RSS
Showing posts with label இதர படைப்புக்கள். Show all posts
Showing posts with label இதர படைப்புக்கள். Show all posts

Tuesday, March 26, 2013

நானும் என் டேலியாக்களும்..!!


நானும் என் டேலியாக்களும்..!!



     இது என் பால்ய கால நிகழ்வுகளில் மிகப் பிடித்தமான ஒன்று.. எனது ஆரம்பப் பள்ளி நாட்கள் முதலென்று கொள்ளலாம்.. எங்கள் தெருவில் தினமும் ஒரு பூ வியாபாரி தனது மிதி வண்டியில் மூங்கில் கூடை மற்றும் மூங்கில் தட்டு நிறைய வண்ண வண்ணப் பூக்களோடு காலை நேரங்களில் வருவார். சுமார் எட்டு எட்டரை மணியளவில் அவரை எங்கள் தெருவில் கட்டாயம் பார்க்கலாம். அவர் பெரும்பாலும் பன்னீர் ரோஜா வகைப் பூக்களைக் கொண்டு வருவார். ஒன்று நாலேனா வீதம் ரூபாய்க்கு நான்கு பூக்கள் தருவார்.. அதன் மணம், மனம் நிறைக்கும். பல நாட்களில் உதகை ரோஜா வகைகள் கொண்டு வருவார்.

     வித்தியாசமான சில நாட்களில் பல வண்ண நிறங்களில் டேலியா  மலர்களைக் கொண்டு வருவார். அப்போது அவர் சத்தம் கேட்டவுடன் ஓடும் நாங்கள், அவர் வைத்திருப்பது டேலியா என தெரிந்தால் இன்னும் அடித்துப் பிடித்து ஓடி அவரை நெருங்குவோம்.. அவரோ வீதியின் சரியான மையப்புள்ளியில் நின்று கொண்டிருப்பார். அங்கு இருப்பவர்கள் முதலே வந்து பிடித்த மலர்களைக் கவர்ந்து கொள்ள, நாங்கள் செல்கையில் மீதமிருக்கும் பூக்களுக்கு அடிதடி நடக்கும்.. பெரும்பாலும் எங்கள் வீதியிலேயே நான் தான் மிகச் சிறியவளாக (இப்போ மட்டும் என்ன..??!! )இருந்த காரணத்தால் என் அன்பு அக்காக்கள் எனக்கு நல்லப் பூக்களைத் தாமே தேடிக் கொடுக்கவும் செய்வார்கள்.. அப்போதிருந்தே டேலியாக்கள் மேல் தீராத தாகம் எனக்கு...

     இரட்டை ஜடை பின்னில் இட்டு, ரிப்பன் வைத்து அதில் டேலியா வைத்துப் பள்ளிக்குப் போகும்போது, கை தானாக தலைக்குச் சென்று பூவைத் தொட்ட வண்ணமே இருக்கும்.. அன்று முழுக்க அந்த டேலியா பற்றிய நினைவாகவே இருக்கும். பக்கத்திலிருக்கும் தோழியிடம் மதியப் பொழுதில் “வாடிருச்சா டி?!” என்று கேட்டு கண்ணாடி இல்லாத குறை போக்குவேன்.. அடிக்கடி டேலியாப் பூ வாங்க அப்போதைய வீட்டின் நிதித் துறை யோசிக்க, எப்போதேனும் கிடைக்கும் டேலியா மேல் தனிக் காதல் பிறந்தது இயல்பு தான் அல்லவா??!!

     பள்ளிக் காலம் முடிவதற்கு முன்பே வீடு மாற்றி, ஒரே ஊரில் சொந்த வீட்டுக்கு குடி போன போதும், மகிழ்வையும் தாண்டி அன்பான சுற்றமும், என்னைக் கவர்ந்த டேலியா பூ விற்கும் வண்டிக்காரர் வருகையையும் இழந்து அங்கு நிறைய நினைந்து வருந்தியிருக்கிறேன். உதகைக்கு போன நாட்களில் அங்கு தாவரவியல் பூங்காவிலிருந்து டேலியா விதைகள் வாங்கி வந்து நடவிட்டு, பின் பத்து நாட்களாக இரவும் பகலும் அந்த இடத்தையே நோட்டமிட்டு, ஏமாந்த காலமும் உண்டு. இப்போதும் பூ சந்தைக்கு என் வீட்டிலிருந்து யார் போனாலும் முதலில் சொல்லுவது “டேலியா வாங்கி வாங்க...!” இதைக் கேட்டு என் அத்தை ஒரு முறை, இந்த காலத்திலும் டேலியா விரும்பும் ஒரு பெண்ணா என்று சிரித்தபடி கேட்டே விட்டார்.. எந்த காலமானால் என்ன, பூவுக்கு பூ பிடிப்பதில் ஆச்சர்யம் இல்லை தானே??!!

அன்புடன்,
பூமகள்.




மைப் பேனாவும் நானும்..!!


மைப் பேனாவும் நானும்..!!

 


     இந்த முறை இந்திய பயணத்தில் போன தடவை விட்டு வைத்த சில பலத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன்.. அந்த சிலதில் சீனிப்புளியங்காய், நொங்கு, அப்புறம் பேனா.. அதுவும் லெட் பேனா கூடாது.. பள்ளி நாட்களில் மை ஊற்றி எழுதுவோமே அந்த பேனா.. சென்ற முறை இந்தியப் பயணத்தில் வாங்காமல் வெறுமணே பார்த்து விட்டு மட்டும் வந்தேன்.. காரணம், பேனாவில் தாளில் எழுதி வெகு வருடம் ஆனது தான்..

     பள்ளி நாட்களில்.. மை பேனாக்களுக்கு இருக்கும் வரவேற்பு அலாதி. அதிலும் கண்ணாடி வைத்த பேனா வைத்திருந்தால், அதில் எழுதும் அழகே தனி தான்.. மை அளவை அதில் பார்த்து பார்த்து எழுதியும், சில துளிகளை தோழிகளிடம் கடன் பெற்றும் எழுதும் நாட்கள் மனக்கிடங்கில் சுமந்துகொண்டிருக்கும் வசந்தமான நினைவுகள்..



     முதன் முதலில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்காக அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த ஹிரோ பேனா தான் மிக பத்திரமாக என்னால் பாதுகாக்கப்பட்ட ஒன்று.. பின்னர் அதன் போலவே கருஞ்சிவப்பு நிறத்தில் அடுத்த பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கும் அப்பா வாங்கித் தந்தார்.. அப்போதெல்லாம் எழுத்து மிக அழகாய் வருவது மை பேனாவில் எழுதினால் மட்டுமே. லெட் பேனா எனக்கு அவ்வளவு வசப்பட்டதில்லை..

     புது நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் பெயர் எழுதி பின் மை பேனாவால் எழுதும் ஆவல் மனதில் நீங்காமல் பசுமையாக இருக்கிறது இன்றும்.. அத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டி, இம்முறை கடைக்கு வேறு பொருள் வாங்கச் சென்று பின் போன முறை பார்த்த அந்த பேனாவின் மேல் நாட்டம் வந்தது.. ஒரு மை பேனாவும் ஹிரோ பேனாவும் வாங்கியாயிற்று.. மைப் புட்டி மாத்திரம், கொண்டு வர எதுவாக இருக்காது என்றெண்ணி வாங்காமல் விட்டு விட்டோம்.. ஒரு சிறிய நோட்டு, ஒரு பெரிய நோட்டு என்று சில நோட்டுகளும் வாங்கியாயிற்று.. அதையெல்லாம் வாங்கும் பொது இருக்கும் மகிழ்ச்சி.. பள்ளித்துவக்கத்தில் புதிய நோட்டுகளும் புத்தகங்களும் வாங்கும் பொது வருமே.. அத்தகைய ஒரு மகிழ்ச்சி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. சில நேரங்களில் வெகு சின்னச் சின்ன விசயங்கள் கூட நம் மனதுக்கு அளவில்லா மகிழ்ச்சி தரும் இல்லையா?!!

     பேனாவும் நோட்டுப் புத்தகமும் காத்துக் கொண்டிருக்க, மைப் புட்டிக்காக மனம் தேடிக் கொண்டிருக்கிறது. இங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏக்கத்தோடு பேனாவைத் தடவிக் கொடுத்தபடி நான்..!!

அன்புடன்,
பூமகள்.

Sunday, May 1, 2011

உழைப்பாளர் திருநாள் வாழ்த்துகள்..!!




உலகம் துவங்கிய காலம் முதல்..
பாறை கல்லாகவும்..
கல் மணலாகவும்..
மணலில் உயிர் உருவாகவும்..

உயிர் அமீபாவாகவும்..
அமீபா இருசெல்லாகவும்..
இருசெல் பல்லுயிராகவும்..

எல்லாமும் ஆக..
எல்லாவிடத்தும் என்றும்
இருந்து கொண்டே இருப்பது..

இன்றும்.. என்றும்..
உருவாக்கங்களின் பின்னால்
உருவமற்று ஒளிந்திருக்கும்
ஓர் அற்புதம்..
உழைப்பு..

அவ்வுழைப்பின் மகத்துவம் போற்றாதோர் யாருளர்??

சாக்கடை அள்ளுபவர் முதல்..
சால்னா செய்பவர் வரை..

வீதி கூட்டுபவர் முதல்..
பத்தி விற்பவர் வரை..

தார் சாலை போடுபவர் முதல்..
கூரை போடுபவர் வரை..

படிப்பவர் முதல்..
படிப்பிப்பவர் வரை..

உழுபவர் முதல்..
பயிர் அறுப்பவர் வரை..



இன்னும் ஆயிரம் ஆயிரம் வேலைகள் தன் கடமை தவறாது உழைக்கும் மனிதம் ஏராளம்..

எல்லாரிடத்தும் குவிந்து கிடக்கும் உழைப்புக்கு என் வாழ்த்துகள்..!!


உலகத்தினைப் புரட்டிப் போடும் வன்மை கொண்ட உழைப்பை சீரிய முறையில் சிறப்புற செய்யும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்..!!

உலகம் உண்மை உழைப்பாளர்களை என்றும் வணங்கட்டும்..!!

--பூமகள்.

Friday, April 8, 2011

ஈரம்...!! - சிறுகதை


"யார் மனசிலையும் ஈரமில்ல" என்ற வசனத்தை அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி ஒளி,ஒலி வடிவில் உமிழ்ந்து கொண்டிருந்தது..

மீரா அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் அவள் கண்கள் கலங்கி தொலைக்காட்சித் திரையை தெளிவில்லாமல் காட்டிக் கொண்டிருந்தது..

அறைக்கு அன்று தான் வந்திருந்தாள் தன் பத்தரை மாத்துத் தங்கமான ஒன்றரை மாதத் தங்கத்தை ஏந்தியபடி..

ஏன்.. எப்படி.. எதற்காக.. அங்கே மீரா எப்படி?? அந்த அறையின் நெடி பினாயிலையும் டெட்டாலையும் கலந்து வீசி அது ஒரு மருத்துவமனை என்பதை உறுதியாக்கியது.

"அப்பா.. சொல்லுங்கப்பா.. ஆங்… அஞ்சலி அழுதுட்டே இருக்காள்.. டாக்டர் வந்து பார்த்துட்டு தான் போயிருக்கார்.. எதாவதுன்னா கூப்பிட சொல்லியிருக்கா ர்.. என்ன.. அம்மாவுக்கு காய்ச்சலா? தூக்கிதூக்கி போடுதா.. சரிப்பா.. இங்கையே கூட்டிட்டு வந்துடுங்க.. அட்மிட் செஞ்சாலும் இங்கையே பார்த்துக்கலாம்.. சரி வைச்சிடறேன்"

மனதுக்குள்ளே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் சத்தமாக மீரா. பித்து பிடிக்காத குறையாக மீரா உறங்கா விழிகளோடு கலங்கி தவித்திருந்தாள்..

அப்போது,

"வாங்க அத்தை, வாங்க மாமா.. " - மருத்துவமனை ஆனாலும் விருந்தினரை வரவேற்பது போல வரவேற்பது பண்பாடு.. இங்கே அது சம்பரதாயம் பார்க்கும் நபர்களுக்கு அத்யாவசியமானது.. இதை வைத்து புதுப் பிரச்சனை வரக் கூடதென்ற கவலை மீராவுக்கு..

"தங்கக்குட்டிக்கு என்னாச்சு.. எல்லாம் சரியாயிடும்.. திருநீறு பூசியாச்சு.. சரியாயிடும்.. இந்தா நீயும் வைச்சிக்கோ ஏம்மா மீரா.. டாக்டர் என்ன சொன்னாரு?"

"சரிங்க அத்தை.. டாக்டர் இப்ப வருவார்னு நர்ஸ் சொன்னாங்க.." என்றாள் மீரா.

டாக்டர் வரும் சத்தம் கேட்டு, அத்தையும் மாமாவும் வெளியில் செல்ல முயல.. அவர் "பரவாயில்ல இருங்க.. மீரா குழந்தைக்கு தடுப்பூசி போட்டதும் இப்படி காய்ச்சல் வந்ததால என்னால உடனே முடிவெடுக்க முடியல.. அதான் திரும்பத் திரும்ப காய்ச்சல் மருந்து ஆறு மணி நேரத்துக்கு ஒரு தரம் கொடுத்தீங்களான்னு கேட்டேன்.. இரண்டு நாள் ஆகியும் இப்படி இருக்கறதா சொன்னதால தான் நான் அழைச்சி வரச் சொன்னேன்.. "

மீரா, "டாக்டர், குழந்தைக்கு மருத்து சரியா தான் டாக்டர் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் காய்ச்சல் 105 டிகிரி வந்து குழந்தை கண்ணும் முழிக்கலை. பாலும் குடிக்கலை.. அதான் உடனே உங்களைப் பார்க்க வர கூப்பிட்டேன் டாக்டர்.."

"மீரா, இப்போ குழந்தைக்கு பிளட் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட் வந்திருக்கு.. அதுல நிறைய இன்பக்சன் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு.. பிளட்ல மட்டும் தான் அட்டாக் ஆயிருக்கு… முதுகுத் தண்டு வடம் வழியா மூளைக்கு போயிருந்தா அப்புறம் மூளைக் காய்ச்சல் ஆகியிருக்கும்.. ஐசியூல தான் வைச்சிருக்கனும்.. ஆனா முன்னமே பார்த்ததால அதையெல்லாம் தடுக்க முடிஞ்சிது.. எந்த கிருமினால.. அதுவும் யார் மூலமாக காய்ச்சல் வந்திச்சின்னு கல்சர் ரிப்போர்ட் வந்ததும் தெரிஞ்சிடும்.. அதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும் மீரா.."

"கலங்கிய கண்ணோடு, சரிங்க டாக்டர் என்று விழி நீரை மறைக்க முயன்றாள் மீரா.."

"மீரா, வீட்டுக்கு கெஸ்ட் நெறைய வந்தாங்களா குழந்தையைப் பார்க்க?? "

"ஆமாம் டாக்டர்.. "

"நான் குழந்தை பிறந்தப்பவே சொன்னேன்ல.. இவ்வளவு கெஸ்ட் வரக் கூடாதுன்னு.."

"ஒன்னும் பண்ண முடியலை டாக்டர்.. "

"இப்போ குழந்தை தான் கஸ்டப்படுது பாருங்க… " சொல்லிவிட்டு குழந்தையைப் பரிசோதித்துவிட்டுச் சென்று விட்டார்.

அப்பாவிடமிருந்து அழைப்பு… "ஹாஸ்பிடல் வந்தாச்சு மீரா.. அம்மாவை அட்மிட் செய்ய ரூம் புக் பண்ணிட்டேன்.. உன் அறைக்கு ஒரு அறை தள்ளி புக் பண்ணிட்டேன்.. சரியா.."

அப்பாவுக்கு பதில் சொல்லி, போனை வைத்த பின்,
"அத்தை, அம்மாவுக்கும் உடம்பு நெருப்பா கொதிக்கிறதாம்.. அதனால இங்கே கொண்டு வந்து அட்மிட் செய்யப் போறாங்க.. இன்னிக்கி மதியம் கூட எனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க.. இப்போ என்னவோ திடீர்னு காய்ச்சல்.."

சரி.. நாங்க அப்படியே கிளம்பறோம்.. நாளைக்கு மூன்று மணிக்கு வந்து பார்க்கறோம்.. என்னவரைப் பெற்றவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்..

அம்மா பக்கத்திலேயே இருந்தும், குழந்தையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அருகே சென்று பார்க்கத் தடை விதித்திருந்தார் டாக்டர்.. மீரா கவலையின் உச்சத்தில் இருந்தாள்.. ஒரு புறம், அம்மா.. மறு புறம் குழந்தை.. என்னைப் பார்ப்பதா.. அம்மாவைப் பார்ப்பதா என்று தெரியாமல் தவித்தாலும் மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் அப்பா..

அப்பாவுக்காகவே மனத் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் மீரா.

மறு நாள், குழந்தைக்கு ஊசியேற்ற வந்த செவிலியர்கள் அங்கு கொடுக்கும் உணவு பற்றாது.. நீங்கள் வீட்டிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுங்கள்.. ஹாஸ்பிடல் ரூல் பார்க்காதீங்க.. நீங்க தாய்ப்பால் மட்டுமே தருவதாலும், குழந்தைக்கு இப்போது அதிகமான தாய்ப்பால் தேவைப்படுவதாலும் நல்ல சத்துள்ள உணவை வீட்டிலிருந்து சமைத்துச் சாப்பிடுங்கள்.. உங்க அரோக்கியம் ரொம்ப முக்கியம்" என்று மீராவுக்குச் சொல்லிச் சென்றனர்..

உடன் ஓடி வந்த ரேவதி அக்காவோ, நான் உன் கூடவே இருக்கேன் மீரா.. கவலையை விடு.. யாராவது நம்ம சொந்த காரங்க கிட்ட சொல்லி சோறு வரவழைச்சிரு மீரா என்றார்.

அக்கா தன்னோடு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது அதுவுமில்லாமல். கல்லூரிக்குச் செல்லும் மகனையும் பொருட்படுத்தாமல் தன்னோடு குழந்தைக்கு நன்றாகும் வரை இரு என்று சொன்ன அவர் கணவர் மீதும் பெருத்த நன்றியுணர்ச்சி பொங்கியது மீராவுக்கு..

அருகில் இருந்தாலும் இரு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி தானும் பணிக்கு போகும் சீதா அக்கா நினைவு வர.. வேண்டாம்.. அவர்களுக்கு ஏன் சிரமம் என்று பின்வாங்கினாள் மீரா. சரி.. நம் மாமியாரும் நம் தாய் போலத் தானே.. தாயும் படுத்துக் கிடக்கையில் அவர் தானே நம் தாய்.. அவரிடம் கேட்போம்.. அத்தைக்கு மாமாவுக்கு சமைப்பதைத் தவிர பெரிய கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்பது கூடுதல் வசதியாகவே மீராவுக்குத் தோன்றியது.. அத்தைக்கு சிரமம் இருக்காது என்று காலையிலேயே போன் பண்ணினாள் மீரா.

"அத்தை, இன்னிக்கி மதியம் எனக்கு மட்டும் சாப்பாடு கொண்டு வருவீங்களா?? 3 மணிக்கு வருவதை, கொஞ்சம் முன்னாடி வந்திடுங்களேன்.."

"சரி கொண்டு வர்றேன்.." என்றார் அத்தை..

அத்தை மாமாவோடு வந்து மீராவைச் சாப்பிட வைத்தார்.. பின்பு, அப்பா வந்து குழந்தையை தொலைவிருந்தே பார்த்துவிட்டு பின் சென்று விட்டார்..

மணி 2 இருக்கும்.. மீராவுக்கு போன் வந்தது.. "மீரா.. நான் தான் அண்ணி பேசறேன்.. சவிதா.. (மீரா கணவரின் அக்கா..) அஞ்சலிக்கு எப்படி இருக்கு.. இப்போ பரவாயில்லையா.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு மீரா.. "

மீரா மனதுக்குள், பாவம் அண்ணி, ஏற்கனவே பத்து வயதிலும், 8 வயதிலும் ஒரு பையனையும் பொண்ணையும் வைத்துக் கொண்டு கூடவே வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டு வேலையையும் செய்து கொண்டு கஸ்டப்படுகிறார்.. நான் ஏன் தொல்லை தர வேண்டும் என்று எண்ணியபடியே..

"சொல்லுங்க அண்ணி.. இப்போ பரவாயில்லை.. காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது.. ஹெல்ப் எல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி.. நீங்களே வேலைக்கும் போயிட்டு வீட்டையும் பார்த்திட்டு இருக்கீங்க.. பிரச்சனை இல்லை.."

"சரி.. நான் சாயிந்திரம் வர்றேன்.."

மாலை 4 மணி.. சொன்னது போலவே வந்து நின்றார் அண்ணி..

முகம், கை, கால்களைக் கழுவி விட்டு, பின் வந்து குழந்தை அருகில் நின்றார்.. வாங்க அண்ணி என்று மீரா கூப்பிட்டதைச் சட்டை செய்யவில்லை..

அத்தையும், அண்ணியும் குழந்தையைப் பார்த்து வாயில் சேலையை மூடி அழுதனர்..

"நோய் வந்து வந்து தான் எதிப்பு சக்தி வளரும்.." என்றார் அண்ணி..

"அதான் நல்லா வளர்ந்திட்டு இருக்கு பாருங்க… ஏண்டி பயாட்டிக் ஊசி ஊசியா போட்டு.. நானும் தாய்ப்பால் மட்டும் தான் கொடுத்திட்டு இருக்கேன்.. ஆனாலும் வந்துடுச்சே…" இது மீரா. 45 நாள் குழந்தைக்கு எந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று புரியாது பேசத் தொடங்கினார் அவள் அண்ணி..

"எதிர்ப்பு சக்தி அப்போ இல்லைன்னு அர்த்தம்…. உன் பால்ல அப்ப சத்தில்ல.." இது அண்ணி..

சுளீர் என்றது மீராவுக்கு… தாய்ப்பாலில் சத்தில்லை என்று ஒரு பட்டம் பெற்றவர் சொல்லலாமா? அதுவும் இரு குழந்தைக்குத் தாய்.. கல்வி நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஒருவர்… தான் எந்த மனப் போராட்டத்தில் இரவும் பகலும் உறங்காது சதா அழுது கொண்டிருக்கும் குழந்தையோடு இருக்கேன்.. தன் கணவர் கூட அருகில் இல்லையே.. இவ்வாறாக சுயபட்சாதாபம் மேலோங்கியது மீராவுக்கு.. மௌனம் காத்தாள் மீரா..

பேச்சு திசை மாறியது..
"சாப்பாடு இங்கையே உனக்கு கொடுத்திடுவாங்களா மீரா" இது சவிதா அண்ணி.

"ஆமாங்க அண்ணி.. இங்கையே கொடுப்பாங்க.." என்றாள் மீரா.

"ஏம்மா… அப்போ ஹோட்டல்ல வாங்கி சாப்பிட வேண்டியது தானே.. நீ ஏம்மா சோறு செமக்கறே….." என்று ஓரக் கண்ணால் மீராவைப் பார்த்தபடியே சொன்னார் சவிதா அண்ணி..

"ஏ போயி வெளியில சாப்பிடனும்னு தான் கொண்டு வந்தேன்.." இது அத்தை..

மீராவுக்கு நெஞ்சில் நெருஞ்சியால் குத்தியது போல் வலி…

எழுந்து வெளியே வந்து விட்டார்.. தன் மகளுக்கு சோறு பரிமாறி உண்ண வைத்து அனுப்பினார் அத்தை..

அடுத்த நாள் மாமாவுக்குச் சமைக்க அத்தை கிளம்ப.. எனக்கும் சேர்த்து எடுத்து வர வேண்டாம் என்றாள் மீரா.. பதிலேதும் பேசாமல் சென்றார் அத்தை..

தனக்கு உண்ணக் கொண்டு வந்ததை அத்தை சிறிது கொடுத்தும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது மீராவுக்கு.. அப்படியே வைத்து விட்டாள்.

அப்பா, ஹோட்டலுக்கும் வீட்டுக்கும், ஹாஸ்பிடலுக்கும் அலைந்து கொண்டிருந்தார்.. மீரா விரும்பிய உணவெல்லாம் வாங்கி உண்ண வைத்தார்.. அத்தைக்கும் ரேவதி அக்காவுக்கும் என்ன வேண்டுமெனக் கேட்டு சேர்த்து வாங்கி வந்தார்..

மருத்துவர் வந்தார்.. "கல்சர் ரிப்போர்ட் வந்திடுச்சுங்க மீரா.. கை நகத்துல இருக்கிற கிருமிங்க தான் காரணம்.. சோ.. கெஸ்ட்ஸ் தான் பிரச்சனை.. விசிடர்ஸ் நாட் அலவுட்-நு போர்ட் போட்டாசு.. 3 மாசம் முடியறவரை கெஸ்ட்ஸை அவாய்ட் பண்ணுங்க.. இன் ஹைகீனிக்கா குழந்தையைத் தொடாதீங்க.. தொடவுடாதீங்க.."

"டாக்டர், என் அம்மாவும் காய்ச்சல்ல தான் பக்கத்து ரூம்ல அட்மிட் ஆகியிருக்காங்க.. "

"பார்த்தேன் மீரா.. அவுங்க இந்த இன்பக்சனுக்கு காரணம் இல்ல.. இருந்தாலும் அவுங்களுக்கு சிக்கன் குனியாங்கறதால 1 மாசத்துக்கு குழந்தையை அவுங்க தொட வேண்டாம்.."

"சரிங்க டாக்டர் " என்றாள் மீரா.

அத்தையை அழைத்துச் செல்ல மாமா வந்தார்.. அப்பா அவரிடம், ஓரிரு நாட்களுக்கு மீராவோடு அவள் மாமியாரை இருக்க வைக்கக் கேட்டுக் கொண்டார்.. பாவம் அக்கா.. உடனே திரும்பி வருவோம் என்று எண்ணி போட்டது போட்டபடி ஓடி வந்தவர்.. துவைத்த துணி பாதியும் துவைக்காத துணி பாதியும் இருக்க மீராவுக்காக வந்தவர்.. இப்போது வீட்டுக்கு போயே ஆகவேண்டிய இக்கட்டான பெண்களுக்கான பிரச்சனையான சூழல்... எல்லாவற்றையும் விவரித்தார் அப்பா..

என் மனைவிக்கு தூக்கம் கெட்டால் சேராது.. என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்தார் மாமா..

சரிங்க என்று அப்பா இறுகிய முகத்தோடு சென்று விட்டார்..

சிறிது நேரத்துக்கு பின், கிளம்ப தயாராக இருந்த மாமாவிடம், மீண்டும் அப்பா கெஞ்சினார்..

சரி இருக்கட்டும் என்று ஒப்புதல் அளித்தார் மாமா.

4 நாட்கள் ரேவதி அக்காவும், 3 நாட்கள் அத்தையும் இருந்து குழந்தை அஞ்சலியும் அம்மாவும் தேற வீடு திரும்பினர்..

மீராவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.. பின்பொரு நாள் தான் 2 நாள்கள் இருந்ததையும், குலதெய்வத்துக்கு கிடா வெட்டுவதாக வேண்டிக்கொண்டு அதை நிறைவேத்தியதாலும் தான் தன் பேத்தி குணமானாள் என்று அத்தை சொல்வார்கள் என்று…!!

__________________
-- பூமகள்.

Saturday, September 4, 2010

எல்லையற்ற மனவெளி..!!



எங்களுக்குள்ளான உரையாடல்கள் இப்படித் தான் எப்போதுமே ஆரம்பிக்கும்.. முகமலர்ந்து எனைப் பார்த்து புன் சிரிப்புடன் கதவருகில் வந்து நிற்பார் பக்கத்து வீட்டு வட இந்திய விருந்தினப் பெண். உள் அழைத்து அமர வைத்து விருந்தோம்பல் முடித்து ஆயாசமாய் அமர்ந்து கதை பேச ஆரம்பிக்கும் முன் அவரே வெகு தூரம் பேசியிருப்பார்.. தம் பிரிவு குறித்தும் தங்களின் கடவுள் நம்பிக்கை குறித்தும் சொற்பொழிவாற்றுவார். நம் பக்கம் எப்பவும் போல் கேட்டலும் அதைச் சார்ந்த பதில்களும் தொடரும்.. பேசுபவர் கொஞ்சம் அவரே தன் பாணி மாற்றி பேச்சை கேள்வி - பதில் பேட்டியாக்குவார்..

உங்க வீட்டு திருமணம் எப்படி நடக்கும்? இப்படி ஆரம்பிக்கும் அவரின் கேள்விகள்.. ஒரிரு வாக்கியத்தில் என் விடை முடிய.. மீண்டும் அடுத்த கேள்வி அவரே ஆரம்பிப்பார்.. திருமணத்தின் முன் தேடு படலம் முதல் திருமணம் முடிந்து பிள்ளைப் பேறு வரை கேள்வி பதில்.. அவர்களின் வழக்கம் என இரு வேறு கலாச்சார பரிமாறல்கள் நடந்தேறியிருக்கும்..

குழந்தை பிறப்பு முதல் குழந்தை வளர்ப்பு பராமரிப்பு வரை அனைத்தும் அலசி காயப்போட்ட பின் வீட்டு நிலவரம் அறிய எத்தனித்தார் அவர். சொந்த வீட்டு நபர் பற்றி நாம் கூற.. அவரின் பட்டியலோ ரேசனுக்காக காத்திருக்கும் மக்களின் வரிசையைப் போல் நீளும். தந்தை வழி சொந்தம் அனைத்தும் ஒரே வீட்டில் ஒன்றாய் இருக்கும் அந்த பாங்கு அவர் சொல்லச் சொல்ல.. நம் விழி விரியும்.. ஏக்கப் பெருமூச்சு என்னுள் மேலோங்கும்..

காதல் திருமணமெனில் தன் ப்ரிவினரால் உண்டாகும் எதிர்ப்பு, ஜாதகம், இனம், பிரிவு சார்ந்த பற்று பற்றி விரிவாக எடுத்தியம்பும் அவர் பேச்சு.. மெல்ல எனை நோக்கி அந்த கேள்வி வீசப்படும்..

உங்கள் வீட்டில் நடந்த திருமணம் எப்படி...

எங்க வீட்டில் எதையும் பார்க்கவில்லை..

உங்களவர் எந்த ஊர்??

நம் நாடல்ல..

அப்படியெனில் எந்த பிரிவு?

அதை நாங்கள் பார்க்கலை..

எந்த மதம்?

அதுவும் எங்களுக்கு தெரியாது..

பின்னே உங்கள் இனமா??

என் முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்து பதிலுரைத்தேன்..
அனைத்தும் வித்தியாசம் தான்..

அப்போ ஜாதகம் பார்த்தீங்களா??

இல்லை.. இதயத்தைப் பார்த்தோம்..

புருவம் உயர்த்தி ஆச்சர்ய முகபாவத்தோடு ஒரு சில நிமிடம் அமைதி காத்தார். விடைபெற்று எழுந்து சென்றவர் அதன் பின் அது பற்றி பேசவே இல்லை.

புதியதோர் உலகம் செய்வோம்..!!

அன்புடன்,
பூமகள்.