RSS

Monday, March 21, 2011

வரதட்சணை..!



மகிழம் பூ முகம்
தாழம் பூ மனம்
அல்லிப் பூ சிரிப்பு
அந்திமந்தாரை வனப்பு
அகில் தேகம்

வர்ணிப்புகள் வடித்த
கவி மனம்..
ஏங்குவதென்னவோ
வெள்ளை நிற
நெட்டை நங்கைக்கு தான்..!

கருப்பிங்கு அவமானம்..
கருப்பழகிகள் நிலையோ
அந்தோ பரிதாபம்..!

நகை கூட போட்டால்
கருப்பிங்கு ஏற்பாம்..
நகைக்காய் வாங்கும்
பொருளா பெண்கள்??

வரதட்சணை வடிவம்
வேரோடு பிணைந்து
இப்படி ஒரு நிலை வரலாம்..!

பெண் உள்ள வீட்டின் முன்
'பெண்கள் விற்கப்படும்'
பலகையும் மாட்டப்படலாம்..!

--பூமகள்.

Monday, March 14, 2011

வேர் நட்பு..!!


அடை மழை கால
புழுக்கங்கள் போல்
விடை தெரியாத
உன் மௌனங்கள்..!!

உரக்க எழுதினாலும்
இரங்கவில்லை இதயம்..
இரவு முழுக்க
ஈரம் எங்கும்…!!

பரிமாறல்களின்றி..
பார்வைகளின்றி..
பாசம் பேச
வேற்று மொழியை
விரும்பவில்லை நான்..!!

உன் கரம் பற்றி
விழி ஊன்றி
ஒரேயொரு முறை
நாம் நட்பு சமைப்போம்..!!

பகிர்தல் நட்பிற்கழகாம்..
பகிர ஏதுமில்லையெனினும்..
பகிராமலே பாத்திரம் நிரம்புவது
நட்பில் மட்டுமே சாத்தியம்..!!

அன்பின் ஊற்றை
அந்த நாள் நினைவுகளை
அழுந்த வாசிக்கையில்
நிரம்பி விடும் கண்ணீருக்கேனும்
பதில் சொல்வாயா நீ…??!!

--
பூமகள்.

Saturday, March 12, 2011

பூவின் கதம்பம்..!!

சமீபத்தில் பார்த்த திரைப்படம்:

காவலன் - நிச்சயிக்கப்பட்ட வெற்றி. நீண்ட நாட்களுக்கு பின், அநேகமாக காதலுக்கு மரியாதைகாலத்துக்கு பின் மென்மையான நடிப்புடைய விஜயை திரையில் காண்கையில் ஆச்சர்யம். இடையில்ஏற்பட்ட பல படங்களின் அனுபவம், அந்த மென்மையான நடிப்பைக் கடினப்படுத்தியிருப்பது தெரிகிறது. சிலஇடங்களில் விஜய் நடிக்க தடுமாறுகிறார்.

கதை மலையாளத்திலிருந்து வந்ததாலோ என்னவோ உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது. தோழிக்குதுரோகம் செய்யும் தோழிகளுக்கு சரியான சவுக்கடி. இக்காலத்தில் தன்னலம் மிகுந்து பிறர்நலம் குறைவதைஅழகாகக் காட்டுகிறது படம். ஈரம் படத்தில் சொல்ல வந்த அதே மனிதாபிமானம், இப்படத்தில் நட்புக்குஇல்லாமல் போகிறது. காதலுக்கு மரியாதை போலவே காதல் தொடங்கும் இடத்தில் வரும் பாடல் மனம்நிறைகிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.

சமீபத்தில் ரசித்த பாடல்:

நீல வானம்.. நீயும் நானும்..!! - மன்மதன் அம்பு படத்தின் பாடல். என் குழந்தை அழுகையை இப்பாடல் உடனேநிறுத்திவிடுவதாலோ என்னவோ.. மிகப் பிடித்துப் போனது கூடுதலாக..!!

சமீபத்தில் அதிர்ந்த செய்தி:

ஜப்பானிய நில நடுக்கம், சுனாமி. எனக்கு தெரிந்த நட்பு அங்கிருப்பதால் பதற்றம் அதிகமானது.. அதைக்குறித்த ஒளிப்பதிவைக் காணுகையில் நெஞ்சம் மேலும் பாரமானது.. இறந்தவர்களின் ஆத்மா சாந்திஅடையட்டும்.. இயற்கைத் தாய் கருணை காட்ட மாட்டாளா என ஏக்கம் மிகுந்த கவலை மேலிடுகிறது. ஹிரோஷிமா, நாகாசாஹி குண்டு வெடிப்புக்கு பின்பே எழுந்து வளர்ந்த நாடு என்பதால் அது ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு வரும் என்று நம்புகிறேன்..

சமீபத்தில் எழுந்த கேள்வி:

கோடி கோடியாக பணம் கார்களிலும் வேன்களிலும் ஒரு நாள் சோதனையிலேயே கிட்டியதாக சன்செய்தியில் கண்டேன்.. பின்பு ஏன் இன்னும் இந்தியாவின் கடனை யாராலும் முழுதாக அடைக்கமுடியவில்லை..?? கோடிகள் இப்படியாக தெருக்கோடிகளுக்கு செல்வதாலோ??!!

சமீபத்தில் ரசித்த கதை:

நிலாரசிகன் எழுதிய 'கண்மணி, இரவு மற்றும் மழை - சிறுகதை'. வெகு நாட்களுக்கு பின் நல்லதொருஎழுத்தாக்கத்தைப் படித்த நிறைவு.

சமீபத்தில் வியந்தது:

எனைப் பற்றி பெண் பதிவர்கள் குறித்த பகுதியில் குறிப்பிடுகையில் சகோதரர் பிரபாகரன் அவர்கள், நான்விமர்சனம் எழுதும் பதிவர் என்று குறிப்பிட்டிருந்தார். விமர்சனங்களை விட கவிதைகள் மேல் நாட்டம்கொண்டு படைக்கும் எனக்கு இது பெருத்த ஆச்சர்யம்.. என் பெயரும் குறிப்பிடும்படியாக இருப்பதில் ஒருமகிழ்ச்சி.


கொசுறு:

"நீங்க நல்லா எழுதறீங்களே.. புத்தகம் வெளியிடலாமே" இப்படியாக நட்பு வட்டம் ஒன்று எனைக் கேட்க.. நானோ அதற்கு இன்னும் நான் வளர வேண்டும் என்று சொல்லி எஸ்ஸாகிவிட்டேன்.. உண்மையில் எனக்குஅந்த தகுதி வந்துவிட்டதா என்ற சந்தேகம் ஒருபுறம், எப்படி எங்கு ஆரம்பிப்பது என்ற அறியாமை மறுபுறம்.. இப்போதைக்கு ஜூட்..

அன்புடன்,
பூமகள்.

Thursday, March 3, 2011

கதை கதையாம் காரணமாம்..!!


அன்றிரவும்
அப்படியாகத் தான்
ஆரம்பித்தேன்
கதை சொல்ல..

காகம்
பாட்டியிடம்
வடை திருடிய கதை..
திருந்தப்பட்டது
இப்படியாக..

பசிப்பொறுக்காத காகம்
பாட்டியிடம் வாங்கிய வடை
தந்திர நரி பறித்துப் போக…

புதிய கதைமாந்தராய்
பாட்டி அருகில்
இருவடையுடன்
என் குழந்தை…

காக்கை அழுகை
பொறுக்காமல்
தன் இருவடையும்
கொடுத்துச் சிரித்தது
குழந்தை..

நல்லவை விதைக்க
இதைப் போலவே
எல்லாக் கதையிலும்
அரும்பிவிடும்
புதிய பாத்திரம்
என் குழந்தை வடிவில்…!!

--பூமகள்.