RSS

Thursday, January 27, 2011

உனக்காக..!!




உனை எழுத நினைத்து
தோற்றுப் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
நான்..!!

வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!

உனைத் தொடரவே
நான் பயணிக்க..

என் பயணங்களின் தூரம்
சொல்லாமல் செல்கிறது
காலம்..!!

வளைந்து, மறைந்து,
வேகம் கூட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறா ய்
நீ..!!

குழந்தைகள் விளையாட்டாய்
உனையடைய துரத்துகிறேன்
நான்..!!

இலக்கின்றி ஓடி
ஓர் இடத்தில்
நிற்கிறாய்..!!

மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நா ம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!

வழக்கம் போலவே
தென்றல் நமைப் பற்றி
மென்னிறகால்
கவிதை தூவிச் செல்கிறது
நம்மிருவருக்குமிடையே..!!

--
பூமகள்.

Monday, January 17, 2011

பொங்கலோ பொங்கல்..!




மஞ்சக்கொம்பு காப்பு கட்டி
மண் பானை அடுப்பேற்றி
பொங்கி வரக் காத்திருக்கும்
சர்க்கரைத் தருணங்கள்
நினைவில் மட்டுமே..!!

குக்கருக்கு காப்பு கட்டி
தண்ணீர் கொஞ்சம் சேர்த்து ஊத்தி
விசில் பொங்கி வந்து கிழக்கில் விழ
சொல்லி வைக்கிறேன்
"பொங்கலோ பொங்கல்"..!!

--பூமகள்.

Tuesday, January 4, 2011

பூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்??





படம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண்டும் ஒரு சில நாட்களில் காண ஏக பரபரப்பில் கிளம்பி மகிழ வைத்தார் என்னவர்.

கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை.. படத்தைப் பற்றிய பலவாறான கருத்துகளோடு பார்க்கச் சென்றாலும் கதை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன்.


படத்தில் ஆரம்பமே நம்ம சூர்யா வந்து வரவேற்பாளரானார். மகிழ்ச்சி இரட்டிப்பானது. என்னே ஒரு நடனம். அந்த துள்ளல் மனதில் தொற்றிக் கொள்ள கதையில் ஐக்கியமானது மனம்.


திரிஷா, மாதவன் காம்பினேசன் புதிதாக இருந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கொட்டக் கொட்டப் பார்த்ததில் எனக்கு எந்த பெரிய தவறும் தெரியவில்லை.. ஏனெனில் நான் சிந்திக்கும் நிலையில் இல்லை.. வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டிருந்தேன்.. ஏன் திரையரங்கத்தில் அனைவருமே அப்படியான நிலையில் தான் இருந்தனர்.


கமல் வெகு அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் கண்கள் நடிப்பில் பின்னுகின்றன. மாதவன் கலக்கியிருக்கிறார். நகைச்சுவை ததும்புகிறது. சங்கீதா வெகு அசால்ட்டாக நடித்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன்.. என்று அவர் பாடும் காட்சி வெகு அருமை. அதே நேரம் தான் கொடுப்பது போல் கேமிராவை தண்ணீரில் போட்டு மாதவனிடம் ஏன் போட்டீர்கள் என்று பேசுமிடம் வெகு வேடிக்கை.. நல்ல டைம்மிங்..


மாதவன் படம் முழுதும் தண்ணீரிலேயே வசனம் பேசுகிறார். ஆனாலும் புரிகிறது. பாத்ரூமில் தன் செல்போனை தவற கீழே விடுவதும் அதன் பின்னான வசனங்களும் திரையரங்கையே அதிர வைக்கின்றன.


நிறைய நல்ல நகைச்சுவைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.. ஒவ்வொரு வசனத்திலுமே. தேவையற்ற சில இடங்கள் இழுவையாகத் தோன்றுவதாக பலர் சொன்னார்கள். எமக்கும் அது திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன். ஆயினும் நகைச்சுவை நம்மை அதையெல்லாம் யோசிக்க விடுவதில்லை.


நீல வானம்,, பாடல் வித்தியாசமான முயற்சி.. கலக்கல்.. அதுவும் ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து எடுக்கப்பட்ட யோசனை தான் எனும் பொழுது கொஞ்சம் வருத்தம். இப்பாடல் தான் படத்தின் ஹைலைட்.


திரீஷா - கமல் காதல் எப்படி திடீரென்று பூத்ததென்று கதையில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.. அது ஒரு சிறு நெருடல்.


கமல் பார்வையில் ஏதோ ஒரு வருத்தம் தோய்ந்திருக்கிறது படம் முழுதும். அது நம்மை என்னவோ செய்கிறது.


சினிமோட்டோ கிராஃபி கலக்குகிறது. பிரான்சும், இறுதியில் வரும் குரூசும் வெகு அழகு. படத்தைப் பார்த்ததிலிருந்து பிரான்சைப் பார்க்கும் எண்ணம் வலுத்தது.


மொத்தத்தில், மன்மதன் அம்பு எல்லோர் மனதையும் நகைச்சுவையால் தைக்கத் தவறவில்லை.


எந்திரனை விட எனக்கு பல மடங்கு இப்படம் பிடித்திருக்கிறது. ரஜினி ரசிகர்கள் கோவிக்காதீர்கள் ப்ளீஸ்..!!
__________________
-- பூமகள்.