RSS

Friday, October 3, 2014

How old are you??!!

How old are you?

     இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ்க்கையின் பதினான்கு ஆண்டுகள் சிறைபட்டு அலுவலகம், வீடு என உழன்று கொண்டிருக்கும் பெண்ணுக்குள் எத்தனை கனவுகள் இருக்கக்கூடும் என கதாநாயகி தன்னை தன் மகளிடம் பறைசாற்றுகையிலெல்லாம் நிதர்சனம் தரும் வலி நம்மையும் ஆட்கொள்கிறது. மெல்ல விரியும் கதைக்களத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நம்மையோ, நம் வீட்டுப் பெண்களையோ கண்டிப்பாக நினைவுபடுத்தும்.. பேருந்துப் பயணத்து நட்பாய் விரியும் ஒரு பாட்டியுடனான கதாநாயகியின் சந்திப்பு யார் மனதையும் கலங்கடிக்கும்.. " என்னைத் தேடி என்னை மட்டும் பார்க்கவா வந்தாய்? ஏதேனும் வேலைக்காகவோ, ஆதாயம் தேடியோ மட்டுமே என்னைப் பார்க்க வருவார்கள்.. என்னைப் பார்க்க வீடு தேடி வரும் முதல் ஆள் நீதான்.." என் அந்த பாட்டி நெகிழ்கையில் நம் மனதையும் அசைத்துவிடுகிறது. மகளின் அந்த பதின்பருவ செயல்பாடுகளும், அம்மாவை அவ்வப்போது சுட்டிக் காட்டுவதையும் சமாளிக்கையில் மஞ்சு வாரியார் நிமிர வைக்கிறார். தம்மை எள்ளி நகையாடும் அலுவலர்களையும் சமூகத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் இடத்தில் புது உத்வேகத்தை நம் உடலிலும் பாய்ச்சுகிறார். பல வருடங்கள் கழித்து மேடையில் ஏறிப் பேச எத்தனிக்கையில் நடக்கும் காட்சிகளின் மூலம் இயற்கை வேளாண்மை மற்றும் அதன் தேவையை அழகாய் கோர்த்து துவங்கும் இடம் உங்களை கட்டாயம் நிமிர்ந்தமரச் செய்யும்..

     வேலைக்கும் சென்று வீட்டையும் கவனிக்கும் பெண்ணாக வரும் கதா நாயகியையே கணவர் நடத்தும் விதமும் பார்க்கும் கோணமும் நம்மை யாரோ சம்மட்டியால் அடித்தது போல் வலிக்கறதென்றால், வீட்டில் இல்லத்தரசியாய் இருக்கும் பல பெண்களை சமூகமும், குடும்பமும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்க வேண்டும் என்று யோசிக்கவும் வைக்கிறது..


     நாங்கெல்லாம் பெண்களை மதிப்பர்கள் என்று மார்தட்டும் பல ஆண்களும் தங்கள் வீட்டு மனைவியை, அவளுக்குள் இருக்கும் திறமையை கண்டெடுத்து அவர்கள் அதை நோக்கிப் பயணிக்க உதவுவார்களா அல்லது வழிவிட்டேனும் நின்று வேடிக்கையாவது  பார்ப்பார்களா??!! இதற்கு ஆம் என்றாலும் இல்லையென்றாலும் எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக எல்லா பெண்களும் போற்ற வேண்டிய படம்.

     How old are you??!! -- யார் பெண்களின் கனவுகளுக்கு Expiry date-ஐ நிர்ணயிப்பது ?? என்று கேட்டு நம்மை சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது படம்.


--பூமகள்.

Monday, July 7, 2014

நீங்கள் எத்தனை அழகானவர்??!!

நீங்கள் எத்தனை அழகானவர்??!!

எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையுடையோருக்கான மதிப்பும் அங்கீகாரமும் கொஞ்சம் நிறம் குறைந்த, மாநிறத்தில் இருப்பவர்களுக்குக் கிட்டுவது அவ்வளவு எளிதல்ல.

"கருவாயா", "கருவாச்சி" என்ற பட்டப் பெயர்கள் கொண்டு சிறு பிராயம் முதல் வளரும் குழந்தைகளின் மன நிலை எத்தகையதாக இருக்கும்??!!

நம்முடைய உடலும் உடல் கொண்ட உறுப்புகளும் செல்களும் நிறம், வடிவம், உயரம் என எல்லாமும் நம் பெற்றோர் முதல் முன்னோர் வரையானவர்களின் வடிவமைப்புதான். இதில் அழகாய் பிறந்ததற்கும், அழகாய் இருப்பதற்கும் ஒன்றுமே செய்யாத நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது??!! அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் மாநிறமான, கருத்த நிறமுள்ளவர்களை விட சிவந்த நிறமானவர்களுக்குத் தான் சூரிய ஒளியாலும் இன்ன பலவாலும் தோல் சம்பந்தமான பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்..

பெண் பார்ப்பதில் நமது முதல் எதிர்பார்ப்பு நல்ல நிறமான மணப்பெண் வேண்டும் என்பதே. புற அழகை மட்டுமே முன்னிருத்தி தேடப்படும் இன்றைய சூழல் பெரும் முதலாளிகளுக்குக் கொண்டாட்டமாகிறது. பல வண்ணங்களில் விதவிதமான கெமிக்கல் பூச்சுகள் விற்பனைச் சந்தையாக நம் நாடு மாறிவருவதற்கு முதல் துவக்கம் இந்த அழகு சார்ந்த நமது புரிதலே. நிறம் ஒரு தகுதியல்ல. படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி இன்று ஒருவர் தன் உழைப்பாலும் முயற்சியாலும் தன் வாழ்வில் எத்தனை முன்னேறினாலும் அவருடைய நிறம் கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்துவிட்டால் அதை ஒன்றையே காரணம் காட்டி எள்ளி நகையாடுவதும் நடக்கவே செய்கிறது..

அழகு அகம் சார்ந்த விசயம் என்பது அந்த காலத்து மனிதர்கள் வாழ்ந்து காட்டி புரியவைத்தார்கள்.. நல்ல நிறமான, உயரமான அழகான தாத்தாவுக்கு சற்று கருத்த, உயரம் குறைந்த ஒரு பெண்ணை மணமுடித்து அவர்களுக்கு ஐந்து குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்ந்தார்கள்.. அங்கே அகம் சார்ந்த அழகே வாழ்வை செழிப்பாக்கியது.,

அழகு குறித்த நமது தெளிவு மாறினாலொழிய நம் ஊரில் ஒவ்வொரு மனங்களிலும் ஊறிப்போயிருக்கும் நிறவெறி மறையாது..

இனி ஒருவரை எங்ஙனம் பார்ப்பீர்கள்??!!  புற அழகையா? அக அழகையா??!!

-- பூமகள்.

Saturday, June 21, 2014

பரிட்சை நிமிடங்கள்..!

       கொஞ்சம் நடுக்கத்தோடு தான் அதை எடுத்தேன்.. மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் துளையிட்டுக் கொண்டிருந்தன. எங்கோ எப்போதோ படித்த கருத்துகள் எல்லாம் நினைவில் வந்து மீண்டும் குழப்பியது. சாலையில் சென்று கொண்டிருக்கையில் கீழே ஒரு விலைமதிப்பான பொருளைப் பார்க்கிறீர்கள்.. என்ன செய்வீர்கள்? யாரும் கவனிக்காத போது எடுப்பீர்களா? அல்லது அருகில் வருவோரைக் கேட்பீர்களா?? எடுக்காமல் சென்றுவிடுவீர்களா??!! இந்த கேள்விக்கான பதில் சற்று குழப்பமானது.. 

     எடுத்துவிட்டால் உரியவரை எங்ஙனம் கண்டுகொள்வது?? எடுப்பதை ஒருவேளை மற்றவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்??!! சரி.. எடுக்காமல் தாண்டிப் போனால் என்னவாகும்??!! யாருடையதோ, நமக்கென்ன.. என்ற சுயநலப் போக்காக ஆகிவிடாதா??!! இப்படி பல்வேறுவிதமாக மூளை ஆட்டுவித்து முடிவெடுக்க முடியாமல் தயங்க, மனதின் அடி ஆழத்தில், ஒருவேளை வேறொருவர்  எடுத்து உரியவரிடம் தராமல் விட்டுவிட்டால்??!! எடுத்துவிடுவதே உத்தமம் என்று ஒருவாறு முடிவெடுத்தேன்.. 

     மகளிருக்கான ஓய்வு அறை ஒன்றில் எனக்கு முன் எதோ நிகழ்ச்சிக்காக உடை மாற்றிக் கொண்டிருந்த வளரிளம் பருவத்து சிறுமிகளில் ஒருவர் தனது ஐபோன் கைபேசியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். சரியான நேரத்தில் நான் கண்டதும் தான் இப்படியான மனப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டேன். எடுக்காமல் விட மனமின்றி, எடுக்கவும் தயக்கமாக ஒருவாறு நடுக்கத்தோடே எடுத்தேன். வெளியே கலவர முகத்தோடு யாரேனும் நிற்கிறார்களா என பார்த்தேன்.. ஒருவரையும் காணோம். எடுத்ததை அங்கிருந்த அலுவலகத்துக்குச் சென்று முறையாக ஒப்படைத்த பின்பே மனம் ஆசுவாசமானது. மீண்டும் அங்கு செல்ல ஒரு சீனப் பெண் என்னை அந்த குறிப்பிட்ட அறையை உபயோகித்தீர்களா என்று வினவ, நானோ, உங்கள் கைபேசியை காணவில்லையா ? என்றேன். ஒரு சிறுமி இப்போது தான் வந்து கேட்டுவிட்டுச் சென்றதாக கூறினார். நான் அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் கூறி, அவர்களிடம் அந்த தகவலை உரியவரிடம் சொல்லிவிடும்படி கூறினேன். கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் நான் செய்தது சரியென்றாலும் இப்போது இந்த நொடி, உரியவரிடம் அந்த பொருள் போய் சேர்ந்திருக்குமா என்ற பதபதைப்பு நெஞ்சில் மிச்சமிருக்கிறது. உரியவரிடம் அது சேர்ந்திட வேண்டுமென்பதே என் பிரார்த்தனையும்..! ( அந்த சிறுமி என் மீது ஏதும் கோபம் கொண்டு சாபமிடாமல் இருக்கக் கடவுக ஐபோன் ஆண்டவா..!! )


--பூமகள்.

Sunday, June 1, 2014

நினைவகம்..!




இசையினூடாய் மிதந்த உன்னை
செவியேந்தி சிந்தை சேர்க்க..
முரண் படர்ந்த நிதர்சனம்
முனகலோடு விழுங்கப் பார்த்தது..

இரவெல்லாம் நனைந்த
காகிதப் பூவின் இதழ்
ஈரமற்றதாக்க தனைச்
சூரியனில் காட்ட எத்தனிப்பதைப் போல்..

ஓயாது பெய்த பெருமழையொன்றின்
ஒப்பாரியூடே நனைந்து நின்று
உனைக் கழுவி எனை மீட்டுக்கொண்டிருந்தேன்..

மழையடித்தோடிய வெள்ளமதில்
கால் விரல் விடுத்து
உருண்டு கொண்டிருந்தது
பேரழுகுரலொன்று.. அது மீண்டும்
நினைவூட்டி வதைத்தபடியே
எங்கோ சென்றது
உனைப் போலவே..!

--பூ

Friday, April 11, 2014

அடையாளம்..!

அடையாளம்

வீழ்ந்து கிடக்குமொரு
தெருவோரப் பொருள்
யாரின் பிரயத்தனத்தையும்
விட்டுவைக்கவில்லை..

கடந்து சென்ற
சிறார் கூட்டமொன்று
கல்லெறிந்துவிட்டு
சிரித்தபடி சென்றது..

சில நகர்வுகளுக்கு பின்
வலிமுணகலேதுமின்றி
சுரத்தற்றிருந்தது..

சுட்டெரிக்கும் சூடேற
நிழலுக்காய் ஒதுங்கிய மூதாட்டி
வழியும் செந்நிற வெற்றிலைச் சாற்றை
கையொதுக்கி அதில் தேய்தபடி
சென்றுவிட்டிருந்தாள்..

ஆங்கொன்றும் இங்கொன்றுமாய்
நடமாடுமெவரும் அதைக்
கவனித்ததாய் தெரியவில்லை..

இருள் படர்ந்ததொரு பொழுதில்
தடுமாறும் போதைசூழ் மனிதனின்
கால்விரலைப் பதம் பார்த்ததில்
வெகுண்ட அவன்
அதை வசைபாடி வீசியதில்
புதரொன்றில் வீழ்ந்து
காணாமலே போனது
பொலிவிழந்த ஊரின்
பெயரழிந்த பெயர்ப்பலகை..!!

--பூமகள்.

Saturday, March 15, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும்..!!



நிஜத்தில்
எளிமையாய் இருப்பது
எளிதான காரியமில்லை..

அடங்கிப் போனால்
அலட்சியப் பார்வையையும்..
அமைதியாய் போனால்
ஏமாளியாகவும் நடத்தும் 
சுற்றம்...

இறுதியில்
எளிமையாய் இருப்பதும்
பெருமைக்காய் என்பர்.....!

இறுமாப்பு நிறைந்த
இதயத்துக்கு..
வறியோரின் நேச உணவு
ருசிப்பதில்லை..

ஏதுமில்லாதது போல்
இருத்தலும் ஓர்
ஜென் நிலைதானோ..??!!
--பூமகள்.

Thursday, March 13, 2014

ஞாயிறு திங்கள்..!

இரவு கடந்த விடியல்
வழிந்திருக்கும் ஊரில்..
உறக்கம் தெளிந்த விழிகள்
காணக்கிட்டுவதில்லை..
ஞாயிறு காலைகள்..!!

பால் வாங்கவோ,
கறி, மீன் வாங்கவோ
விரையும் மனிதர்கள்
சொல்லிவிடுகிறார்கள்
தனது ஏதேனுமொரு செய்கையில்..
விடுமுறைக் களைப்பை..!

பசித்தலின் உணர்வு
அடக்கியாளும் குழந்தையின்
நீண்ட தூக்கம் அதன்
விடுமுறை நாள் விடியலாகிறது..!!

ஏழு நாட்களும் ஒன்றென்று
சமைத்தலின் விதி புரிந்த
மங்கையர் மனம்
ஏங்கும்
எட்டாத எட்டாவது
விடுமுறை நாளுக்காக..!

                    --பூமகள்.