RSS

Friday, April 11, 2014

அடையாளம்..!

அடையாளம்

வீழ்ந்து கிடக்குமொரு
தெருவோரப் பொருள்
யாரின் பிரயத்தனத்தையும்
விட்டுவைக்கவில்லை..

கடந்து சென்ற
சிறார் கூட்டமொன்று
கல்லெறிந்துவிட்டு
சிரித்தபடி சென்றது..

சில நகர்வுகளுக்கு பின்
வலிமுணகலேதுமின்றி
சுரத்தற்றிருந்தது..

சுட்டெரிக்கும் சூடேற
நிழலுக்காய் ஒதுங்கிய மூதாட்டி
வழியும் செந்நிற வெற்றிலைச் சாற்றை
கையொதுக்கி அதில் தேய்தபடி
சென்றுவிட்டிருந்தாள்..

ஆங்கொன்றும் இங்கொன்றுமாய்
நடமாடுமெவரும் அதைக்
கவனித்ததாய் தெரியவில்லை..

இருள் படர்ந்ததொரு பொழுதில்
தடுமாறும் போதைசூழ் மனிதனின்
கால்விரலைப் பதம் பார்த்ததில்
வெகுண்ட அவன்
அதை வசைபாடி வீசியதில்
புதரொன்றில் வீழ்ந்து
காணாமலே போனது
பொலிவிழந்த ஊரின்
பெயரழிந்த பெயர்ப்பலகை..!!

--பூமகள்.