RSS

Monday, September 7, 2015

இல் இல்லாதவர்..!!

இல் இல்லாதவர்..!!

மௌனச் சாரலின்
சில்லிட்ட உணர்வுகளால்
நிரம்பி வழியும் அந்தி!!

பொழுதெல்லாம் 
வெம்மையில் வெக்கி
நாணிச் சிவந்த முகில்!!

ஊடலும் கூடலுமாய்
மோனத்தில் கரைந்து
கானல் காட்டும் நிலா!!

அடுப்படி அழுத்தலில் 
அம்மாக்கள் பணித்திருக்க.. 
வழி தீரா பயணத்தில்
அப்பாக்கள் அரண்டிருக்க..
கூடு தேடும் குருவிகளாய்
சன்னல் சிறை சாய்ந்துறங்கும்
மின்மினிகள்..!!

அழுக்கேறிய உடையின்
சல்லடை நுழைக்காற்றின்
கூதலோடு போராடும்
சாலையோரத் துயிலோரை
அடித்தெழுப்பி கறக்கும்
விதிமுறை பாதுகாவலர்களை
அனைவரும் கடந்திருப்போம்..
இல் இல்லாதோரின் 
வலி உணராமலேயே!!

--பூமகள்.




Monday, August 17, 2015

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு!


வெம்மைச் சுவடுகளின்
இடுக்குகளில்
பன்னீர் தெளித்தது யார்??!!
மண் வாசத்துடன்
நண்பகல் வெயிலின் துளிகள்
பூமியின் தலை துவட்டும்
பூப்பொழிவான
ஒரு குட்டி மழை!!


-பூமகள்.

Thursday, March 5, 2015

காய்ச்சல் காலம்..!

நோயில் வீழ்ந்து 
கடக்கும் நாட்களில்
நம் வீடு நமக்கே 
புதிதாய் தெரிகின்றன..!

கலைந்து கிடக்கும் பொருட்களும்
துவைக்கப்படாத துணிகளும்
நிறைந்திருக்க..
சொல்லப்படாத மெல்லிய
காதல் இழையோடும்
அன்பானவர் அருகிருப்பின்
ஆண்டுக்கிருமுறையேனும்
வந்து செல்லலாம்
கொஞ்சூண்டு
காய்ச்சலும்
தடுமனும்..!!

--பூமகள்..!