RSS

Wednesday, December 26, 2007

நாம் யார்??







ரோஜாவின் செவ்விதழ்
தடவிய பனித்துளி
மிளிரும் புன்னகையோடு
பகலவன் முன்..!!


மகரந்த சூல்பையில்
மயங்கிய வண்டொன்று
பனித்துளி நோக்கி
படையெடுக்கும்
வைரம் திருட...!!

நொடிப்பொழுதில்
கரையும் பனித்துளி
வைரமென்றால்
காலத்தின் கையில்
நாம் யார்??


விடை தெரியா
வாழ்க்கை
விடைதேடும்
பூச்செடிகள் - நாம்!


__________________
~பூள்.

Sunday, December 16, 2007

கிளை தேடி...!





கிளை தேடி..!

கிளைகள் தேடும்
காற்றுப் பாதையில்
ஓர் விடுபட்ட இலை..!

தொலைத்த கிளையை
தேடும் விழியுடன்
தொலையா நினைவு..!

தெரிந்தே தேடும்
துன்பத்தின் வழியாக
தவிக்கும் பச்சிலை..!

துவண்டு விழுந்ததும்
தட்டி எழுப்பின
அன்புக் கரங்கள்..!

குற்றுயிராய் இருக்கும்
சருகுக்கு புரிந்தது
விடுபட்ட கிளையோடு
சிநேகம் இனி
செயற்கை என்று..!

உரமாகும் முயற்சியில்
இப்போது சருகு..!!
__________________
~பூமகள்.

Sunday, December 2, 2007

மழை...!!


மழை..!!




மழை இரவில்
கருக்கல் பயணம்..!!


ரகசியம் பு(உ)ணர
கரு மேக முகடு
கவ்விய இரவை
போர்வையாக்கியதால்
புலப்பட்டது காரிருளாயினும்
காட்டிக்கொடுக்க காத்துக்கிடந்தன
வானத்து எட்டப்பர்கள்..!!


சிதறிய கொலுசின் சிப்பாய்களாய்
மேகத்திரை(சிறை) தப்பித்து
நட்சத்திர மின்மினிகள்
கண்சிமிட்டி ஒளி சிந்தி
காட்சிக் கொடுத்தன...!!



முகில்கள் தழுவலின்
ஓங்கிய உரசல்
இடிகளாய் வந்து
இடித்துரைத்துக்
காட்டிச் சென்றன..!!



முகிலின் பு(உ)ணரல்
முரண்பட்டதால்
வாள் கொண்டு
போரிட்டதை மின்னல்
வெட்டி வெட்டி
வந்துரைத்துப் போயின..!!



மேக மைந்தன் முரணில்
முட்டி வென்றதால் வானம்
மகிழம்பூக்களாய் முகில்ப்பூக்கள் தூவி
வரவேற்க..!! - பூமிக்கு
பூமழையாக பொழிந்ததுவே..!!
__________________
~பூமகள்.