RSS

Tuesday, May 3, 2011

தோர்(Thor) - திரை விமர்சனம்




நேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்..

படத்தில் அசத்தல் நடிப்பை வெளிக்காட்டினர் அனைவரும்.. படத்தை பத்து நிமிட தாமதத்தில் பார்த்ததால் முதல் சண்டைக் காட்சியைக் காணும் வாய்ப்பை இழந்தேன்.

வெகு நாட்களாகவே எல்லோராலும் பலத்த எதிர்பார்ப்பைக் கொண்ட படம் தோர். இது போன்ற படங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமென்றாலும்.. வன்முறை அதிபயங்கரமாக இருந்ததால் பெரியவர்களே சில இடங்களில் பயப்படலாம்.. நான் சொல்வது வளர்ந்த குழந்தைகளாகவே இருக்கும் பெரியவர்கள்..



வேற்று கிரகத்தில் ஒரு தந்தை அரசராகவும், அவரின் இரு மகன்களும் இருக்க..அரசராகும் வாய்ப்பு இருவருக்கும் இருக்கிறது என்று சொல்கிறார் தந்தை.. கோர முக எதிரி வம்சத்தை அழிக்க தன்னிடம் தந்தை கொடுத்த சக்தியை அவசரப்பட்டு பயன்படுத்தி தன் குழுவோடு எதிரிகள் கிரகம் செல்லும் மூத்த மகனான ஹீரோவும் அவருடன் செல்லும் தம்பி மற்றும் குழுவும் போடும் சண்டை கண்ணுக்கு விருந்து..

மகனை இழக்கும் நிலை வர.. தந்தை வந்து மகனைக் காப்பாற்றி தன் கிரகத்துக்கு உடன் அழைத்துச் சென்று.. அவர் அளித்த பல சக்திகளையும், பல சக்திகளை உள்ளடக்கிய சுத்தியலையும் பிடுங்கி பூமிக்கு எறிகிறார் தந்தை. மகன் சாதாரண மானிடனாக விழ, சுத்தியலோ வேறொரு இடத்தில் மணலில் பதிந்து விடுகிறது.. அதைச் சுற்றி வட்டமாக பெரும் பள்ளவடிவ வளையமே ஏற்பட.. அவ்வழியே வருவோர் போவோர் எல்லாம் வந்து அந்த சுத்தியலை எடுக்க படாத பாடு படுவது நகைக்க வைக்கிறது..



சாதாரண மானிடனாக விழும் நம் ஹீரோ கிரிஸ் ஹேம்ஸ்வொர்த் என்ன பாடு படுகிறார்.. தன் ஹீரோயினியை சந்தித்தாரா.. காதல் வயப்பட்டாரா.. அந்த சுத்தியலை அடைந்தாரா.. கோர முக சிவப்பு கண் எதிரிகளால் அவர் கிரகத்துக்கு வரும் ஆபத்து என்ன.. அதை எப்படி முறியடிக்கிறார்.. கதாநாயகனும் கதாநாயகியும் இறுதியில் சேர்ந்தார்களா.. என்பவற்றை திரையில் கண்டால் தான் சுவைகரமாக இருக்குமென்பதால் கதைச் சுருக்கத்தை இதோடு முடிக்கிறேன்.. இனி விமர்சனத்துக்கு வருகிறேன்..

ஒற்றைக் கண் அரசரான தந்தையாக வரும் நடிகர் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் மூத்த மகன் தான் நம் ஹீரோ.. சொல்லவே வேண்டாம்.. கட்டுமஸ்தான தன் உடம்பாலும் அமைதியான அதே சமயம் வீரமான நடிப்பாலும் அசர வைக்கிறார்.. மாய ஜாலக் கதைகள் வீடியோ கேமாக வந்தது போல் இருக்கும் இப்படத்தைக் கண்டால்..



வானவில் போல் கடலுக்கு மேல் இருக்கும் பாலம்.. அதைக் கடந்து போனால் வேற்று கிரகத்துக்கு செல்ல உருளும் உருளை வடிவ கருவி.. அதற்கு காவலாளியாக இருக்கும் இன்ரிஸ் எல்பா.. இவர் நடிப்பும் அசத்தல்.தீ கக்கும் முகமற்ற இயந்திர மனிதன் என என்னைக் கவர்ந்தவை ஏராளம்..

கதாநாயகி சிறிது நேரமே வந்தாலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர் தந்தை மற்றும் தங்கை நல்ல நகைச்சுவையைக் கொடுத்திருக்கிறார்கள் சில இடங்களில்..

முப்பரிமாணத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்த்து சொல்லுங்கள்.. டிஜிட்டலில் பார்த்ததால் படத்தின் பின்னணி இசை மிரட்டுகிறது.. நல்ல துல்லியமான படமும் சேர்த்து அசத்துகிறது..

நல்ல உழைப்பு தெரிகிறது.. இன்னும் கொஞ்ச நேரம் படம் இருந்திருக்கலாம்.. அப்படி இருந்தது படம்.
__________________
-- பூமகள்.


1 comments:

Anonymous said...

நானும் படம் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்றி இருக்கலாம். ஆனால் படம் ஏமாற்றவில்லை. ஒரு முறை பார்க்கலாம்.