RSS

Saturday, December 4, 2010

இன்ப இல்..!!


இன்ப இல்..!!

கனவுகள் தொலைத்த
வெற்று விழியோடு
உன் விரல் பிடித்தேன்..

மெல்லிய விரல் பற்றி
மென்னுள்ளம் உணர்வித்தாய்..

வாழ்க்கையின் வேர்
என்னில் வேரூன்ற நீர்ப்பித்தாய்..

ஒவ்வொரு நாளும்
ஓர் நொடியாக்கி வியப்பித்தாய்..

ஏதோ ஓர் நொடி
என்னில் எல்லாமாகி வியாபித்தாய்..

இனி வரும் ஆண்டெல்லாம்
இது போலே அமைய
பிரா ர்தித்தேன்..

ஈர விழியோடு
ஈராண்டு கடந்து
உனைப் பார்க்கிறேன்..

என் விழியின்
வெற்றிடம் நிரம்பிவிட்டிருந்தது..

நிரம்பியதெதுவென
எட்டிப் பார்க்கிறேன்..

ஆழ்ந்த அன்போடு
அழுத்தமாய் முத்தமிட்டு
அமைதியாய் நின்றாய்
நீ..!!

-- பூமகள்.

Friday, November 26, 2010

பரவசம்..

மாலை நேர வெயில்..
இளஞ்சூட்டு சூரியன் இதம்..
மொட்டை மாடிக் காற்று..
இனிமை தரும் குயிலோசை..
விரல் தொடும் தூரத்து தென்னங்கீற்று..

இத்தனை தரும் சுகத்தைத் துறந்தாலும்
அதனினும் இனியதாகிவிடுகிறது..

என் மழலை எச்சில் படுத்தி
எனக்கு இன்முகத்தோடு ஊட்டும்
அன்புணவுத் தருணம்..!!

Sunday, October 31, 2010

மரணம் ஒத்த நிகழ்வில்..


வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..

அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...

கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..

மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..

அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..

நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..

உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித்
தொலைந்திருந்தேன் அப்போது..!

--
பூமகள்.

Wednesday, October 20, 2010

மழைச்சாரல் தந்த மனச்சந்தம்..!!


மழை விட்டு அன்று தூரலோடு உறவாடிக் கொண்டிருந்தது தென்றல்.. சில்லென்ற உணர்வு கால் பாதங்களில் ஏற வீட்டினுள் அப்படியொரு சில்லிப்பு.. மெல்ல தென்றல் வலுவுற்று தூரலை தூர அனுப்பிக் கொண்டிருந்தது. சற்றைக்கெல்லாம் வானம் மொட்டவிழ்ந்த மலராக பளிச்சிட்டது. மழை விட்டபின் உண்டாகும் உலகம் முற்றிலும் அழகானது. ஏதோ அழகு கலை நிபுணர் வந்து செய்து விட்ட அலங்காரம் போல வெளியெங்கும் மின்னும் வைரக் கற்கள் போல் இலைகளில் துளிகள். அத்தகைய உலகத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.. எப்போதும் அந்த புதிய உலகைக் கண்ணுற ஏங்கி, ஈரத்தின் கசகசப்பையும் பொருட்படுத்தாமல் ஏதேனும் வாங்கவேனும் காரணம் சொல்லி நடை போட்ட காலங்கள் மனதில் எழுந்து பூப்பூத்தன. அப்படி இப்போது செல்லமுடியாத சூழலானாலும், வீட்டு முற்றத்தின் தோட்டத்தையும், அடுத்துள்ள தோப்பையும் அதோடு ஒட்டி வண்ணங்களால் தன்னை வடிவமைக்கும் வானத்தையும் பார்க்கும் சிலிர்ப்பு நெஞ்சில் எழ.. சத்தமில்லாமல் வெளியே வந்து விட்டேன்..

மருதாணி மரத்தில் ஈரத் துளிகளை தன்னில் சுமந்து நிறை மாத கற்பிணியாக ஒவ்வொரு இலையும் தன் தலை தாழ்த்தி தென்றலோடு தன் சுமையைப் பகிர்ந்து கொண்டிருந்தது.. மணக்கும் அதன் சுகந்தம் நாசி தொட ஏதோ நுரையீரலைப் புதுப்பித்தது போன்ற ஒரு பிரம்மை மனதில் எழுந்தது. பாரிஜாத மலரின் காய்கள் தன் பங்குக்கு தன் பக்க எடையைக் கூட்டி மருதாணிக் காய்களை முட்டிமோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் சமரசம் செய்ய அவ்வப்போது வந்து சென்றது வந்தென்றல் நாட்டாமை.

இறகு விரித்துப் பறக்க விரும்பி முடியாமல் போன சோகத்தில் ஓர் வண்ணத்துப் பூச்சி தன் ஓரமடிந்த சிறகை இலையில் அப்பித் தத்தளித்துக் கொண்டிருந்தது.. ஈரம் வழிந்த அந்த இலையில் வண்ணத்துப் பூச்சியின் இறகு வடித்த கண்ணீராக தெறித்துக் கொண்டிருந்தது மிச்சமிருந்த சாரல்.. விடை தெரியாமல் விழிக்கும் மழலையின் முகம் போல் என் முகம் செய்வதறியாது திகைத்து நின்றது.. அகவலொன்று தொலைதூரத்தில் கேட்க.. தென்னந்தோப்புப் பக்கம் விழி பாய்ந்தது.. கோலமயில் கோலமிடுகையில் வருகை தந்த, சென்ற நாட்களை மனம் அசைபோட்டது. இன்றைக்கு சத்தத்தை மட்டுமே மொத்தமாகத் தந்து எங்கோ நின்று தன் அழகை வானுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்று தேடலானேன். விழி எட்டிய தூரம் வரை மயில் சுவடு தெரிய மறுத்ததால், ஏமாற்றத்தை மயிலிறகால் ஆற்ற வேண்டியதாகிவிட்டது. அடுத்த முறை வருகையில் மயிலோடு ஓர் பஞ்சாயத்து பாக்கி இருக்கும்.

மூன்று தெரு சந்திக்கும் புள்ளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னிடம் ஒரு குரல்.. "அக்கா.. வேலை ஏதாவது இருக்கா அக்கா... புல்லு வெட்டுவேன் அக்கா.. தொட்டி கழுவுவேன் அக்கா..".. குள்ளமான, சற்று தடித்த ஒரு சிறுவன்.. தன் நா, உதடு வறண்டு நின்றிருந்தான். சிறுவன் என்ற சொல்லுக்கும் இளைஞன் என்ற சொல்லுக்கும் இடைப்பட்ட நிலையினை காட்டியது அவன் முகம்.

"
இரு தம்பி.. "என்று சொல்லி, அம்மாவை அழைத்தேன். அம்மாவோடு அவன் பேச்சு வார்த்தை ஒரு சொம்பு தண்ணீரோடு ஆரம்பமானது.

"
தம்பி.. அதிகம் படர்ந்த மருதாணி கிளையையும் பாரிஜாத கிளையையும் வெட்டிடுப்பா.. "அம்மாவின் குரல் கெஞ்சலுக்கும் அதிகாரத்திக்கும் இடையில் தோணித்தது.

அதுவரை என் ரசனையில் ஒளிர்ந்தபடி இருந்த அந்த மழைத் துளி நிரம்பிய மருதாணிக் கிளை மெல்ல மெல்ல தன் கிளையை இழந்து களை இழக்கலானது. அதைக் காண மனம் ஒப்பாமல் வீட்டுக்குள் தஞ்சம் கொண்டேன்.. சற்றைக்கெல்லாம் பாரிஜாத மரம் தன் அனைத்து கிளைகளையும் இழந்திருந்தது.. அதுக்குள் அந்த சிறுவனின் கையில் மருதாணி தன் சிவப்பை கொஞ்சம் கீறி ஏற்றியிருந்தது.

பதறியபடி அம்மா, "மருந்து வேண்டுமாப்பா" என்று கேட்க.. நானோ "மருந்து போடேன் தம்பி" என புலம்பலாயினேன்.. அவனோ, உதடு சுழித்து "வேணாம்க்கா..". சரி.. "தண்ணீரில் கழுவவாவது செய்யேன்.. ரத்தம் நிறுகுமல்லவா" என மறுபடி நான் சொல்ல.. "வேண்டாமக்கா.. கழுவினால் சரியாகாது" என்று அதனை தன் கையால் துடைத்துவிட்டு வெகு சாதாரணமாக குடிக்க தண்ணீர் கேட்டு நின்றிருந்தான்.

படிக்கலையாப்பா? இன்னிக்கி விடுமுறையும் இல்லையே.. என்று நான் வினவ.. தலையை மட்டும் இடவலமாக ஆட்டிவிட்டு தன் வேலையில் கவனமாக இருந்தான்.. எனக்கோ அவன் எதிர்காலம் குறித்த கேள்வி முள்ளாக தைக்கத் துவங்கியது. இரு சிறுவர்கள் வந்திருந்தனர். இருவரின் எதிர்காலம்?? சற்றைக்கெல்லாம் வேலை முடித்து பணம் பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினர். வெளியில் அவர்கள் போகும் திசையைப் பார்த்திருந்த எனக்கு கண்ணில் பட்டது அந்த பட்டாம்பூச்சி. இறகுகள் உலர்ந்து ஊதாப்பூக்களை வட்டமிட்டபடி இருந்தது இலையில் ஒட்டி தப்பித்திருந்த அதே வண்ணத்துப் பூச்சி..!!

Saturday, October 16, 2010

இயலறிதல்..!!


தூக்கத்தின் விழிப்பில்
தூரலிடும் மேகத்தின்
தூறிகை மைச் சிதறலாய்
தூபமிடும் தவிப்புகள்..!

அக்னிப் பிழம்பின்
ஆனந்த மழையினில்
அடங்கி ஏறும்
ஆட்கொள்ளும் ந(பு)கைப்புகள்..!

துயில் தொலைத்த
தூரமளக்கும் ஈரவிழி
உணர்த்தும் ஊழ்
உள்வலி என்றும்..!

காணா புதிரும்
காணும் ஆவலும்
கண்ட கனவில்
கானலாய் போகும்..!

ஆழ்மூளை அழுத்தும்
ஆழ்தூக்க குறை
அம்மா பெயருக்கு
அடுத்த பொருள் உணர்த்தும்..!
--பூமகள்

Monday, October 4, 2010

உணர்வின் உறவு..!!

உணர்வுகளால் சுற்றப்பட்ட
பந்தொந்தொன்று கொண்டு
நாம் இருவரும் விளையாட
எத்தனித்தோம்..

உருண்டு திரண்டு
இருந்த அதுவோ
அழகான தன்
விசையால் நம்மை
பிணைத்துக் கொண்டே இருந்தது..

இருவரிடமும் மாறிமாறி
இடம் பெயர்ந்து ஒரு நாள்
ஓய்ந்து கொஞ்சம்
துயில் கொண்டது..

வேடிக்கைப் பார்க்கும்
வேண்டிய கூட்டம்
தருணம் பார்த்து
அதைச் சுட்டுச் சென்றது..

உணர்வுகள் தொலைத்த நம்மில்
உறவுகளின் தூபம்
தூவப்பட்டது..

வார்த்தைகள் வலிக்க
வரையப்பட்டது உறவுகளுக்காக
ஓர் அக்னியுத்தம்..

உடைந்து அழும் குரலொன்று
இடையிடை நம்மில் வந்தமர்ந்தது..
எங்கென ஆராய
ஓர் மூலையில் உறவுகளால்
கிழிக்கப்பட்ட நம் உணர்வுப் பந்து
செயலற்றுக் கிடந்தது..!!

__________________
-- பூமகள்.

Thursday, September 30, 2010

கிள்ளை உள்ளம்..!!


மற்றோர் இருக்க
எனை நாடி
என்னோடு இருந்தும்
எங்கோ நின் கவனம்..!

என் அருகாமை
கிட்டியதும்
அடுத்தது நோக்கி
உன் மனம்..!

என் முக பாவங்கள்
உனை முற்றுகையிட்டும்..
முகம் நோக்காமல்
சிதறும் உன் ஆட்டச் சிந்தை..!

எப்படியாகினும்
என் மென்கோபம் தோற்கடிக்கும்
பொக்கைவாய்ப்
புன்னகைப்பூவின் முகம்..!!

--பூமகள்.

Wednesday, September 22, 2010

வான்முகில் மனத்தாருக்கு ஓர் மகுடம்..!!




நம்ம வாழ்க்கையில தினம் தினம் பல புதிய மனிதர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அப்படியான சந்திப்புகளும் அவர்களுடனான நமது பரிமாறல்களும் காலத்துக்கும் நினைவிருக்குமா என்றால் பலருக்கு பெயர், முகம் உட்பட பல மறந்திருக்கும். ஆனால், மறக்காமல் அவர்கள் நம்மில் விட்டுச் செல்லும் ஒன்றே ஒன்று... அவர்களைச் சந்தித்தவேளையில் அவர்கள் நம்மில் ஏற்படுத்திய அந்த உணர்வு. அந்த உணர்வே அடுத்து அவர்களைச் சந்திக்க வைக்கவோ அல்லது சந்திக்காமல் தவிர்க்கவோ வைக்கும் கிரியா ஊக்கியாக செயல்படும். அப்படிச் சந்திக்கும் மனிதர்கள் எல்லாருமே நம்மில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறார்களா என்றால்.. அது அவர்களால் நமக்குக் கிடைத்த பலன்களைக் கொண்டு கணக்கிடுகிறோம். ஒருவரால் இத்தகைய ஆதாயம் எனக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் என்பதால் மட்டுமே முகஸ்துதி பண்ணி பேசுபவர்களும் உண்டு.. வெறும் பலன்கள் சார்ந்த குறுகிய வட்டச் சிந்தையாளர்களின் வழக்கம் இது. சிலரிடம் சில நிமிடங்கள் பேசினாலே, பல நல்ல விசயங்களை நமக்கு சொல்லாமல் சொல்லி புரிய வைத்திருப்பர்.. சிலரிடம் சில வினாடிகள் பேசினால் கூட, ஹையோ.. ஏன் இப்படியும் சிந்தித்துப் பேசுகிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியில் வேறு வழியின்றி தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருப்போம்.

சந்திப்பவர்கள் எத்தகையவர்களாய் இருந்தாலும்.. அவர்கள் மேல் நம் மதிப்பும் அன்பும் உயரும்படி அவர்களின் பேச்சும் சிந்தையும் உள்ளதா என்பது தான் முதல் கேள்வியாக அனைவர் மனதிலும் இருக்கும். அப்படிச் சந்திப்பவர்களின் சிந்தை, செயல், பேச்சு எல்லாமே ஒன்று போலவே இருப்பின் அவர்கள் நம்மில் பெருமதிப்பைப் பெறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் நம் பொது வாழ்க்கையில் சந்திக்கும் பலரில் ஒரு சிலர் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பார்கள். காரணம், தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து பொது வாழ்க்கையில் வருவாயை விட சேவை முக்கியமாகக் கருதி உழைத்துக் கொண்டிருப்பார்கள்.. அப்படிப்பட்டவர்கள் இந்த சமுதாயத்தில் கடவுளாகவே கருதி வெகு ஜன மக்களால் மதிக்கப்படுவார்கள்..

அப்படிப்பட்டவர்கள் பற்றி எழுத எண்ணி இந்த முன்னுரையை வழங்குகிறேன்..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மகுடமானவருக்கோர் மகுடம்..!!


இவரோடான என் அறிமுகம் நான் ஓர் புன்னகைப்பூவை பெற்ற போது நிகழ்ந்தது. இவர் பற்றிய அறிமுகமோ, முன்னுரையோ யாராலும் எனக்கு வழங்கப்படவில்லை.. இவரின் கனிவும், ஐயங்களைத் தெளிவாக்கும் குணமும் என்னை இவர் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இவரின் பொறுமை விளக்கும் அந்த நிகழ்வு தான் என்னைப் புரட்டிப் போட்டது. என் பூவுக்கு உரமேற்ற பூவின் வேர் பூவைத் தாங்கிக் காத்திருந்த வேளை, அனைத்து வகைப் பூக்களும் வந்தால் ஒழிய அந்த உரமேற்றல் நடக்காதென்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

உரமேற்ற காத்திருந்த பல்வகைப் பூக்களில் சில பூக்களுக்கு தாய்த் தண்டின் தணிப்பு தேவைப்பட.. அழுது வடியும் பூக்களோடு வேர்கள் தாயிடம் தேடின. அனைத்துப் பூக்களும் ஒருங்கே சேர பல மணி நேரமானது. அனைத்தையும் பொறுத்த என் பூவின் வேரோ, இறுதியில் கேட்டே விட்டார். 'அனைவருக்கும் ஒருங்கே உரமேற்ற எங்ஙனம் சாத்தியம்? ஒரு பூ அழுதால் அப்போ திரும்புவதற்குள் மற்றொரு பூ சென்றுவிடுகிறதே'.. இதைக் கேட்ட அவரோ, புன்னகைத்தவாரே உரைத்தார். 'உங்கள் செடியில் இது எத்தனையாவது பூ? இன்னும் காலம் அனுபவங்கள் பல தரும். பூவோடு பயணப்பட்ட வேளையில் உங்களுக்கு பூவால் பல தாமதங்கள் ஆகும். பொறுமை மிக அவசியம்.' இந்த முரண்பட்ட சண்டையில் எங்களுக்குள் புதிய புரிதல் உண்டானது.

பூவின் நலன் குறித்த எனது ஐயங்களை, பூந்தோட்டத்தின் காவல்காரர் போல அவர் ஒவ்வொருமுறையும் பொறுமையாக எனக்கு விளக்குகையில் மனம் மகிழ்ச்சியில் திழைத்தது. சொல்லவொண்ணா அமைதியில் நிறைந்தது.

பூவுக்கு உரமேற்ற முக்கியமான தருணம் வர, மீண்டும் இவரோடான என் சந்திப்பு நிகழ்ந்தது. மகிழ்ச்சியாய் சந்தித்த அந்த தருணம் இன்னும் நினைவில்.. பூவின் மலர்ச்சி.. வளர்ச்சி குறித்த மகிழ்ச்சி.. இப்படி மகிழ்ந்து இறுதியில் உரமேற்றவும் செய்து அனுப்பிவிட்ட பின் பூ வாடி சுருண்ட நிலையில் தவித்துப் புலம்பி பூந்தோட்டத்தின் காவல்காரருக்கு அழைப்பு விடுத்தேன். பதறிப் போய் மறுதினம் பூவைத் தான் சந்திக்க வேண்டுமென உடன் வரச் சொன்னார். பதறினாலும், பதறாமல் பூவின் குருதி பார்த்து மதிய உணவு மறந்து என் பூவின் பசியாறக் காத்திருந்தார். சிதறாமல் சிக்கனமாய் தான் அறிந்ததைச் சொல்லி, பூவினை தன் கட்டுப்பாட்டில் சில தினம் விடச் சொன்னார். மெல்ல எனக்கு தலை சுற்றினாலும், அதிகம் பேசாமல் ஆசுவாசப்படுத்தினார்.

பூவினைச் சேர்த்த பின் அடுத்த சில நிமிடங்களில், பூவுக்கு நிகழ்ந்த கொடுமையின் சீற்றத்தை எனக்குப் புரிய வைத்தார். எப்போது வேண்டுமானாலும் கடல் சேரப் பார்க்கும் கரை மணலைப் போல என் விழியில் வரக் காத்திருக்கும் கண்ணீரை ஆராய்ந்தது அவர் மனம். திடமான பின் மீண்டும் மிச்சத்தை உரைத்து நகர்ந்தார் தன் மூன்றாவது சந்திப்பில்.. வலிமிகு செய்தியை வலிவரா மருந்து தட்வி கொடுப்பது போல் மெல்ல மெல்ல என்னில் ஏற்றி பெரு வலி வராமல் தடுத்தார்.

இப்படியாக, என் பூ, பூத்தவேளை முதல் இக்கட்டான இக்கால கட்டம் வரை எனக்கும், என் மனதுக்கும் உரமேற்றும் மாவேலையைச் செய்த புண்ணியம் அவருக்கே உரியது. என் உயிரின் பாதி எங்கோ இருக்க.. என் உயிரோ உலர்ந்த சருகாய் படுக்கையில் கிடக்க.. என்னில் சூழலைத் தாங்கும் வலிமைத் தந்து அழாமல் இருக்க வழிவகை செய்தார்.

சில நூறு ரூபாய்களோடு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தினம் காணும் தொழில் முறை நபர்கள் முன் இவர் வித்தியாசமானவர். எந்த நேரத்திலும், எந்த நிமிடத்திலும் நம் பூ பற்றிய இக்கட்டான சூழலில் இவரைத் தொடர்பு கொள்ளலாம். முடிந்த மட்டும் இவரைச் சந்திக்காமலே சரியாக்க முயற்சிக்கும் இவர், சந்திக்க அவசியம், அவசரம் நேர்கையில் தவிர்ப்பதும் இல்லை. அதிதீவிரமான சமயத்தில் நம் பூவை விட்டு நகர்வதும் இல்லை. இவ்வகை மனிதர்கள் இருப்பதால் தானோ என்னமோ, எத்தனை அழிவு வந்தாலும் இன்னும் இந்த பூமியில் மழையும் எழிலும் இன்னும் மிச்சமிருக்கின்றன.

ஒரு நூறு ரூபாய்க்கு பல்லாயிரம் ரூபாய்க்கான தகவல்களைச் சொல்லி பூவின் வாழ்வு மலரத் தேவையானதைத் திரட்டிக் கொடுக்கும் ஓர் அற்புத அமுத சுரபி இவர். நமக்கு மட்டுமல்ல.. தம்மைச் சுற்றி வரும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் அதே பொறுமையும் மலர்ச்சியும் கொண்டு மருத்துவம் பார்க்கும் இவர் மாமேதை.

தன் சொந்த வாழ்க்கையின் பல அற்புதமான தருணங்களை இழந்து கொண்டிருக்கும் போதும், அதன் வலி தன்னில் அடக்கி நம் வலி போகச் செய்யும் வன்மை மிக்கவர் இவர். தன் பிஞ்சுப் பூவின் பிறந்த நாளைக் கொண்டாடாமல் ஆயிரமாயிரம் வாடின பூக்களை நலமாக்க எண்ணி நள்ளிரவு வரை இயந்திரம் போல் இயங்கும் இவர், என் மனதில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டார். என்னோடு இதைப் பகிர்ந்த வேளையில் எங்களுக்குள்ளான உரையாடல் நின்று வினாடிகள் தமக்குள் மௌனப் பூட்டு பூட்டிக் கொண்டன. எனக்கு இவருக்கு சொல்ல பதிலேதும் இல்லை.. மனதால் நன்றி மட்டுமே இறுதியில் சொல்ல முடிந்தது. அவ்வாறு பகிர்கையில் அவர் விழி சொன்ன வலியை எந்த சின்னப் பூவின் மலர்ச்சி கொண்டு சரியாக்க இயலும்? இழந்த மனிதர்களும், இழந்த காலமும் திரும்ப கிடைக்கவே கிடைக்காதவை.. அந்த உண்மையைப் புரிந்ததாலோ என்னவோ, வாழ்க்கையின் எதார்த்தத்தையும் வளர்ச்சியையும் சட்டெனப் புரிந்து தனக்குத் தானே ஆசுவாசமாவதையும் அடுத்த சில நிமிடங்களிலேயே கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

இவ்வகை மனிதர்கள் இன்னும் பல்லாயிரம் பூந்தோட்டங்கள் பூத்துக் குலுங்க காவலாக அமைந்து நம் தேசத்தை நல்பூக்களின் தேசமாக மாற்ற வேண்டுமென்பது என் அவா. இவர் புகழ் பரப்ப இத்தகைய பதிவுகள் அவசியம் இல்லை. அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர் இவர்.

எனக்கு உங்கள் இடத்தில் பார்த்த ஒரு வாசகம் நினைவு வருகிறது..

Doctor, you remains a difference, as Always.



(அடுத்த மகுடம் - உரியவர் வரும் வரை..)

Sunday, September 5, 2010

நன்றி..!!

நன்றி கூறுவேன் என்று
நா எழ முயல..
விழியின்
பனித்துளி முத்தாகி
முந்தி நவிழ்ந்திருக்கும் நன்றி...

வறண்ட பாலையால்
நிரப்பப்பட்ட பூமிபோல்
நா முழுதும் வறண்ட
வாயில் வார்த்தை
வெந்திருக்கும்..

வெளி வந்த உஷ்ண
புகைச்சலில்
எரிந்து கொண்டிருக்கும்
உனக்கும் எனக்குமான
பாச சம்பாஷனை பற்றிய
ஊர் புரளிகள்..!!


-- பூமகள்.

Saturday, September 4, 2010

எல்லையற்ற மனவெளி..!!



எங்களுக்குள்ளான உரையாடல்கள் இப்படித் தான் எப்போதுமே ஆரம்பிக்கும்.. முகமலர்ந்து எனைப் பார்த்து புன் சிரிப்புடன் கதவருகில் வந்து நிற்பார் பக்கத்து வீட்டு வட இந்திய விருந்தினப் பெண். உள் அழைத்து அமர வைத்து விருந்தோம்பல் முடித்து ஆயாசமாய் அமர்ந்து கதை பேச ஆரம்பிக்கும் முன் அவரே வெகு தூரம் பேசியிருப்பார்.. தம் பிரிவு குறித்தும் தங்களின் கடவுள் நம்பிக்கை குறித்தும் சொற்பொழிவாற்றுவார். நம் பக்கம் எப்பவும் போல் கேட்டலும் அதைச் சார்ந்த பதில்களும் தொடரும்.. பேசுபவர் கொஞ்சம் அவரே தன் பாணி மாற்றி பேச்சை கேள்வி - பதில் பேட்டியாக்குவார்..

உங்க வீட்டு திருமணம் எப்படி நடக்கும்? இப்படி ஆரம்பிக்கும் அவரின் கேள்விகள்.. ஒரிரு வாக்கியத்தில் என் விடை முடிய.. மீண்டும் அடுத்த கேள்வி அவரே ஆரம்பிப்பார்.. திருமணத்தின் முன் தேடு படலம் முதல் திருமணம் முடிந்து பிள்ளைப் பேறு வரை கேள்வி பதில்.. அவர்களின் வழக்கம் என இரு வேறு கலாச்சார பரிமாறல்கள் நடந்தேறியிருக்கும்..

குழந்தை பிறப்பு முதல் குழந்தை வளர்ப்பு பராமரிப்பு வரை அனைத்தும் அலசி காயப்போட்ட பின் வீட்டு நிலவரம் அறிய எத்தனித்தார் அவர். சொந்த வீட்டு நபர் பற்றி நாம் கூற.. அவரின் பட்டியலோ ரேசனுக்காக காத்திருக்கும் மக்களின் வரிசையைப் போல் நீளும். தந்தை வழி சொந்தம் அனைத்தும் ஒரே வீட்டில் ஒன்றாய் இருக்கும் அந்த பாங்கு அவர் சொல்லச் சொல்ல.. நம் விழி விரியும்.. ஏக்கப் பெருமூச்சு என்னுள் மேலோங்கும்..

காதல் திருமணமெனில் தன் ப்ரிவினரால் உண்டாகும் எதிர்ப்பு, ஜாதகம், இனம், பிரிவு சார்ந்த பற்று பற்றி விரிவாக எடுத்தியம்பும் அவர் பேச்சு.. மெல்ல எனை நோக்கி அந்த கேள்வி வீசப்படும்..

உங்கள் வீட்டில் நடந்த திருமணம் எப்படி...

எங்க வீட்டில் எதையும் பார்க்கவில்லை..

உங்களவர் எந்த ஊர்??

நம் நாடல்ல..

அப்படியெனில் எந்த பிரிவு?

அதை நாங்கள் பார்க்கலை..

எந்த மதம்?

அதுவும் எங்களுக்கு தெரியாது..

பின்னே உங்கள் இனமா??

என் முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்து பதிலுரைத்தேன்..
அனைத்தும் வித்தியாசம் தான்..

அப்போ ஜாதகம் பார்த்தீங்களா??

இல்லை.. இதயத்தைப் பார்த்தோம்..

புருவம் உயர்த்தி ஆச்சர்ய முகபாவத்தோடு ஒரு சில நிமிடம் அமைதி காத்தார். விடைபெற்று எழுந்து சென்றவர் அதன் பின் அது பற்றி பேசவே இல்லை.

புதியதோர் உலகம் செய்வோம்..!!

அன்புடன்,
பூமகள்.

Friday, September 3, 2010

பயணத் துணை..!!



உன் சுவடு விடுத்து
பல நூறு மைல்
பயணித்த வேளையில்..

அடுத்த பயணியாய்
நீ என் பின்னே..

விண் நோக்கி
விழி விரிய வைத்த
கணங்கள் என்
மனக் கண்ணில்..

தெரிந்தும் தெரியாதது
போல் சக பயணிகளோடு
நாம் இருவரும்..

விலக்க முயற்சிக்கும்
காந்த எதிர்புலங்களாய்
விழி முட்டி தவிர்க்கும்
வாழ்க்கையின் எதார்த்தம்..

இதழோரப் புன்னகையோ
விழியோர ஈரமோ
இருவரும் அறியாதபடி
கலைந்து இயல்பெனக்
காட்ட முயற்சிக்கிறோம்..

மண்ணில் காணக்
கிடைக்காதது..
ஏனோ விண்ணில்
கண்ட விந்தை..

எடுத்து அப்பிய
இறுகிய முகத்தை
இருவரும் காட்டி
அவசர கதி உடை
பூண்டு நகர்கிறோம்..

வலி மரத்த இதயம்
முன்னிலும் அதிகம்
வலித்தது அன்று..

ஒரு வார்த்தை
பேசியிருக்கலாமோ??

--- பூமகள்.

Friday, August 13, 2010

ஊடல் கொள்வோம் வா..!!



எப்போதும் போலவே
அன்றும் நீயே
சண்டையை
துவக்கி வைத்தாய்..!!

என்னோடு சண்டைபோட
சுலப வழி எப்பொழுதும்
உனக்கு
இருக்கவே இருக்கிறது..

நாளை செய்ய எத்தனித்து
விடுபட்ட வேலை மேல்
உன் வேல் விழி பாயும்..

அரும்பி விடும் உன்னுள்
அந்த அரிவாள் வாக்குவாதம்..

விடாப்பிடியாய் நீ பேச..
என் நியாயம் நான் பேச..

காரணங்கள் கரைந்து
ஏனோ என்
விழியோரம் நனைக்கும்..

கோபத்தோடே
அலுவலகம் சென்றிடுவாய்..

எதுவும் கேக்காமல்
ஊமையாகும்
வாயும் வயிறும்..

மதியம் அழைப்பு வரும்..

இயல்பு திரும்ப
இயல்பாக பேச
முயல்வாய்..

வறண்ட கிராமத்தில்
நீர் முடக்கும்
கையடி குழாய் போல்
உணர்வு முடக்கி
நான்

உணவு அனுப்பி
உண்ண வைப்பாய்..
உன் பாசம் சொல்லி
நெகிழ வைப்பாய்..

பாறையை பூவாக்கும் வித்தை
பிரயோகிப்பாய்..
கல்பாறை கற்கண்டாகும்..

வீடு திரும்பிய
உனைச் செல்லமாய்
குத்தி நெஞ்சில்
முகம் புதைப்பேன்..

அர்த்தமற்ற சண்டையின்
அரிய நோக்கம்
அறியச் செய்வாய்..

முன்னை விட
தித்திக்கும்
நம் காதல் அன்று..

இறுதியில் சொல்வாய்..
இதற்குத் தான்
காத்திருந்ததாக…!!

--
பூமகள்.

Thursday, August 12, 2010

இடுக்கண் வருங்கால்..!


இடுக்கன் வருங்கால்..!!

வெட்ட வெட்ட
வளரும் நகமாக
வளர்ந்து கீறும் நினைவுகள்..

அதிகம் வலித்த
தருணம் அனைத்தும்
ஒருங்கே கூறும் அவை..

உறவு தரும் வார்த்தை
உளியடியாய் இறங்கி
ஆறுதலுக்கு பதில்..
ஆறா வடுவாக்கும் நெஞ்சில்..

கதறி அழ நினைத்தும்
காய்ச்சல் குழந்தை முகம்
கலக்கமாய் நினைவூட்டும்
கசந்து வற்றும்
அம்மா பால்..!

மருத்துவர் சொல்படி
மென்று முழுங்கி
ஜீரணிக்க முயலும்
ஜீரணமாகாத நினைவுகளோடு
புதியதாய்
புதிய தாய்..!


Monday, August 9, 2010

தி லாஸ்ட் ஏர்பெண்டர் (3D) - விமர்சனம்





The Last Airbender - 3D
Manoj Night Shyamalan



கொஞ்ச நாள் முன்பு டாய் ஸ்டோரி முப்பரிமாணத்தில் காணச் சென்ற பொழுதே இந்தப் படத்துக்கான முன்னோட்டத்தை முப்பரிமாணத்தில் விளம்பரப்படுத்தினர். அதைப் பார்த்ததிலிருந்தே கட்டாயம் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் என்னில் வேரூன்றியது. மேலும், சியாமளனின் தி வில்லேஜ் பார்த்த அனுபவமும் பார்க்கத் தூண்டியது.

எங்கள் ஊரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றிருந்தது.

படத்தின் முதல் சில காட்சிகளிலேயே அதாவது எழுத்து போட ஆரம்பித்த உடனிருந்தே அந்த முப்பரிமாண காட்சியமைப்பு நம்மை கட்டிப் போட்டுவிடுகிறது.. படம் முப்பரிமாணத்தில் அசத்துகிறது.



சீன மத துறவி போல் வரும் சிறுவன் இந்த படத்தின் ஹீரோ. ஆங் என்று தன்னை அறுமுகம் செய்தாலும் அவன் அவதார் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறான். அவன் என்ன செய்வான், எப்படி செய்வான் என்பது போன்றவை படத்தில் கண்டு நீங்கள் மகிழ இங்கு ரகசியம் காக்கப் படுகிறது.

நமது ஆன்மீக நம்பிக்கையில் முக்கியமாகக் கருதப்படும் பஞ்ச பூதங்களினால் உருவான உலகம் போலவே இங்கு நான்கு பூதங்களை கொண்டு மட்டும் அதாவது பெண்டாஸ்டிக் ஃபோர் படத்தில் வருவது போல நான்கு பூதங்களை கைக்குள் வைக்கும் உத்தி தான் படத்தின் கரு.

ஒரு அண்ணன் மற்றும் தங்கையுடன் படத்தின் கதை ஆரம்பமாகிறது. அதற்கு முன் உலகம் பற்றிய ஓர் முன்னோட்டம் கதைக் கரு பற்றி நமக்கு விளக்கப்படுகிறது.

படத்தில் ஹீரோவாக வரும் சிறுவன் அவ்வப்போது தனது குழந்தைத்தனத்தால் நம்மை சில இடங்களில் சிரிக்க வைக்கிறான்.. தனது குருவை நினைத்து வருந்தும் இடத்திலும், தன் ஊரினைக் கண்டு மனம் வெதும்பி நிற்கையிலும் கிளாஸ். பல்வேறு மன ஓட்டங்களை தனது சிறிய முகத்தில் கொண்டு வந்து அற்புதமாக நடித்து அசத்தியிறுக்கிறான் சிறுவன். அழகான தன் வித்தையால் நம்மை எல்லாம் ஆட்கொண்டும் விடுகிறான். இறுதியில் ஓர் இடத்தில் என் கண்ணைப் பனிக்கவும் வைக்கத் தவறவில்லை…என் ஓட்டு இந்த சிறுவனுக்கே.


சிலம் டாக் மில்லேனியரில் நடித்த ஹீரோ இதில் நடித்திருக்கிறார். தேர்ந்த நடிப்பை வெளியிட வாய்ப்பற்ற நிலை. தன் பங்கைப் பூர்த்திசெய்திருக்கிறார். ஆனாலும், ஸ்லம் டாக்கில் நடித்த நடிப்பின் பிரதிபலிப்பு தெரிகிறது இதிலும்.. இவருக்கு மாமாவாக வரும் வயதானவரின் பாத்திரம் அற்புதம். அவர் சில இடங்களில் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய பூதங்களை அவதார் எனப்படுபவர் என்ன செய்கிறார்கள்.. ஏன் செய்கிறார்கள்.. அவர்களுக்குள்ளாக நடப்பவை என்ன.. உலகத்தின் சுத்தமான ஆன்மாக்களாகக் கருதப்படும் இவை கொண்டு உலகத்தின் சம நிலை எவ்வாறு பாதிக்கிறது போன்ற பலவற்றிற்கு விடை படத்தில் காணலாம்.

படத்தின் சில காட்சியமைப்புகள் அற்புதம்.. கிராபிக்ஸ் எதுவென அறியாத வண்ணம் கலக்கியிருக்கிறார்கள்.. பனிக்கரடி போன்று வரும் பறக்கும் மிருகம் அசர வைக்கிறது. மாய ஜால படங்கள் பார்த்த எபக்ட் கட்டாயம் உங்களுக்கு திரையில் இருக்கும்.

வழக்கம் போல் படம் சில இடங்களில் மிக மெதுவாகத் தோன்றுகிறதென்று என்னவர் சொன்னார்.. அப்படி எனக்கு எந்த இடத்திலும் தோன்றவே இல்லை என்பதே உண்மை. இறுதிக் காட்சி அடுத்த படத்துக்கான அடித்தளம் போல் அழுத்தமில்லாமல் அமைத்து தன் பாணியை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் அனைவரும் முப்பரிமாணத்தில் கட்டாயம் அந்த சிறுவனுக்காகவே பார்க்க வேண்டிய படம்.

Tuesday, July 27, 2010

இல்லாத இல்..!


இருளோடு இயைந்து
இமை மூடும்
நேரத்தில்
கனவுகள் தொலைத்து
ஒரு பயணம்..

வேரோடு பெயர்த்தெடுத்து
புகுந்த வீட்டில்
வேர்விடும் முன்னே
தாக்கும்
வெட்டுக் கிளிகளின்
விடம்
அன்பிலை பரப்பாமல்
அழிக்கப் பார்க்கும்...

நிம்மதியை நாடி
நிதம் நினைத்து
பதமாக புறப்பட்ட
நாட்களெல்லாம்
கானலானது
கண் முன்னே..

அதிகாலை
அவசர அவதியில்
அப்பாவோடு
போட்டிக்கு நின்று
முதலாய் கிளம்பிய
நாட்கள் கனவில்
நடைபயின்றபடியே..

இளைப்பாற ஓடி
தினம் சாயும்
நாற்காலிச் சண்டை
இனி இல்லை வீட்டில்..

அந்நிய நாட்டிலிருந்து
ஆசையாய் வந்தாலும்
இல்லத்தரிசி என்ற பட்டத்துடன்
இல்லம் மாறியதும்
அந்நியமாகி
மறைந்து போகின்றது
அனைத்துமே..!


--பூமகள்.

Monday, July 19, 2010

ஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு

பொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவர்கள் மறந்தார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஆகவே, அனைவரும் அறிய இப்பதிவு.

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 2 கிண்ணம் (நீரில் நன்று 3 அல்லது 4 முறை கழுவி தண்ணீரை வடித்து வெகு சில துளிகள் தண்ணீருடன் சிறிது உப்பு சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்கவும். இடையிடையே ஜவ்வரிசியை குளிக்கி/பிரட்டி வைக்கவும்)

உருளைக்கிழங்கு - 3 பெரியது (சிறிது உப்புடன் வேக வைத்தது).
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
வறுத்த நிலக்கடலை - ஒரு கை
எலுமிச்சை - 1
சர்க்கரை - 1.5 மேஜை கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்குகளை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வறுத்த நிலக்கடலையோடு இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து இரு சுற்றுகள் வெகு சில வினாடிகள் மிக்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை முழுவதும் பொடியாகாமல் பாதி உடைந்து இருக்க வேண்டும். பின், வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெந்தயம், பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டு தாளித்து பின் கருவேப்பிலையைப் போட்டு வதக்கிய பின் அரைத்து வைத்த கலவையைப் போட வேண்டும். பின் உருளைக் கிழங்கு துண்டுகளை அதில் சேர்த்து நன்கு பிரட்டி வதக்க வேண்டும். இதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளர வேண்டும். பின், அடுப்பை நன்கு குறைத்து சிம்மில் வைத்து ஜவ்வரிசியைச் சேர்த்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மெல்ல கிளற வேண்டும். அதில் எலுமிச்சையைப் பிழிந்துவிட வேண்டும். அதிக நேரம் கிளறினால் ஜவ்வரிசி பசை போல் ஆகி வாணலியில் ஒட்டிக் கொள்ளும். ஆகவே, குறைவான சூட்டில் சில நிமிடங்கள் கிளறி கொத்தமல்லி இலையை கடைசியில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

எல்லாப் பொருட்களும் முன்பே சமைத்தவை.. ஆகவே, மிதமான சூட்டில் ஜவ்வரிசி வதங்கினாலே வெந்துவிடும். அதிக நேரம் ஜவ்வரிசியை ஊற வைத்திருப்பதால், அடுப்பில் அதிக நேரம் கிளற வேண்டிய அவசியம் இல்லை..

சமைத்துப் பாருங்கள்.. கட்டாயம் அடிக்கடி செய்வீர்கள். இதனை வட நாட்டு இந்தியர்கள் விரதம் இருக்கும் காலங்களில் விரதம் முடிந்த பின் உண்பார்களாம். செஞ்சு தான் பாருங்களேன்.

குறிப்பு: நான் இரு முறை செய்து சுவையாக உண்ட பின்னே தான் சொல்கிறேன்.. தைரியமாக செய்யுங்க.. ;-)

Monday, June 28, 2010

டாய் ஸ்டோரி 3 - 3டி (Toy Story 3 - 3D) - [பூ]மகளின் பார்வையில்..






டாய் ஸ்டோரி 3 - 3டி (Toy Story 3 - 3D) - [பூ]மகளின் பார்வையில்..


குழந்தைகளுக்கான கார்டூன் ஐஸ் ஏஜ்ஜுக்கு அப்புறம் எதையும் திரையில் பார்த்த நினைவில்லை.. அதுவும் முப்பரிமாணத்தில் இதுவரை எந்தப் படத்தையுமே பார்த்த அனுபவம் இல்லாததும், அவதாரை முப்பரிமாணத்தில் திரையில் பார்க்க இயலாது போன வருத்தம் என்னுள் நீடித்திருந்ததாலும் டாய் ஸ்டோரியையேனும் எப்படியாவது முப்பரிமாணத்தில் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வரவே இல்லை.. ஹி ஹி.. ஆயினும் வீட்டில் நான் பார்க்க இயலாது விடுத்த படங்களை ஈடு செய்ய இப்படத்துக்கு கட்டாயம் போகலாம் என்று அழைத்துச் சென்று விட்டார்கள்.

முப்பரிமாணத்துக்குண்டான கண்ணாடியை வாங்கிக் கொண்டு திரையரங்கில் நுழைந்தால், அங்கே சில விளம்பரக் காட்சிகளுக்கு அப்புறம் திரையில் உங்கள் கண்ணாடியை அணியுங்கள் என்று ஆங்கிலத்தில் சொற்றொடர் வரவே, அந்த சிவப்பு பிரேம் கண்ணாடியை அணிந்து கொண்டேன். குளிர் கண்ணாடியை விட அதிக கருப்பாக இருந்த காரணத்தால் திரையைத் தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை..

அப்புறமாவது படத்தைப் போடுவாங்க என்று ஆவலோடு பார்த்தால் விரைவில் வர இருக்கும் படங்களுக்கான திரைக்காட்சிகள்.. அதுவும் முப்பரிமாணத்தில்..

எப்போது எழுத்து போட்டு ஆரம்பிப்பார்கள் என்று சோர்ந்து போய் அமர்ந்த வேளையில் படத்தைப் போட்டே விட்டார்கள்..

டாய் ஸ்டோரியின் முதல் இரு பாகங்கள் நான் பார்த்ததில்லை ஆதலால் முன் கதை எனக்கு தெரியாது என்ற கவலை வேறு மனதில் ஓட படத்தைக் காண தயாரானேன்.

ஒரு வாலிபன், கல்லூரிக்காக முதன் முதலில் வேறு ஊருக்குச் செல்ல ஆயத்தமாகிறான்.. அவன் விளையாடிய பொம்மைகள் ஒரு பெட்டியில் தூங்குகின்றன..



அந்த பொம்மைகள் அவனுக்கு பழைய கால நினைவலைகளை எழுப்புகின்றன.. வெகு பிடித்தமான கவ் பாய் பொம்மை அவனது உற்ற தோழன் போல் உடனேயே இத்தனை காலம் இருக்கிறது.

இந்த கவ் பாய் தான் படத்தின் ஹீரோ. ஹீரோயின் - பாஃர்பி பொம்மை, சின்ட்ரெல்லா மற்ற துணை கதாப்பாத்திரங்களாக டைனோசர், ஏலியன்ஸ், குதிரை, பன்னிக் குட்டி, விண்வெளி வீரன், ஸ்பிரிங் நாய்க்குட்டி, கிழங்கு ஜோடிகள் என பல பாத்திரங்கள் நம்மை நடிப்பில் அசத்துகின்றன..





பொம்மைகள்
விளையாடி முடித்தபடியால் அவை தேவையற்றவை என்று சொல்லி குழந்தைகள் காப்பகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம் என அந்த வாலிபனின் அம்மா வற்புறுத்த, வாலிபனோ தனக்கு மிகப் பிடித்தமானவை என்று சொல்லி பரணில் போட பொம்மைகளை மூட்டை கட்டுகிறான்..

அச்சமயம், தனது தங்கைக்கு உதவ சென்று விட, பாதியில் வைக்கப்பட்ட அந்த மூட்டை குப்பை என்று அம்மாவால் கருதப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன. கவ் பாய் மட்டும் இம்மூட்டையில் மாட்டாமல் இவர்களைக் காப்பாற்ற பின் தொடர, குப்பையை எடுக்கும் லாரி வரும் வேளையில் பொம்மைகள் தப்பித்து மீண்டும் வீடு நோக்கி வருகின்றன.. கவ் பாய் ஆனந்தமாகிறான்..

பின்பு எல்லா பொம்மைகளும் அந்த வாலிபனின் தங்கை பொம்மைகளோடு சேர்க்கப் பட்டு சன்னி சைட் எனப்படும் குழந்தைகள் காப்பகத்துக்கு வருகின்றன..



அங்கே வயதான கரடி, அழகான வாலிபன், குழந்தை மற்றும் ஆக்டோபஸ் போன்ற பொம்மைகள் ஏற்கனவே தனது ராஜ்ஜியத்தை செவ்வனே அமைத்து வாழ்ந்து வருகின்றன..
அவைகளோடு சேர்ந்தனவா.. அங்கிருக்கும் குழந்தைகளாலும் சுற்றத்தாராலும் என்னென்ன இடையூருகளைச் சந்தித்தன.. எப்படியெல்லாம் சிந்தித்தன என்பதை மனதையும் சிந்தையையும் தொடும் விதத்தில் தொய்வில்லாமல் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆங்காங்கே, நல்ல நகைச்சுவையும் தெறிக்கிறது. அரங்கத்தில் அதிரும் சிரிப்பொலிகளை அவ்வப்போது பெரியவர்களிடமிருந்தே கேட்க நேரிட்டது.. நானும் அதில் அடக்கம்.

தனது வீட்டை விட்டுச் சென்ற பொம்மைகள் திரும்பி வீட்டுக்கு வந்தனவா? அவை செல்லாக்காசுகளாகக் கருத்தப்பட்டு வீசப்பட்டதாக எண்ணி வர மறுத்தனவா என்பது போன்ற நுணுக்கமான உணர்வுகளும், படத்தில் பார்ஃபி பொம்மையால் அழகிய காதல் காட்சிகளும் கருத்தைக் கவர்கின்றன.

படத்தில் கரடிக்கு வரும் ஃபிளேஸ் பேக் நகைச்சுவையாக சிரிக்க வைத்தது.. நம் தமிழ் படங்களின் பிளேஸ் பேக்குகளோடு ஒப்பிட வைத்தது.. ஆயினும் நாம் முதலில் விளையாடிய பொம்மை பற்றிய எண்ணம் வரத் தவறவில்லை..

கிழங்கு முகம் கொண்ட இரு பொம்மைகள் நகைச்சுவையில் நம்மைக் கட்டிப் போடுகின்றன.. முகத்தில் ஒரு கண்ணைத் தொலைத்தும், முகத்தையே தொலைத்து சப்பாத்தி மாவில் தனது கண், காது, மூக்கு, வாய் இவற்றை பொறுத்தி நடக்கும் தருணத்தில் புறாவால் கொத்தப்பட்டு கிழிந்த முகத்தோடு விழும் காட்சியிலும் சிரிப்பு அள்ளுகிறது.

2 மணி நேரம் சிறு குழந்தையாக நீங்கள் மாற எண்ணினால் கட்டாயம் இப்படத்தை முப்பரிமாணத்தில் திரையில் காணுங்கள்.. நிச்சயம் நீங்கள் குழந்தையாக உங்களை உணர்வீர்கள்.

மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பிய படம்.. மனதின் அடியில் நன்கு பதிந்துவிட்டது.. அடுத்த டாய் ஸ்டோரிக்காக காத்திருக்கத் தயாராகிவிட்டேன்.

Tuesday, May 18, 2010

அவதார் - திரை விமர்சனம்




ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு, இன்னும் எல்லார் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் படத்தை நான் என்னவோ சென்ற வாரம் தான் புளூ ரே தொழிற் நுட்பத்தில் அதி துல்லியமாக இரு பரிமாணங்களில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. திரையரங்கில் பார்க்க இயலாத சூழலால் இத்தனை காலம் காத்திருந்த எனக்கு சொர்க்க லோகம் சென்ற உணர்வை படம் ஏற்படுத்தத் தவறவில்லை.

படத்தின் நாயகன் தனது வெகு எதார்த்தமான நடிப்பாலும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். பெண்டோரா கிரகத்தில் இருக்கும் புது விதமான நாவி இன ஜீவராசிகள், அந்த கிரகத்தின் இயற்கை கொண்டிருக்கும் அழகு, அவர்கள் இருக்கும் அந்த வெள்ளைப் பூ, விழுதுகள் கொண்ட ஒளிரும் கடவுள் மரம் என நம்மூர் மாயஜாலக் கதைகளைக் கண் முன் விரிய வைத்து வாய் மூடாமல் பார்க்க வைத்த அத்தனை தொழிற் நுட்பக் கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வாழ்த்த வேண்டும் போல் தோன்றுகிறது.

எப்போதும் ஏலியன்ஸ் எனும் வேற்று கிரக ஜீவராசிகள் நம் கிரகத்தை ஆக்ரமிப்பது போலே சிந்தித்துக் கொண்டிருந்த ஹாலிவுட் இப்போது முதல் முறையாக மனிதர்கள் வேற்று கிரகத்தை நோக்கிப் படையெடுப்பது போல் அமைத்திருப்பது வித்தியாசத்திலும் வித்தியாசம்.

மனிதர்கள் அவதாராக மாறி அந்நாவி இனத்தோடு சேர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருக்கும் கனிம வளத்தைக் கொள்ளை அடிக்கும் திட்டத்தோடு மில்லிட்டரி படையும் அறிவியலாளர்களும் சேர்ந்து பெண்டோரா கிரகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.

கதா நாயகர் அறிமுகமும் அவர் அவதாராக இயங்கி நாவி இனத்தோடு சேர்ந்து பயிற்சி பெறுகையில் நடக்கும் குறும்புகளும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. அப்படி மாறுவது மாட்டிரிக்ஸ் படத்தில் வருவது போலவே மூளை கொண்டு அவதாரை இயக்கும் படி அமைத்திருக்கிறார்கள். தொட்டால் ஒளிரும் பூக்கள், நடக்கும் போது ஒளிரும் புல்வெளி, வண்ணமயமான மரங்கள், பூக்கள், தொங்கும் மலை, விழுதுகளில் முன்னோர் சத்தம் கேட்கும் திறன் என இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை காணுகையில் நாம் எத்தனை இயற்கை அன்னையை தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.

கதா நாயகன் அவதாராகி ஒரு இடத்தில் அக்கிரக நாய்களோடு போராடி கொன்று போடுகையில் உடன் உதவ வரும் நாவி இன கதா நாயகியிடம் நாயகன் நன்றி சொல்ல, அதற்கு நன்றி சொல்லும் காரியம் செய்ய வில்லை நாம். இது நடந்திருக்கக் கூடாது.. இம்மிருகங்கள் தேவையில்லாமல் இறந்து விட்டன என்று சொல்லி சில மந்திரங்கள் சொல்லி அதன் ஆன்மாக்கள் சாந்தியடையச் செய்யும் நாயகி மனதில் உயர்ந்து நிற்கிறார். அவர்கள் கிரகத்தின் இயற்கை மேல் அவர்கள் கொண்ட அன்பும், அவர்களின் வாழ்க்கை அதனோடு இயைந்து போன மாண்பும் படமெங்கும் கண்டு வியக்க வைத்தது. நம்மில் இழந்து கொண்டிருக்கும் மர நேசம் நாயகி மூலம் படத்திலேனும் காண நேர்ந்தது.

படத்தில் வரும் மிருகங்கள் எனில், ஆங்காங்கே வரும் காட்டு யானை, நீண்ட வித்தியாசமான தந்தம் போன்ற எழும்பமைப்புடன் வந்து அசர வைக்கிறது.. கூடவே பச்சை, நீலம், சிவப்பு வண்ண ராட்சஸ பறவைகள், விசிறி போல் பறக்கும் பூச்சி, ஒளிரும் பூச்சிகள், காண்டாமிருகம் போன்ற மிருகம், ஓ நாய்கள், குதிரைகள் என அனைத்துமே வித்தியாசமான கற்பனைத் திறனில் படைக்கப் பட்டு கண்களுக்கு விருந்தாகிறது.

மனிதர் நினைப்பதை செய்யும், குதிரை, வண்ண ராட்சஷப் பறவை என எல்லாமே அசர வைக்கிறது.

மனிதப் படை அந்த கடவுள் மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கையில் ஏனோ என் கண்களிலும் ஈரம் பனிக்கிறது.. அதுவரை அத்தனை அழகான வனமாக இருந்த அந்த இடம், சிறிது நேரத்தில் மூச்சு முட்டும் கரும் புகையோடு சாம்பல் காடாக காணுகையில் மனம் துடிக்கிறது.. ஏனோ நம் ஊரில் சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் பல நூறு பெரும் மரங்களை வெட்டி, வெகு சில அரளிச் செடிகளை நட்டுச் சென்ற நமது அரசு நினைவுக்கு வந்து மேலும் வேதனைப்படுத்தியது.

ஒரு இடம் பசுமையாய் இருக்கையிலும், சாம்பல் காடாய் மாறுகையிலும் பார்ப்பதற்கு நிறைய திடம் வேண்டும்.. அந்த திடம் என்னிடம் இப்படம் பார்க்கையில் இல்லாமல் போனதை உணர முடிந்தது.. அதுவரை அத்தனை அழகான கிரகமாகக் காட்டப்பட்ட பெண்டோரா, மனிதர்களின் தாக்குதலால் எப்படி சிதறடிக்கப்படுகிறது என்று இதை விட எவரும் துல்லியமாகக் காட்ட முடியாது.

கதா நாயகன் போன்றே இந்த கிரகத்தின் மீது தீராத பாசமும், காதலும் கொண்ட மற்ற மனிதர்களும் எப்படி தங்களது முயற்சியை மேற்கொண்டு பெண்டோராவைக் காப்பாற்ற முற்படுகிறார்கள் என்பதை வெகு அழகான கோர்வையான படமாக்கல் மூலம் அசர வைத்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கதா நாயகருடன் வரும் வயதான பெண், வில்லனாக வரும் மில்லிட்டரி படை கேப்டன் முகத்தில் இருக்கும் வித்தியாசமான காயத்தாலும், கடும் உறுதி படைத்த முக பாவத்தாலும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.



கதா நாயகன், அவருக்கு உதவும் ஹெலிகாப்டர் ஓட்டும் பெண், அவன் நண்பர் இருவர் என நால்வர் படை எப்படி மனிதர்களின் தாக்குதலை எதிர் கொள்கிறது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேர்கள் கொண்டு அவர்கள் காட்டும் ஒரு முக்கிய காட்சி அசர வைக்கிறது.. நம் ஆணி வேர் வரை பாயும் அவரது கற்பனைத் திறன் சிலிர்க்க வைக்கிறது.

படத்தை முப்பரிமாணத்தில் காணாதது வெகுவான வருத்தத்தை எனக்கு அளிக்கிறது.. என்றாவது பார்த்து விடுவேனென மனதில் நம்பிக்கை மட்டுமே நிலைக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இப்படத்துக்காக ஒரு புதிய வகை கேமிராவைக் கண்டறிந்தார் என கேள்விப்பட்டேன். இத்தனை வயதிலும் எத்தனை விடா முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் இவரால் இது சாத்தியமாகும் என எண்ணி எண்ணி வியக்கிறேன்.

அவதார் - நிச்சயம் அவதாராக மாறி ஒரு நாளேனும் அக்கிரகத்தில் உலவும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைக்கிறது.. இது எட்டாக் கனியாகினும், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை முடிந்த வரைக் காக்கவும், அழிக்காமல் தடுக்கவும் செய்தால் அதுவே நமக்கு பெண்டோரா போன நிறைவைத் தரும் என்பது திண்ணம்.

அவதார் - ஐ சீ யூ. ( ஐ சீ யூ என்றால் நாவிகள் பேசும் மொழியில் லவ் யு என்று அர்த்தமாம்..)

Wednesday, April 21, 2010

கரைந்த அன்பு…!



அன்றும் அதே
புன்னகையோடே
விடைபெற்றாய்..

இறுதியில் இனிக்கும்
நெல்லிக்கனியாய்
இனிக்காமல் போனது
உன் முத்தம் அன்று..

நீ தந்த முத்தக் குவியலை
முகர்ந்து பார்க்கிறேன்
உன்னிடமிருந்து நான்
ஆசையாய் கேட்டு வாங்கிய
கைப்பையில்…

இறுகப் பற்றிய
உன் விரல் இடுக்குகள்..
கொடுத்த நடுக்கம்
இன்னும் என்
விரல்களில் மிஞ்சி நிற்கிறது..

நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..

வரவேற்கத் தேடும் உன் விழி
தொலைந்து போன
அந்த முற்றம் நிரம்பிய
சோகம் தாளாமல்..

இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!

உறைந்த நிமிடம்..!



வெயில்
பொழுது
துயில் கொள்ள
சாய்வுநாற்காலி தேடி
தோய்ந்து இருந்தது

கடலின் அருகில்..!

தூரத்து வானின்
கருத்த சீலையால்
மறைக்காத இடங்கள்
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!

எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!

சிறுத்தையின் வேகத்தில்
சீறி வந்தாய் என் முன்..!
சிருங்கார பார்வையில்லை..!
சிரிப்பூட்டும் இதழில்லை..!

புரியாமல் பார்க்கின்றேன்..!
புரிந்தே நீ காண மறுக்கும்
என் விழியோர நேர்பார்வை..!
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..!

"விலகிப்போ...மறந்துபோ..."
வார்த்தை சொல்லி

விலகி நின்றாய்..!

இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

மேகத்துக்கு எப்படிக் கேட்டது??
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..!

என் உயிர் பிய்த்து

உடல் மட்டும் சவமாய்

உறைய வைத்து

விட்டுச் சென்றாய்..!

சிதறிய கண்ணீர் மழைநீரோடு

மெல்ல உரையாடியது..!
வெகு நேரம் நின்று மழையோடு

விவரம் சொன்னேன்..!

வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்
இதயத்து வலியோடு..!

சாலைகள் புதிதாய்..!
மழை மட்டும் என்னோடு
மருளாமல் துணையாய்..!

யாருமில்லை.. எவருமில்லை..!
இருட்டத் துவங்கும் தூரம் வரை
இரு காலும் இலக்கின்றி
நடந்து சோர்ந்தது..!

ஏதோ ஒரு கடை..!
உள்ளும் புறமும்
ஈரத்தோடு நுழைகிறேன்..!

உள்ளே அழுதாலும்
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்..
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..!
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!

மனம் கேட்டது!
உன் "நினைவு வெட்டி" கருவி!

வானம் வாஞ்சையோடு
வன்மழை மள்கி
மெல்லிய தூறலாக்கி
மனம் லேசாக்கியது..!

தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!

Thursday, April 15, 2010

புன்னகைக்குப் பின்னால்…!!


எழுதி பல நாட்கள் ஆனதாலோ என்னவோ, எதைப் பற்றி எழுத வேண்டுமென்ற தீர்மானம் போடுவதற்கே பல காலம் எடுத்துக் கொள்கிறது மனம்… இதோ இதைப் பற்றி கட்டாயம் எழுதியே ஆகவேண்டுமென்று அமர்ந்துவிட்டேன்..

வெளி நாட்டில் அக்கம் பக்கத்தில் இருக்கும் வேற்று நாட்டவரோடு வெறும் புன்னகையை மட்டுமே உதிர்த்து வாழ்க்கை நடத்தும் பலரைப் போலவே, நானும் வாழ என்னைத் தயார் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் என்னை புன்னகை பூத்து வரவேற்றது ஒரு பிலிஃபைனியப் பூ. அவர் பெயர் நினைவில் இல்லை.. ஆனால், எப்போதும் துறு துறுவென்று ஓடிக் கொண்டும், அந்த ஓட்டத்துக்கு இடையிலும் என்னை நோக்கி ஒரு புன்னகை பூத்துக்கொண்டும் இருக்கும் அவரோடு பேச மனம் ஏங்கியது..

அந்த கனவு, இத்தனை மாதங்கள் கழித்து ஈடேறியது.. வெறும் நட்பு பார்வைகளை மட்டுமே பரிமாறிக் கொண்ட எங்களுக்குள் பேச்சு தொடங்கப்பட்டது ஓர் பொன்னாளில்..

அவரின் பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னால், மீண்டும் சில நாட்கள் கழித்து என் வாசலில் மீண்டும் அவர் கடந்து போகையில் பேச வாய்ப்பு கிடைத்தது..

அவர் எப்போதும் மலர்ந்த முகத்தோடு, அழகிய குதிரை வாலோடு ஓட்டமும் நடையுமாக ஓடி வருகையிலும் என்னைப் பார்த்ததும், முகம் மலர்ந்து பேசலானார். அவரின் கையில் பார்த்த விளையாட்டுப் பொருளைப் பார்த்து ஆச்சர்யம் எனக்கு… கையில் ஸ்கேட்டிங் வீல்ஸ்.. இப்போது தான் சிறுவர்களோடு விளையாடிவிட்டு வருவதாக அவர் கூறுகையில் இருந்த அந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது.. தான் வீட்டுப் பணியாளினியாக இருப்பதாகவும், கூடவே இளங்கலைப் பட்டம் படிப்பதாகவும் தெரிவித்தார். அது நாள் வரை நான் அவரை அவ்வீட்டில் இருக்கும் நபர் என்றே நினைத்திருந்தேன்.. எட்டு வயதிலும் ஆறு வயதிலுமான தனது இரு மகள்கள் தன் அம்மாவுடன் ஃபிலிபைனில் இருப்பதாகத் தெரிவித்தார்.. என்னால் நம்பவே முடியவில்லை.. காரணம், அவர் அத்தனை இளமையாக இருந்தது தான்… குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் போன் பண்ணுவதற்கே வருத்தமாக இருக்கிறது.. எப்போது போன் செய்தாலும், எப்போ அம்மா வருவீங்க.. என்று குழந்தைகள் அழுவதை கேட்க முடியவில்லை என்று அந்தத் தாய் சொல்கையில் என்னவோ போல் செய்தது என் மனம்…

எதார்த்தமாக பேச்சு வளர்ந்து கொண்டே போகையில், உங்கள் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்ற கேள்வியைத் தொடுத்தேன்.. தனது இரண்டாவது குழந்தை ஒரு வயதாக இருக்கையில் இறந்து விட்டார் என சொல்கையில் அந்த விழிகளில் தெரிந்த வலியும், வலிமையும் என்னை நிலைகுலையச் செய்தன.. அவ்விடத்தில், அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறேதும் பேச வாயெழாமல் கண்கள் பனித்தது எனக்கு.. அவரே தொடர்ந்தார்.. குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக அவரை இழந்து வாழ்வது ரொம்பவே கடினமெனச் சொன்னார்.. அவ்விடத்தில், 'மொழி' படத்தில் பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யாவிடம் அவர் கணவர் பற்றி கேட்கையில் சொர்ணமால்யா எப்படி கண்கள் பனிக்க, தன்னம்பிக்கையோடு பதில் சொன்னது நினைவு வந்தது.. அதே போல் பதிலளித்தார்.. தான் விரைவில் படிப்பு முடித்து, நல்ல அலுவலக வேலையாகப் பார்க்கப் போகிறேன் என்று அவர் சொல்கையில் இருந்த தன்னம்பிக்கையும் தன் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமென்ற வைராக்கியமும் மனம் நெகிழச் செய்தன..

நன்கு படித்து நிச்சயம் நல்ல வேலைக்கு செல்வீர்களென அவரை உற்சாகப்படுத்தினேன்.. தனக்கு நிறைய நல்ல நண்பர்கள் என் நாட்டிலிருந்து கிடைத்திருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தார்.. நானும் அவரின் நட்பு வட்டத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தது மனம்..

அவரின் இவ்வளவு அழகான புன்னகைக்குப் பின்னால், இத்தனை பெரிய வலியும் இழப்பும் இருக்குமென நான் அணுவும் நினைக்கவில்லை.. அவரின் நட்பு எனக்கு இந்நாட்டில் கிடைத்த குறிஞ்சிப் பூ என்று சொன்னால் அது மிகையில்லை.

நட்புடன்,
பூமகள்.

Thursday, March 25, 2010

கணினித் தோட்டம் -- ஒரு கண்ணோட்டம்


இணையம் வந்த பின்பு, இணைய வழி விளையாட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்தவண்ணமே இருக்கின்றன. பொதுவாகவே, இயற்கை மீதான என் பற்று அதிகம்.. அதை பல இடங்களில் என் நிஜவாழ்க்கையிலேயே உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்..

இறைவன் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், எனக்கு டார்வின் கொள்கை மீதும், இயற்கை கொடுத்த பரிணாம வளர்ச்சியின் மீதும் நம்பிக்கை அதிகம். ஆக, என்னைப் பொறுத்த வரை, இயற்கை நம் வாழ்வின் ஆதாரம். ஆணி வேர்.

சமீபத்த்தில், இணைய வழி நட்பு வட்டத்தை ஓர் இடத்தில் இணைக்கும் பாலமாக விளங்கும் பேஸ்புக் என்றதளத்தில் ஓர் விளையாட்டு எதேட்சையாக காண நேர்ந்தது. அவ்விளையாட்டின் பெயர் ஃபாம் வில்லே.(FarmVille). இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், கணினித் திரையினுள் உங்களுக்கான ஓர்தோட்டம்.

அந்த ஃபாம் வில்லேயில் உங்களுக்கு பிடித்த காய்கறி, கனிகள், மரம், செடி, கொடி, பூக்கள் என ஒவ்வொருபடியாக முன்னேறுகையிலும் பயிறிட்டுக் கொண்டே போகலாம். உங்களுக்கென்று சொந்தமாக வீடு, தங்கக்குவியல் என அமர்க்களப்படுத்தலாம். அதாவது, ஓர் வெற்று நிலத்தை உழுது, பயிறிட்டு, உரமிட்டு, அறுவடைக்கான கால இடைவெளி விட்டு தகுந்த நேரத்தில் அறுவடையும் செய்யலாம். இத்தனையும் கணினியின் உள்ளேநிஜத்தில் தோட்டம் வைக்கக் கூட இடமில்லாத அடுக்குமாடி குடியிறுப்புகளில் இறுகியிருக்கும் மனங்கள் இந்த விளையாட்டில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பது இயல்பே.

இவ்விளையாட்டை விளையாடும் போதெல்லாம், என் அடிமனதில் ஓர் ஓரத்தில் இயற்கை சார்ந்த சமூகப்பிரச்சனைகளும் நினைவுக்கு வருவது உண்மையே.

1. இங்கே இத்தனை மரங்களை நட ஆர்வமாக இருக்கும் நாம், எத்தனை போராடியும் நம் வீட்டின் முன்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட சாலையோர மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறமும்,

2. பல வருடங்களாக, நிழல் கொடுத்து, பல பறவைகளுக்கு வீடாகவும், நெடுஞ்சாலையின் வாகனப்புழுதியையும் புகையையும் போக்கும் அரணாகவும் விளங்கிய பல நூறு மரங்களை ஒரே நேரத்தில் சாலையகலப்படுத்துவதற்காக வெட்டி வீழ்த்திய அரசை எதிர்த்து ஒருகுரலும் எழுப்பாமல் விட்ட கோபம் மறுபுறமும்,

என இயற்கை மீதான என் பற்று நீண்டுகொண்டே போகிறது. ஆனால், இந்த ஃபாம் வில்லே பார்த்த பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாய நிலங்கள், அத்தனை விளை நிலங்களும் விலைபோய் அடுக்குமாடிகள் ஆகி மழை அருகிவரும் இவ்வேளையில், எனது இந்த பதிவும் முக்கிமானதாகவே படுகிறது.

இனி கணினியில் மட்டுமே மரங்களை வளர்த்தும், வயலமைத்தும் பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழுகிறது. அத்தகைய அச்சத்தில் இருக்கும் உண்மையும் ஓங்கி உறைக்கவே செய்கிறது.

அந்த நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம் என்ற சிறு எண்ணப்பொறியை உங்களுக்குள் என் இப்பதிவு உருவாக்குமேயாயின் நான் கடுகளவேனும் மகிழ்வேன்.

என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்களேன்.. மாற்றத்தை எங்கிருந்து கொண்டு வரலாம்.. எப்படிகொண்டு வரலாம்????


அன்புடன்,
பூமகள்.

Saturday, March 13, 2010

வந்துட்டோம்ல..!!

என்னங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நானும் நலமே. சொந்த காரணங்களால சில மாதங்களா என்னால எழுத நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது… இப்போது கொஞ்சமேனும் ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்கிட்டேன்..

எழுதி ரொம்ப நாள் ஆனதாலோ என்னவோ எதைப் பத்தி எழுதறதுன்னே புரியலை.. ஏன்னா.. அத்தனை விசயம் மூளையில வந்து முண்டியடிக்குது..

எனக்கும் எழுத்துக்குமான இந்த பெரிய இடைவெளி எந்தளவுக்கு என்னைப் பக்குவமாக்கியிருக்குதுன்னு தெரியலை.. நிறைய விசயங்களை நான் இழந்திருக்கேன்.. பெற்றும் இருக்கேன்..

நிறைய அனுபவம்.. புதிய தைரியம்.. துயரம்.. மகிழ்ச்சி.. என கலந்த கலவையா இந்த இடைவெளி நிரம்பியிருக்கு..

எல்லாவற்றைப் பற்றியும் எழுதனும்.. எழுதுவேன்..

இத்தனை நாளும் ஏக்கத்தோடு என் ப்ளாக்குக்கு வருகை தந்து படிக்கக் காத்திருந்த என் இனிய வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்க.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் விசயத்தோட வந்துட்டோம்ல…!! ;-)