RSS

Thursday, August 13, 2009

பூ - பூவின் பார்வையில்..

பூ - பூவின் பார்வையில்..



நடிப்பு: ஸ்ரீகாந்த், பார்வதி
இயக்கம்: சசி
இசை: S.S.குமார்




பூ படம் பற்றிய விமர்சனம் எழுத வெகு நாட்களாக மனதுக்குள் போராட்டம்.. நேரம் அமைந்தது இன்று தான்.

அழகான உணர்வு தரும் சுகந்தத்தை படம் முழுதும் நுகர்ந்து கொண்டே இருக்க முடிந்தது.

மளிகைக் கடை வைத்திருக்கும் தனது அன்பான கணவருடன் தான் நடத்தும் இல்லறத்திலிருந்து துவங்குகிறது படத்தின் நாயகி மாரி(பார்வதி)யின் அறிமுகம்..

தனது ஊர் திருவிழாவுக்குச் செல்ல வெகு நேரம் கணவருடன் அடம் பிடித்து ஊருக்குச் செல்ல முதல் ஆளாக பேருந்துக்காக காத்திருக்கும் இடம் அழகான பதிவு.. புளுதி பறக்கும் வெயிலில் பேருந்து வரும் திசையின் வெட்ட வெளி நோக்கி காத்திருக்கும் மாரியோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் வியர்ப்போம்.. பேருந்தில் ஏறி கம்பியினூடே தலை சாய்த்தபடியே மாரி தனது பழைய நினைவுகளுக்குச் செல்ல பேருந்து ஊர் நோக்கி முன்னேறுகிறது..

தனது மாமன் மகன் தங்கராசு(ஸ்ரீகாந்த்) மேல் உயிரினும் மேலான அன்பு வைத்திருக்கும் மாரியின் அன்பை அந்த அற்புதக் காதலை ஒவ்வொரு காட்சியிலும் வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் சசிக்கு எனது மனமார்ந்த பாராட்டு..

ஸ்ரீகாந்த் இத்தகைய கதையைத் தேர்ந்தெடுத்து நம் மனங்களில் வெகு உயரத்துக்குச் சென்றுவிட்டார்.. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் இவரின் மனப்போராட்டமும், தவிப்பும் படத்தில் வெகு அழகாக காட்டப்பட்டிருக்கிறது.. வழக்கம் போல் ஸ்ரீகாந்த் வெகு அழகு நடிப்பிலும் அழகிலும்..

சொல்லப்படாத காதலின் ஆழம் சொல்ல இரு தனித்த பனைமரங்களையே குறித்திருப்பது கவித்துவம்.. சின்னச் சின்ன முக பாவங்களையும் வெகு எதார்த்தமாக வெளிக்காட்டி நிஜ கிராமியப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் படத்தின் நாயகி பார்வதி.



ஒரு பெண்ணாக, நாயகி உணர்ந்த எல்லா உணர்வுகளையும் வெகு அழகாக என்னில் இறக்கி ரசிக்க முடிந்தது..

தன் தங்கராசுவைக் காண ஓடோடி வந்து காத்திருக்கும் போதும்.. அதன் பின் வரும் பழைய நினைவுகளும் கதையோட்டத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது..

பட்டாசுத் தொழிற்ச்சாலையில் வேலை பார்க்கும் நாயகி மாரியும், அவருடன் நட்பு பாராட்டும் தோழியும் நட்பின் ஊடல், கூடல்களை வெகு இயல்பாக காட்டி நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்..

மொட்டை வெயில், பரந்த காய்ந்த புளுதி பறக்கும் வானம் பார்த்த பூமி, மாரியின் தவிப்பு என படம் முழுதும் நம்மை தவிக்க விடும் காட்சிகள் அதிகம்..

ஊர்த் திருவிழாவுக்கு வந்து சேரும் மாரி, தன் தங்கராசுவைப் பார்த்தாரா?? என்ன நடந்தது என இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதார்த்தம் நிரப்பி காட்டியிருக்கும் காட்சிகள் அற்புதம்..

மாரியின் மனம் சொல்ல.. முதல் ஓரிரு காட்சிகளிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இயக்குநரின் திறனை மெச்ச வைக்கிறது..

மாரியின் காலில் மளிகைக் கடை படிக்கல் விழ, மாரி அதற்கு கூட அழுகாமல் சிரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வு நெகிழ வைக்கிறது.. அதற்கான காரணம் படத்தின் இறுதியில் சொல்லியிருப்பது வெகு சிறப்பு..

பாடல்கள் இசையால் மெல்ல வருடிச் செல்கிறது.. குறிப்பாக, "சொந்த வேரொடு தான் கொண்ட காதலினை.." என்ற பாடல், பாடகி சின்மயி குரலில் தேனாய் இனிக்கிறது.. படத்தின் மொத்த கருத்தையும் இவ்வொருபாடலே சொல்லிச் செல்கிறது.. படத்தின் சிறப்பான பகுதிகளுள் இப்பாடலுக்கு தனியிடம் இருக்கும் என்பது திண்ணம்..

ஒரு அழகான படம் பார்த்தால் அதன் தாக்கம் வெகு நாட்களுக்கு இருக்கும் என்பார்கள்.. அத்தகைய தாக்கத்தை என்னால் இப்போதும் உணர முடிகிறது.. அதன் தாக்கமே என் இந்த விமர்சனத்துக்குக் காரணம்..

பூ - இலக்கிய தரம் வாய்ந்த ஒரு சிறந்த நாவலைப் படித்த உணர்வை என்னில் ஏற்படுத்தியது..


மொத்தத்தில்,
பூ - புனிதம், கவித்துவம், அற்புதம்.

Wednesday, August 12, 2009

என் இதயச் சுவடுகள் - 2


உன்னோடு பேசிய பின்
அடுத்து உன் குரல்
கேட்கும் வரையிலும்
என்னுள் நீடித்திருக்கிறது..
உன் வார்த்தைகளின் வாசம்..

அந்த வாசத்தில் கிறங்கி,
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!

Wednesday, August 5, 2009

என் இதயச் சுவடுகள்...!! - 1


உனை முதலில் பார்த்த
வினாடிச் சிறகுகளின்
படபடப்பின் மத்தியில்
உன் சின்ன விழியால்
எனை பார்த்த அந்த நொடியில் தானடா..
என்னுள் வண்ணங்கள்
தோய்த்து சிறகுகள்
விரித்தது
ஓர் வண்ணத்துப்பூச்சி தேவதை...

Thursday, July 2, 2009

முதன் முதல்..!!



முதல் பள்ளி ஆயத்தம்,
முதல் கல்லூரி நுழைவு,
முதல் நேர்முகத் தேர்வு,
முதல் வாங்கிய வேலை,
முதல் மாதச் சம்பளம்,
முதல் வெற்றி,
முதல் காதல்,
முதல் முத்தம்,
முதல் ஸ்பரிசம்..
முதல்களின் நீளங்கள்
முடிவிலியாகினும்..
உன் மென்பஞ்சு
கால் கொண்டு
என் வயிற்றில் நீ தந்த
முதல் உதைதனை
நானுணர்ந்ததுக்கு ஈடாகுமா??!!



என்னுள் வளரும் இளம்பூவே..!
உனை உணர்ந்த கணத்தில் தான்
நான் முழுதாகினேன் கண்ணே...!!

__________________
-- பூமகள்.

Thursday, June 25, 2009

சர்தார்ஜியுடன் ஓர் பயணம்..!


வெளி நாட்டு வாழ்க்கையின் எல்லா வித சாதக பாதகங்களும் ஓரளவு அறியப் பெற்ற நாட்களின் ஓர் நாளின் பின் மாலைப் பொழுதில் இரவுணவு முடித்துவிட்டு டாக்சி ஏறி அமர்ந்தோம்.

அது வரை வேற்று நாட்டு முகங்களையே ஓட்டுனர் இருக்கையில் பார்த்தும், புரியாத பெயர் கொண்டு ஒட்டப்பட்ட அடையாள அட்டை கொண்ட காரின் முன் கண்ணாடியும், புரியாத மொழியில் இரைச்சல் பாடல் கேட்டும், அரைகுறை ஆங்கிலம் பேசும் ஓட்டுனரையுமே பார்த்துப் பயணப்பட்ட எனக்கு அன்று வித்தியாசமான அனுபவம்...

ஆம்.. எப்போதுமே டாக்சி ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெயரைப் பார்த்துப் படித்துக் கொள்வது.. ஏறி அமர்ந்த உடனேயே அழகிய ஆங்கிலத்தில் இயல்பாக பேசும் அந்த வயதான ஓட்டுனரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்..

பின் பெயரைப் பார்த்ததும் மேலும் ஆச்சர்யம்.. சுக்வந்தர் சிங்.. ஆஹா.. இந்தியர் ஒருவரின் காரில் பயணப்படும் முதல் பயணம் இது என்று மனம் குதூகளித்தது.. ஆனால், சிங்குக்கான தலைப்பாகையும் தாடி மீசையும் இல்லாமல் சாதாரண மனிதர் போலவே இருந்தது மேலும் பல்மடங்கு ஆச்சர்யத்தை அளித்தது..

மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.. என்னவரோடு உரையாடிய உரையாடல், அவர்கள் பற்றி "அபியும் நானும்" படத்தில் தலைவாசல் விஜய் பிரகாஷ்ராஜுக்கு சொல்கையில் பிரகாஷ் ராஜ் கொடுக்கும் ஆச்சர்ய முக பாவமே எனக்கும் பயணம் முழுதும் ஏற்பட்டது..

அவரோடு உரையாடியதிலிருந்து என் நினைவில் இருக்கும் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்..

பேச்சு முதலில் பரஸ்பர ஆரம்பம், இந்த நாடு பிடித்திருக்கிறதா?? எத்தனை ஆண்டுகள் இங்கு இருக்கிறீர்கள்?? என்று வரிசையாக கேட்டு பதில் பெற்ற ஓட்டுனர் அவரே அவர் பற்றி பல தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்..

சில காலம் இந்தியாவின் சென்னையில் தங்கியிருந்ததாகவும்.. அங்கே சாலை விதிகளையும், சிக்னல்களையும் மதித்து நடக்காத மக்களின் போக்கையும் நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பில் ஆழ்த்தினார்..

இவரின் அன்றாட பொழுதுபோக்கு, தினமும் சைக்கிளில் சென்று சென்னையில் ஏதேனும் ஒரு ட் ராப்பிக் சிக்னல் இருக்கும் இடத்தில் நின்று அங்கு பணி செய்யும் டிராப்பிக் போலீஸையும் மக்களின் போக்கையும் படம் பிடித்து வேடிக்கை பார்ப்பது என்று சொன்னார்..

இன்கிரிடிபில் இந்தியா என்று நகைச்சுவை பொங்க சொன்னார்... என்ன தான் வெளி நாடு ஆயினும் நம்ம நாடு போல வருமா?? எத்தனை மகிழ்ச்சிகரமான இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடு.. இங்கு எங்கு திரும்பினாலும் வணிக வளாகங்கள் தானே?? என்று கேட்டு நம் துக்கத்தில் பங்கெடுத்தார்..

பின்னர் அவரின் அழகிய ஆங்கிலப் பேச்சுக்காண காரணம் புரிந்தது.. கொஞ்ச காலம் அமெரிக்காவில் டாக்சி ஓட்டி வந்ததாகவும், போர் அடித்ததால் இங்கு வந்து சில வருடம் ஆகிறதென்றும் சொன்னார்..

இந்த நாட்டில் இந்தியர்கள் வந்து படும் பாடு பற்றி சொன்னார்.. அத்தனையும் நிஜமென்றே ஆமோதிக்கும் படி இருந்தது.. திரைகடல் ஓடி திரவியம் தேட வரும் நம்மவர்கள் வந்ததும் இங்கு தங்கும் செலவுக்கே பாதிக்கும் மேல் வருமானத்தை இழந்து தவிக்கும் போக்கைப் பற்றி வருத்ததோடு விளக்கினார்..

சென்னையில் தனக்கு அடையாரில் சொந்தமாக வீடு இருப்பதாகவும், அதை யாரோ ஒருவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.. ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட அவருக்கு அளிக்கப்பட்ட யோசனையை நகைச்சுவை பொங்க கூறியது தான் உச்சம்..

இவரது நண்பர் ஒருவர், ரவுடி கும்பலுக்கு பணத்தைக் கொடுத்து சொத்தை மீட்டுவிடலாம் என்று சொல்ல, மற்றொருவரோ, பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் பெயர் சொல்லி அவரைச் சந்திக்க கூட்டிச் செல்வதாக சொல்லியிருக்கிறார்.. மற்றுமொருவர், அந்த தலைவரின் மகனைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்..

இவற்றுக்கெல்லாம் இவர் அளித்த பதில் தான் பெரும் காமெடி..

தாதா கும்பலுக்கு பணம் கொடுத்தால் கொஞ்ச பணம் போகும்..
தலைவரின் மகனைச் சந்தித்தால் பாதி சொத்து போகும்..

தலைவரைச் சந்தித்தாலோ முழு சொத்துமே போகுமே என்று சொல்லிச் சிரித்தார்.. அதில் இருக்கும் உண்மை உறைத்தது..

இறுதியில் நேர்மையாகவே போராடுவோம் என்று வழக்கு தொடுத்து, பல வருடங்களாக சிவில் கேஸ் நீதிமன்றத்தில் நடப்பதாகச் சொன்னார்..

அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடவே, மேலும் பேசும் ஆவல் இருந்தும் ப்ரியாவிடை பெற்றோம்..

அத்துணை நேரம் பேசிய பேச்சிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் விளங்கியது..

சர்தார்ஜிக்கள் உண்மையிலேயே மிக அதிக தைரியமும் அறிவுக் கூர்மையும் நிறைந்தவர்கள்... அவர்களின் தொலை நோக்குப் பார்வையும் ஒரு விசயத்தை ஆராயும் போக்கும் உண்மையிலேயே வியக்க வைத்தது..

இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்துக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செக்குயூரிட்டியாக நிற்கும் சர்தார்ஜி தாத்தாவைத் தாமாகவே என் கண்கள் தேடுகிறது.. எந்த சர்தார்ஜியை வழியில் பார்த்தாலும் பெருமை கொள்கிறது மனம்..!

Saturday, May 16, 2009

யாமம் - நாவல் விமர்சனம்

"யாமம்" - நாவல் விமர்சனம்

- ஒரு வரலாற்றுச் சமூக நாவல்
நூலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 225/- ரூபாய்.



எஸ்.ரா அவர்களின் எழுத்துகளின் வீரியமும் ஆழமும் அறியப்பெற்ற பின் அவரின் அனைத்து படைப்புகளையும் படிக்கும் முனைப்பு மெல்ல மெல்ல என்னில் வேர்விடத் துவங்கியிருக்கிறது.

அவ்வகையில் இது அவரின் படைப்பில் நான் படிக்கும் மூன்றாவது புத்தகம். "நடந்து செல்லும் நீரூற்று", "ஏழுதலை நகரம்" என்ற இரு புத்தகங்களும் முதன் முதலில் நான் படித்த அவரின் புத்தகங்கள்.

யாமம் இவ்விரு புத்தகங்களிலிருந்தும் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அது கொண்ட குறு பின் அட்டை விளக்க உரையே விளக்கியது.

"நடந்து செல்லும் நீரூற்று" - எஸ்.ரா அவர்களின் எதார்த்த வாழ்வின் முகங்களைக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு.

"ஏழுதலை நகரம்" - குட்டீஸ் விகடனில் வெளியான குழந்தைகளுக்கான மாயஜாலக் கற்பனை நகர் பற்றிய கதை.

இவ்விரு புத்தகங்களுமே என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. ஆயினும் அவற்றுக்கெல்லாம் விமர்சனம் எழுத ஏனோ என்னுள் தைரியம் இல்லாமல் இருந்தது. காரணம், அவரின் அத்தனை வலிமையான எழுத்தாளுமை.

ஆனாலும், நல்லப் புத்தக வாசிப்பு ஒரு சிறந்த நண்பருடன் உரையாடுவதை விட எனக்கு அதிக மனத் தெளிவைத் தந்துவருவதும் உணர்ந்த ஒன்று.

தனிமைக் கதவுகள் தாழிட்ட போதிலும்.. என்னைக் கற்பனையில் பிரபஞ்சம் அளக்கச் செய்பவை புத்தகங்களே.

அவ்வகையில் யாமம் பற்றிய என் உணர்வுகளையும் விமர்சனத்தையும் வழங்க நான் கடமைப்பட்டவளாகிறேன்.

யாமம் என்ற நாவல், புரியாத புதிர் போல மெல்ல மெல்ல நம் முன் விவரிக்கப் படுகிறது. வெவ்வேறு கிளைகள் பரப்பி அதன் மாட்சிமையை பிரம்மிக்கச் செய்கிறது.

யாமம் என்ற நாவலின் கதைக் களம் நான்கில் மூன்று பாகம், சென்னை என்றழைக்கப்படும் பண்டைய மதராப் பட்டிணத்தைச் சுற்றியே அமைந்திருக்கிறது. கப்பலில் வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயர் வசம் எப்படி மதராப்பட்டிணம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் குழைத்துக் கொண்டது என்பதை கற்பனையும் எதார்த்தமும் சரிவிகிதத்தில் கலந்தளித்து நம்மை எதார்த்ததைப் பிரித்தறிய இயலாதபடி அமைந்திருக்கிறது கதை.

நாவலின் மாட்சிமை பல கிளைகளோடு அமைந்திருந்தாலும், அதன் முக்கிய பாத்திரங்கள் நம் பயணமெங்கும் சரி விகிதத்தில் பங்கெடுக்கின்றனர்.

அவர்கள், அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவப் பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், யாமம் என்ற அர்த்தர்(வாசனைத் திரவியம்) மூலம் ஒருங்கே கூடி நம் நெஞ்சில் வாசத்தைப் பரப்புகிறார்கள்.

அந்த அர்த்தரின் காண இயலாத வாசனை போலவே இந்த நால்வரின் வாழ்க்கையும் பல புலப்படா சூட்சுமங்கள் நிறைந்து எவ்வகையில் முடிவுக்கு வருகிறது என்பதில் நாவல் எதார்த்தத்தைப் பின்னியிருக்கிறது.

ஆங்காங்கே,கரீம் கனவில் வரும் பக்கீர் என்ற மூதாதையரின் இரவுக்கும் கடலுக்குமான கேள்விகளும், விடைகளும் நம்மையும் ஆழ்ந்த சிந்தையில் ஆழ்த்துகின்றன. நாவலின் மிகச் சிறப்பான பகுதியாக இவைகளை நான் சொல்வேன்.

கரீம் கனவில் காணும் பக்கீர் அவருக்கு வழிகாட்டுவதும், "யாமம்" என்ற வாசனைத் திரவியம் மூலம் பெரும் செல்வந்தர் ஆவதும், அவரின் மூன்று மனைவிகளான சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகியோரை விட்டுப் பிரிந்து சென்ற பின் ஏற்படும் அந்த அபலை மனைவிகளின் நிலையும் நெஞ்சில் நீங்காமல் ஓர் இடம் பிடிக்கின்றன. கரீமின் குடும்பத்தோடு எல்லா நேரங்களிலும் அருகிருக்கும் சந்தீபா என்ற ஏழைச் சிறுவனின் குணம், அவனின் ஓர் நாளைய கனவு என நாவலின் நகைச்சுவைப் பகுதியும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.

தன் சொத்துக்கள் தமக்கே கிட்டவேண்டுமென்று போராடும் கிருஷ்ணப்ப கரையாளர், அவரின் அற்புத மனமாற்றத்துக்கு காரணமான மேல்மலையின் வனப்பு, அவரின் ஒரே சொத்தான மேல்மலையையும் யாரோ ஒரு விலைமகளான எலிசபத் என்ற ஆங்கியேய மங்கைக்குப் பெயர்மாற்றும் கரையாளர் குணம் என்று பிரம்மிக்க வைக்கும் இடங்கள் அதிகம். மேல்மலையைப் பற்றிய விவரிப்புகளும், வர்ணனைகளும் நம்மையும் மேல்மலையில் சில காலம் தங்கவைத்த உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

திருச்சிற்றம்பலம் என்ற அன்பும், பண்பும், அறிவும் நிரம்பிய தம்பி, அவரின் அன்பிற்கு அருகதையாகாத செயலைச் செய்த பின் வருந்தும் ஓர் அண்ணாக பத்ரகிரி, அவன் மனைவி விசாலா, திருச்சிற்றம்பலத்தின் ஆற்றலைப் புரிந்து கொண்டாலும், உடலாலும், மனதாலும் முதிராத அவன் மனைவி தையல். இவர்களின் தவறுகளும், அதற்கான தண்டனைகளும் மிகச் சிறப்பாகக் கதையில் கையாளப்பட்டிருக்கின்றன.திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம், பெருமை கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. உல்லாசக் களிப்பிற்காகவே ஏங்கும் திருச்சிற்றம்பலத்தின் நண்பனாக வரும் சற்குணம், பின் எப்படியெல்லாம் பண்படுத்தப்படுகிறார் என்று நாவல் மிக அழகாக விவரித்திருக்கிறது. சற்குணத்தின் முடிவு மட்டும் எழுதப்படமாலே வாசகர் யூகத்துக்கு விட்டுவிடப்பட்டிருக்கிறது.

சதாசிவப்பண்டாரம் என்ற பண்டாரத்தின் வாழ்க்கை மாற்றம், அவரில் தோன்றும் மனிதருக்கான இச்சைகள், திரு நீலகண்டம் என்று தாமே பெயரிட்டு அழைக்கும் ஒரு நாயின் வழியில் தன்னைச் செலுத்தி இறுதியில் முடிவென்ன என்று நம்மைக் காக்கச் செய்த விதம் என்று நாவலில் அனைத்தும் அருமை. இவரின் செயல்பாடுகளும், அதற்கான நாயின் கண் கவனிப்புமே பதிலாக்கி வாசகருக்குப் புரிவித்திருப்பது சிறப்பானது.

ஆக, இவ்வெல்லாப் பாத்திரங்கள் மூலமும் வரலாற்றுச் சான்றுகளை ஆங்காங்கே விவரித்ததோடு, மனித வாழ்க்கையின் எதார்த்த மீறல்களும், அதற்கான எதிர்மறை விளைவுகளையும் தெளிவாக்கியிருப்பது சிறப்பு.

எஸ்,ரா அவர்களின் மற்ற நாவல்கள் பற்றி நானறியேன். ஆயினும், இந்நாவல் படித்து, இரு நாட்களுக்கு என்னுள் இக்கதை மாந்தர்கள் இரவில் யாமம் என்ற வாசனைத் திரவியத்தோடு என்னைச் சூழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

எஸ்.ரா அவர்களின் இப்புத்தகம், நிச்சயம் பலரின் மனதிலும் அடர்ந்த வாசத்தை ஏற்படுத்தத் தவறாது.


$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, April 30, 2009

வெயில் கவிதைகள் - 2

நெருஞ்சிக் காட்டு
ஒற்றையடிப் பாதை முள்ளும்..

கோயில் தொடும்
கல் வழிப் பாதை கூர்மையும்..

பதம் பார்க்கும் குதியை
தன் கரங்களால்
பொடித் துகள்களாகச்
சுட்டுக் கொண்டிருந்தான்
துணையாக வந்த
வெப்பக் கதிரோன்..!!

வெயில் கவிதைகள் - 1

அலைந்து திரிந்து
பசித்த மதியத்தில்..
உச்சிக் கதிர்கள்
உச்சி வகிடு வழி
வழியத் துவங்கியிருக்கும்..

எப்போதும் நிற்கும்
மரத்தடி நிழலின்
புழுது படிந்த இலைகளின்
வடிகட்டிய குளுமை
வெப்பக் காற்றோடு
ஈர முதுகு சில்லிக்க வைக்கும்..

ஓரமாய் பானையோடு
கம்பங்கூல் தாத்தாவும்..
அவர் கொண்ட சுத்தமான
ஆறுவகை வற்றல் குவியல்களும்..

நினைவில் எழுந்து
நாவின் நீர் சுரப்பிக்க..
காத்துக் கொண்டிருக்கிறேன்..
அடுத்த வருட
வெயில் காலத்துக்காக...!!
__________________
-- பூமகள்.

Wednesday, April 29, 2009

மொட்டை மாடியும் சில இரவுகளும்...!!



"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம், அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது"

"இரெவென்னும் வினோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை."


- "யாமம்" நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்

கவிந்து,சூழ்ந்து, எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் ஆழ்ந்த இரவு ஒவ்வொரு முறையும் புதிய வடிவத்தில் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன..

அத்தகைய இரவுக்கும் எனக்குமான பந்ததுக்கு உற்ற துணையாக இருந்தது என் வீட்டு மொட்டை மாடி
("வெற்றுத் தளம்" என்று மொழி பெயர்க்கலாம் தானே?)யும் அது அளந்து கொண்டிருந்த வான்வெளியும்..

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மண்டை பிளக்கும் வெயிலுடன் ஒரு மதியப் பொழுதில் என் முதல் வெற்றுத் தள அறிமுகம் அமையப் பெற்றது..

மூன்று அடுக்கு வீட்டின் மேல் தட்டுக்கு தட்டுத் தடுமாறி கைபிடியற்ற படியேறி சாகசம் மேற்கொண்டு, நின்று முதன் முதலாக எல்லாக் கோணத்திலும் எங்கள் ஊரை நோட்டம் விடுகையில் அருகிருந்த தென்னை மரத்தில் சுனாமிக் காற்று தாக்குதல் திக்குமுக்காடச் செய்தது..

என்னை கைபிடி சுவரற்ற தளத்திலிருந்து கீழே சாய்க்கும் முனைப்போடு தொடர்ந்து புயல் காற்று அடித்துக் கொண்டிருக்க நடுக்கத்தோடே இறங்கினேன்.. முதன் முதலில் காதலன் விரல் பிடித்த காதலியிடம் ஏற்படும் நடுக்கம் போல அந்த நடுக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது... அதன் பின் எனக்கு அந்த மூன்றாவது வெற்றுத் தளம் ஒரு அதிபயங்கர மரணக் குகை போலவே தோன்றியது...

இரவுகளும் அது கொண்ட ரகசியங்களும் எப்போதும் அதன் வழியில் சென்று கொண்டே இருக்க காலம் நகர்ந்து கொண்டே இருந்தது..

(இரவுகளின் வாசனைகள் தொடரும்...)

Monday, April 13, 2009

அயன் - திரை விமர்சனம்

வாரணம் ஆயிரம் படத்துக்கு அடுத்ததாக சூர்யா நடித்து வெளிவந்திருக்கும் படம் அயன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு அயன் பார்க்க ஆர்ப்பாட்டம் செய்து எப்படியோ நேற்று பார்த்தே விட்டேன்..

சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் அதிரடி திரைப்படமாக வந்திருக்கிறது.

பத்து நிமிட தாமதத்தில் சென்றதால் சில காட்சிகள் எங்கள் கண் படாமல் தப்பி விட்டிருந்தன.. வருத்தத்தோடு அமர்ந்து பார்க்கத் துவங்கினால் சூர்யாவின் தாய் சூர்யாவுக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டி திட்டு மழை பொழியத் துவங்கியிருந்தார்..

தப்பி ஓடிய சூர்யா தொடர்ந்து பாடத்துவங்கினார்.. "பளபளக்கும்....." என்று ஏதோ ஒரு பாடல் குத்தாட்டத்தோடு திரையை நிறைக்கிறது..

தேவா(சூர்யா), சிட்டி இரு நண்பர்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் தொடர்ந்து பறந்த வண்ணமே இருக்கின்றனர்.. எதற்காக சுற்றுகிறார்கள்.. ஏன் சுற்றுகிறார்கள்.. என்று அடுத்தடுத்தக் காட்சிகளில் முடிச்சி அவிழ்கிறது..

பிரபுவுக்காக வேலை செய்யும் தேவா, அவன் தோழன் சிட்டி, உடன் வேலை பார்க்கும் கருணாஸ் இப்படி ஒரு பெரும் படை செய்யும் வேலையோ அன்டர் வேல்ட் தொழில்..

எதிரியாக வரும் ஹிந்தி பேசும் குடும்பத்து பையன் மிரள வைத்திருக்கிறார்.. பாடி லேங்குவேஜும் அவரின் தலை அலங்காரமும் அதிர வைக்கிறது..

தமன்னா அவ்வப்போது வந்து தமது பாடல்க் காட்சி நடனங்களைச் செவ்வனே செய்து சென்றிருக்கிறார்.. தமன்னா, நடிப்பு... அப்படின்னா என்று இன்னும் கேட்கும் நிலையில் இருப்பது வேதனை + வேடிக்கை..

ஆனால், ஒரு பாடல் கூட படம் விட்டு வெளிப்படுகையில் நினைவில்லை...

காதல் வசனங்கள் ஒன்று கூட மனம் தொடும்படி இல்லை.. பெரும் ஏமாற்றத்தை பக்கத்தில் நெளிந்து கொண்டே படம் பார்ப்போரைக் காணுகையில் உணர்ந்தேன்..

ஒரு எதிர்மறை வாழ்க்கைச் சூழலில் சிக்கிக் கொண்டு திறமையாக சாதிக்கும் இளைஞனாக வரும் சூர்யா, பொன் வண்ணனிடம் மாட்டிக் கொண்ட பின் வரும் காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார்.. பொன்வண்ணன், வழக்கம் போல் தன் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்..

தேவையற்ற இடங்களில் இரைச்சலான ஆடைக்குறைப்பு பாடல்கள்...

மனம் குமையச் செய்யும் வன்முறைக் காட்சிகள்..

அழுத்தமே இல்லாத வசனங்கள்...

ஆழப் பதியாத பாடல் இசை..

இவையனைத்தும் சேர்ந்து படம் விட்டு வெளிப்படுகையில் தலைவலியை உடன் அழைத்து வர வைத்துவிட்டன.

நிறைய இடங்களில் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தேன்... அத்தனை வன்முறைக் காட்சிகள்..

உங்கள் இதயம் பூப் போன்ற மென்மையானதெனில்... இப்படம் உங்களுக்கான படம் அல்ல..

ஆக்சன், த்ரில்லர் எல்லாம் இருந்தும்... குமட்டுமளவுக்காக காட்சிகள் இருப்பதால் பெண்களும் குழந்தைகளும் பார்க்காமல் இருப்பதே நலமெனக் கருதுகிறேன்..

சூர்யா சிக்ஸ் பேக்கில் வந்து இளமையைக் காட்ட முனைந்திருந்தாலும்.. கன்னம் வற்றி பார்க்க ஏனோ அழகாகவே இல்லை..

இப்படியான கதைகளை இனி சூர்யா தொடர்ந்து ஒப்புக் கொள்வாரேயானால்.. விஜய் வரிசையில் இவரையும் மசாலாப் படம் பண்ணுபவர் லிஸ்டில் சேர்க்க வேண்டியிருக்கும்..

படத்தின் பலம்.. வித்தியாசமான நாடுகளில் எடுக்கப்பட்ட அதிரடி காட்சியமைப்புகள்..

ஏவிஎம் இவ்வகை படம் எடுத்து ஏன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டதென்று வருத்தப்பட்டேன்..

படம் பார்த்ததும் நான் எடுத்த ஒரு தீர்க்கமான முடிவு..

இனி டைரக்டர் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் இவர்கள் படம் மட்டுமே பார்ப்பது..!

நல்ல படமென எல்லாரும் சொன்ன பின் மட்டுமே ஒரு படத்தைப் பார்ப்பது...!

ஆக மொத்தம்.. அயன்... உங்களின் தலையை அயன் செய்து தலைவலியை உண்டாக்கிவிடும் என்பது மட்டும் திண்ணம்..

தப்பிச்சிக்கோங்க மக்களே....!!
__________________
-- பூமகள்.

Friday, March 27, 2009

பூமி மணித்துளி(Earth Hour)

பூமி மணித்துளி(Earth Hour)


மனித இனத்தின் மகத்தான விஞ்ஞான வளர்ச்சியினால் பூமிக்கு உண்டாகும் கலக்கம் கொஞ்ச நஞ்சமல்ல...


அண்டார்ட்டிக் பனி உருகுதல் முதல்... ஓசோன் ஓட்டை வரை நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்...


அத்தகைய பாதகத்தை ஒரு மணி நேரமாவது நிறுத்தி கொஞ்சம் பூமியை ஆசுவாசமாக மூச்சுவிட வைத்து அதன் இயல்பில் இருக்க வைக்கும் நோக்கத்தோடும் பூமியின் மேல் மனித இனத்தின் மாசுக்கேட்டை உணர்த்தும் வகையிலும் இந்த பூமி மணித்துளி அனுசரிக்கப்படுகிறது.


இதனை "World WildLife Fund" என்ற அமைப்பு உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தனி நபரையும், வியாபாரிகளையும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களையும் பூமி மணித்துளியை அனுசரிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.


பூமி மணித்துளியின் நோக்கம் - பூமியின் மீது உண்டாகிவரும் தட்ப வெப்ப நிலை மாற்றத்தையும் அதற்கான தீர்வு காணும் உத்வேகத்தையும் உலகளவில் உருவாக்க வேண்டுமென்பதே.


இவ்வருடம், மார்ச் 28 ஆம் தேதி, இரவு 8.30 மணி அமெரிக்க நேரப்படி இந்த பூமி மணித்துளி நேரமாக அனுசரிக்க இருக்கிறார்கள்.



அப்போது ஒரு மணி நேரம் பூமியில் உள்ள அனைவரும் மின்சாரத்தை நிறுத்தி எர்த் ஹவரை அனுசரிக்க வேண்டுமென சொல்கிறார்கள்.


ஆனா இது இந்தியாவுக்கு பொருந்தாது.. நாம தான் தினம் தினம் ஒரு நாலு மணி நேரமாவது இந்த எர்த் ஹவரை அனுசரிச்சிட்டு இருக்கோமே...!!


இன்னும் மின்சார வெளிச்சத்தையே காணாத ஏழை நாடுகளுக்கும் இவை பொருந்தாது.. பொருந்தும் நாள் விரைவில் வர வேண்டுமென்பதே என் பிராத்தனைகள்.


நல்ல விசயமாகபடவே.... நான் தயாராகிவிட்டேன்... அப்போ நீங்க??!!

Thursday, March 26, 2009

விஷமாகும் விளம்பரமும் தடுமாறும் குழந்தை மனமும்..!


கடந்த சில நாட்களாக ஒரு விளம்பரத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது...

கொஞ்சம் அதிர்ந்து போன நான் இது பற்றி எழுதியே ஆக வேண்டுமென்று தோன்றவே என் இப்பதிவு...

ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையிடம் வந்து "அப்பா... நான் அழகா இருக்கனா?"

அப்பா, "நீ ரொம்ப அழகா இருக்கம்மா... "

குழந்தை உடனே, "பின்னே ஏன் ஸ்கூல்ல யாருமே என் கிட்ட பேச மாட்டீராங்க..."

உடனே தந்தை ஒரு புது காரில் தன் மகளை ஏற்றி பள்ளிக்கு வருகிறார்.. வழியில் போகும் சிறார் எல்லாம் அக்குழந்தையைப் பார்க்க...

பள்ளியில் இறங்கும் குழந்தை பெருமிதத்துடன் இறங்குகிறது... அருகில் வர பல சிறுவர், சிறுமியர் வட்டமிடத் துவங்குவர்...

ஒரு பெரிய கார் நிறுவனத்தின் இம்மாதிரியான விளம்பரம் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனேன்..

எல்.கே.ஜிக்கு செல்லும் குழந்தைகளிடமே இவ்வகை பணக்கார மோகத்தை உருவாக்கி அவர்களின் சமத்துவத்தை பறிக்கும் நிலையாக இதைக் கருதுகிறேன்...

கார் இருந்தால் தான் மதிப்பார்கள்... என்ற பெருமிதம் கலந்த கர்வத்தை தவறாக சிறு வயதிலேயே வளர்க்க அனுமதிக்கும் செயலாகவே இதனை நான் கருதுகிறேன்..

அப்படியெனில் பள்ளிக்கு வரும் மற்ற கார் இல்லாத குழந்தைகளின் மன நிலை???


எங்கே சென்று கொண்டிருக்கிறோம்...

விதைகள் வெம்பும் முன் காத்தல் நம் கடமையல்லவா??

சிந்திப்போமா இனியேனும்...????!!

Thursday, March 12, 2009

இது நியாயமா??!!


இது நியாயமா?


என் எல்லா சொற்களையும்

உன் கன்னக்குழியில்

புதைத்துவிட்டு

மீண்டும் மீண்டும்

சொல்லச் சொல்கிறாயே..


இது நியாயமா??!!


இதயச் சிறையில்

இன்பமாய் அமர்ந்து

நிதம் எனை

சிறையிலடைக்கிறாயே..


இது நியாயமா??!!


நான் பார்க்கையில்

நீ பாராமல்

நான் பாராமல்

எனைப் பார்க்கிறாயே..


இது நியாயமா??!!


இப்பிறவி முக்தியாகுமென

நீ சிலாகிக்க..

ஏழு பிறவியும் போதாதென

எண்ண வைக்கிறாயே...


இது நியாயமா??!!



Monday, March 9, 2009

தேன் கூட்டில் ஓர் நாள்...!

ஒரு பெரிச வாசல்.. அதன் முற்றமெங்கும் அலங்கார தோரணங்கள்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள்.. எதையோ தீவிரமாக செய்யும் முனைப்பில்..

மிகப் பெரிய கதவின் முன்னால், ஓர் காக்கி உடுப்பு பணியாளர்.. பவ்வியமாக சிரித்து வணங்குகிறார்.. வண்டி நிறுத்திய இருவர்.. விவரம் பகிர்ந்து உள்ளே நுழைகின்றனர்..

வலப்புற அலுவலகம் நோக்கி அகக்காவல் பணியாளர் கை காட்டிய திசையில் நான்கு கால்களும் விரைகிறது..!!

மெல்லிய புன்னகையோடு ஒரு பெண் பொறுப்பாளர் வரவேற்கிறார்… அமரச் செய்து.. வருவதாகக் கூறி செல்கிறார்.

அமைதியான அந்த சின்ன அறையில்.. நான்கு விழிகளும் துலாவுகின்றன.. சுவர்களில் காட்டிய சித்திரங்கள்.. அறிவியலாளர் அப்துல் கலாம் முதல் முதல்வர் கருணாநிதி வரை வருகை தந்தமையைப் பறைசாற்றுகின்றன.. மனம் நெகிழ்ந்து அவர்களின் கண்கள் விரிகிறது..

சிறிது நேரத்தில் அப்பெண் வந்தமர்கிறார்.. “இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்ப ரெடியாயிருங்க..” என்ற ஒரு வாக்கியம் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சிறிது நேரத்தில் சமிஞை வர கிளம்புகிறார்கள் இருவரும்..!!

ஒரு பெரிய அறையினை நோக்கி பயணப்படுகிறது.. அங்கே பொறுப்பாளர்களில் முக்கியமானவர்.. இருவரையும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் அமரச் செய்கிறார்.

எதிரில் ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம்.. வரிசையாக அமர்ந்து சிரித்து, சிணுங்கி, எங்கோ பார்த்து பயந்து, தலை குனிந்து.. தலை நிமிர்ந்து… பக்கத்திலிருப்பவரைப் பார்த்து.. இப்படி பல விதங்களில் குழந்தைகள்..!!

மாலை 6.30 மணி ஆகியிருந்தது.. பொறுப்பாளர்.. கடவுள் வாழ்த்து பாடச் சொல்கிறார். அனைவரும் எழுந்து நிற்க..

அனைத்து விதமான புல்லாங்குழல்களும் ஒருங்கே எல்லா ராகத்தையும் வாசித்தால் என்ன சங்கீதம் பிறக்குமோ.. அவ்வகை சங்கீதம் இருவரின் காதுகளையும் அடைமழை அமுதமாக நுழைகிறது.

கண் மூடி நின்று பிஞ்சுகளுக்காக பிராத்தித்து விழிக்கையில்.. இருவரின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது.. அங்கே… உடல் குறைபாட்டினால் மனம் குறைபடாத குழந்தைகள்..

பாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளில்..

தனக்கென சுதி அமைத்த குழந்தைகள்.. பாடுவோரை வேடிக்கை பார்த்தபடியே.. மௌனத்தில் இசையமைத்த குழந்தைகள்.. இப்படி ஒவ்வொரு வடிவில்.. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள்..!

பிராத்தனை முடிந்ததும்.. பொறுப்பாளர் பேச ஆரம்பிக்கிறார்.

“திருவாளர் பெயர் கூறி, அவர்களின் இனிய உள்ளத்தால் இன்று நமக்கு இவ்வேளை உணவு பறிமாறப்படுகிறது. அவர்களின் குடும்பமும் அவர்களும் என்றும் வளமோடு வாழ பிராத்திப்போம்..!”

இப்படி கூறியதும்.. மறுபடி வானை எட்டும் குரலோசையில்.. வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது..!! மெல்லிய குயில்களுக்குள் இத்தனை வலிமையா??!!

பார்த்துக் கொண்டிருந்த இருவரின் மனமும்.. ததும்பி பரவச நிலையில் உடல் சிலிர்த்து நிற்கிறது.

அதுவரைக் கண்டிராத ஓர் உன்னத நிலையில்.. குழந்தைகளின் மொழி கேட்டு கற்பாறை உடைந்து கண்கள் கலங்குகிறது. பாடுவது நமக்காக என்ற பெருமிதத்தில் அல்ல.. பாடப்படும் அக்குழந்தைகளின் உள்ளதினைக் கண்டு..!!

பொறுப்பாளர் பேச அழைக்கிறார். இவருவருமே வார்த்தைகளற்ற மௌன நிலையில் அசைவற்று நிற்க.. அங்கே 'நா' எழ மறுத்து அழ வைக்கிறது.

தலையசைத்து இருவரும் மறுக்க, பிராத்தனை முடிக்கப்படுகிறது.

“ அக்கா… உங்க பேரு என்னக்கா??” ஓடி வந்து கை கொடுக்கும் ஆவலோடு சின்ன சின்ன மழலை முத்துகள்..!!

“என் பேரு… ****** உங்க பேரு என்ன? என்ன படிக்கிறீங்க??” இருவரில் ஒருவர் கேட்க.. கை பிடித்து குலுக்கிய மகிழ்ச்சியில்.. மழலை கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

முறைத்த படியே சில குழந்தைகள்… பார்த்து பயந்தபடியே சில குழந்தைகள்:.. அழகாக சிரித்து பேச விரும்பிய சில குழந்தைகள்.. இன்முகத்துக்கு பூட்டிட்டு.. சலிப்புப் பார்வையில் சில பிஞ்சுகள்..!!

அப்பப்பா.. எத்தனை எத்தனை பரிதவிப்புகள் ஒவ்வொருவர் முகத்திலும்..??!!

இருவர் உள்ளமும் இனம் புரியாத புதிய உணர்வில் சிலிர்ந்து நிற்கிறது..

இரவுணவு பரிமாற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரிசையாக குழந்தைகள் தட்டெடுத்துக் கொண்டு அமர்கிறார்கள்.. . நம் கையால் பரிமாறி, பிஞ்சுகள் உண்பதைப் பார்க்க கண் கோடி வேண்டும்.. அத்தகையதொரு பரவச உணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் இன்முகம் மாறாமல் “லட்டு” இனிப்பு இருவராலும் பரிமாறப்படுகிறது.

ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாக அமர்ந்து மலர் வனத்தில் தேனமுதை உண்பதைப் போல ஒரு தோற்றம்..!!

இரு முதிய பாட்டிகள்..!! அவள் பார்க்க.. கண்கள் அறியாமலே கலங்கி நிற்கிறது. குழந்தைகளும் முதியவரும் ஒன்றே தான்..!!

பரிமாறி முடிந்ததும்.. சுற்றிக் காட்டப் படுகிறது..!! அழகிய வகுப்பறைகள்.. பூச்செடிகள்.. கிளிகள்… படுக்கை அறைகள்..

எல்லாம் கடந்து அவர்களின் அன்பான மனம்.. எதையெதையோ சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருந்தது.

விடைபெற்று கிளம்புகின்றனர்.. இருவரும்..!!

போக மனம் இல்லாவிடினும்.. பயணம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

முற்றத்தில் அழகிய வண்ணக்கோலம் போடத் தயாராகும் பெண்கள்..!! ஏற்கனவே, வண்ண எண்ணங்களால் மனம் நெகிழ்ந்த இருவரும்.. மகிழ்ச்சியோடும் ஒரு வித துயரம் அப்பிய கணத்த மனத்தோடும் வெளிப்படுகின்றனர்.

நேரம் 7.30.. மணி…

ஒரு மணி நேரப் பயணத்தின் போதும்.. ஒன்றுமே பேசாமல் அந்தி வானம் பார்த்தபடியே பயணம் தொடர்கிறது.

கீழ்வானத்தில் சூரியன் உறங்க… விழிப்பு நிலையில் மனத்தினுள் மனசாட்சி ஓங்கி பேசியபடியே வந்தது..!!

உடம்பை உரசிய தென்றல் காற்று… மனத்தினுள் சுகந்த உணர்வையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!

குழந்தைகள் காப்பகத்திலிருந்து இத்தனை உணர்வையும் ஆட்கொண்ட இருவரும்.. கடைசியில் பூவின் இல்லம் அடைய..

அது வரை நிகழ்ந்த அத்தனையும் அம்மாவிடம் ஒப்புவிக்கும் பூவைப் பார்த்த தந்தை மென்சிரிப்போடு மௌனமாகி ரசிக்கிறார்..!!

(முற்றும்)

--
பூமகள்.

Sunday, March 8, 2009

நேரம்...

நேரங்கள் மட்டுமே
நிரம்பி வழியும்
கோப்பைகளுக்குள்
தத்தளிக்கிறது மனம்..

நிற்கவோ,
நடக்கவோ
நேரமில்லை...

ஓடியபடியே
குடித்துப் போகிறேன்
ஒவ்வொருமுறையும்
நிமிட பானங்களை..

அவதியில் குடித்ததால்
அஜீரணமாகின்றன..
சில கசப்பான பொழுதுகள்..

இருந்தும்
எல்லாரும் போலவே
நிற்காமல் ஓடி
நேர பானத்தைக்
குடித்து வைக்கிறேன்
நானும்...!!

---------------------------
பூமகள்.

ஸ்பரிசம்....

துணை இல்லாமலே

தவிழ்ந்த வயதில்

தாமே எழுந்து நடந்ததை

வியந்து உச்சி முகர்ந்ததிலும்..


ஓடி விளையாடி

களைத்து திரும்பி

முந்தானை வாசத்தில்

தலை சாய்கையில்

சிகை கோதுகையிலும்..


புரியாத உன் பாசம்..

நீ பொக்கை வாயுடன்

முத்தம் கொடுக்கையில்

புரிந்தது என் செல்ல

அம்மாயி..


நீ இல்லாத வீட்டில்

உன் ஸ்பரிசத்தை

உணர

அதே மருதாணி மரத்தை

கட்டியபடி நான்..

__________________

-- பூமகள்.