RSS

Tuesday, March 26, 2013

நானும் என் டேலியாக்களும்..!!


நானும் என் டேலியாக்களும்..!!



     இது என் பால்ய கால நிகழ்வுகளில் மிகப் பிடித்தமான ஒன்று.. எனது ஆரம்பப் பள்ளி நாட்கள் முதலென்று கொள்ளலாம்.. எங்கள் தெருவில் தினமும் ஒரு பூ வியாபாரி தனது மிதி வண்டியில் மூங்கில் கூடை மற்றும் மூங்கில் தட்டு நிறைய வண்ண வண்ணப் பூக்களோடு காலை நேரங்களில் வருவார். சுமார் எட்டு எட்டரை மணியளவில் அவரை எங்கள் தெருவில் கட்டாயம் பார்க்கலாம். அவர் பெரும்பாலும் பன்னீர் ரோஜா வகைப் பூக்களைக் கொண்டு வருவார். ஒன்று நாலேனா வீதம் ரூபாய்க்கு நான்கு பூக்கள் தருவார்.. அதன் மணம், மனம் நிறைக்கும். பல நாட்களில் உதகை ரோஜா வகைகள் கொண்டு வருவார்.

     வித்தியாசமான சில நாட்களில் பல வண்ண நிறங்களில் டேலியா  மலர்களைக் கொண்டு வருவார். அப்போது அவர் சத்தம் கேட்டவுடன் ஓடும் நாங்கள், அவர் வைத்திருப்பது டேலியா என தெரிந்தால் இன்னும் அடித்துப் பிடித்து ஓடி அவரை நெருங்குவோம்.. அவரோ வீதியின் சரியான மையப்புள்ளியில் நின்று கொண்டிருப்பார். அங்கு இருப்பவர்கள் முதலே வந்து பிடித்த மலர்களைக் கவர்ந்து கொள்ள, நாங்கள் செல்கையில் மீதமிருக்கும் பூக்களுக்கு அடிதடி நடக்கும்.. பெரும்பாலும் எங்கள் வீதியிலேயே நான் தான் மிகச் சிறியவளாக (இப்போ மட்டும் என்ன..??!! )இருந்த காரணத்தால் என் அன்பு அக்காக்கள் எனக்கு நல்லப் பூக்களைத் தாமே தேடிக் கொடுக்கவும் செய்வார்கள்.. அப்போதிருந்தே டேலியாக்கள் மேல் தீராத தாகம் எனக்கு...

     இரட்டை ஜடை பின்னில் இட்டு, ரிப்பன் வைத்து அதில் டேலியா வைத்துப் பள்ளிக்குப் போகும்போது, கை தானாக தலைக்குச் சென்று பூவைத் தொட்ட வண்ணமே இருக்கும்.. அன்று முழுக்க அந்த டேலியா பற்றிய நினைவாகவே இருக்கும். பக்கத்திலிருக்கும் தோழியிடம் மதியப் பொழுதில் “வாடிருச்சா டி?!” என்று கேட்டு கண்ணாடி இல்லாத குறை போக்குவேன்.. அடிக்கடி டேலியாப் பூ வாங்க அப்போதைய வீட்டின் நிதித் துறை யோசிக்க, எப்போதேனும் கிடைக்கும் டேலியா மேல் தனிக் காதல் பிறந்தது இயல்பு தான் அல்லவா??!!

     பள்ளிக் காலம் முடிவதற்கு முன்பே வீடு மாற்றி, ஒரே ஊரில் சொந்த வீட்டுக்கு குடி போன போதும், மகிழ்வையும் தாண்டி அன்பான சுற்றமும், என்னைக் கவர்ந்த டேலியா பூ விற்கும் வண்டிக்காரர் வருகையையும் இழந்து அங்கு நிறைய நினைந்து வருந்தியிருக்கிறேன். உதகைக்கு போன நாட்களில் அங்கு தாவரவியல் பூங்காவிலிருந்து டேலியா விதைகள் வாங்கி வந்து நடவிட்டு, பின் பத்து நாட்களாக இரவும் பகலும் அந்த இடத்தையே நோட்டமிட்டு, ஏமாந்த காலமும் உண்டு. இப்போதும் பூ சந்தைக்கு என் வீட்டிலிருந்து யார் போனாலும் முதலில் சொல்லுவது “டேலியா வாங்கி வாங்க...!” இதைக் கேட்டு என் அத்தை ஒரு முறை, இந்த காலத்திலும் டேலியா விரும்பும் ஒரு பெண்ணா என்று சிரித்தபடி கேட்டே விட்டார்.. எந்த காலமானால் என்ன, பூவுக்கு பூ பிடிப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே??!!

அன்புடன்,
பூமகள்.




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய அனுபவம்... முடிவில் சொன்னது ஆச்சரியம் இல்லை தான்...

டேலியா - எங்க ஊர் பக்கம் கொடைக்கானலில் தான் பார்க்க முடிகிறது...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆமாம் பூவுக்கு பூ பிடிக்கத்தான் செய்யும் :) அருமையான பகிர்வு..நான் சிறுவயதில் கொடைக்கானலில் வாழ்ந்த பொழுது வண்ண வண்ண டேலியா வளர்த்த நினைவு வந்துவிட்டது..