

சிந்தித்துக் கிடக்கையில்

சங்கடம் சொல்லி

தன்கடன் முடித்து

துக்கத்தில் அழுதது

துள்ளும் வௌவால்..!


சாத்தானின் கூட்டமென்று

சாத்திரம் சொல்லி

சற்றும் புத்தியின்றி

கல் கொண்டு

தன்னை சாத்தி

சங்கடப்படுத்தும்

சங்கதி சொன்னது..!


"மண்ணில் இருக்கும்
மண் புழு கூட
உழவரின் நெஞ்சில்
புதல்வராய் இருக்கையில்
தம் உயிர் மட்டும்
தாழ்வா??"
என்று
வௌவால் வடிவாக

கேட்பது போல்

எழுதி முடித்தேன்.


வாசித்துக் காட்டி

வரிகள் விளக்கையில்

வடிந்தது வெள்ளம்

வௌவாலின் கண்களில்...!


வருந்திப் பதைத்து நான்

ஏனென வினவ..


வருத்தமில்லை அது

வௌவாலின் நன்றி

நவிலல் என்று

வகையாய் உரைத்து

புகையாய் பறந்தது..!



__________________

~ பூமகள்.



3 comments:

cheena (சீனா) said...

அன்பின் பூமகள் - வவ்வால் காவியம் நீண்டதொரு காவியம் - அருமையான காவியம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பூமகள் - வவ்வால் காவியம் நீண்டதொரு காவியம் - அருமையான காவியம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வித்தியாசமான கரு..நன்று! அழகாகச் சொல்லியுள்ளீர்கள், எனக்கும் வௌவால் மேல் பரிதாபம் ஏற்பட்டுவிட்டது.