RSS
Showing posts with label சமுதாய கவிதைகள். Show all posts
Showing posts with label சமுதாய கவிதைகள். Show all posts

Monday, September 7, 2015

இல் இல்லாதவர்..!!

இல் இல்லாதவர்..!!

மௌனச் சாரலின்
சில்லிட்ட உணர்வுகளால்
நிரம்பி வழியும் அந்தி!!

பொழுதெல்லாம் 
வெம்மையில் வெக்கி
நாணிச் சிவந்த முகில்!!

ஊடலும் கூடலுமாய்
மோனத்தில் கரைந்து
கானல் காட்டும் நிலா!!

அடுப்படி அழுத்தலில் 
அம்மாக்கள் பணித்திருக்க.. 
வழி தீரா பயணத்தில்
அப்பாக்கள் அரண்டிருக்க..
கூடு தேடும் குருவிகளாய்
சன்னல் சிறை சாய்ந்துறங்கும்
மின்மினிகள்..!!

அழுக்கேறிய உடையின்
சல்லடை நுழைக்காற்றின்
கூதலோடு போராடும்
சாலையோரத் துயிலோரை
அடித்தெழுப்பி கறக்கும்
விதிமுறை பாதுகாவலர்களை
அனைவரும் கடந்திருப்போம்..
இல் இல்லாதோரின் 
வலி உணராமலேயே!!

--பூமகள்.




Monday, March 21, 2011

வரதட்சணை..!



மகிழம் பூ முகம்
தாழம் பூ மனம்
அல்லிப் பூ சிரிப்பு
அந்திமந்தாரை வனப்பு
அகில் தேகம்

வர்ணிப்புகள் வடித்த
கவி மனம்..
ஏங்குவதென்னவோ
வெள்ளை நிற
நெட்டை நங்கைக்கு தான்..!

கருப்பிங்கு அவமானம்..
கருப்பழகிகள் நிலையோ
அந்தோ பரிதாபம்..!

நகை கூட போட்டால்
கருப்பிங்கு ஏற்பாம்..
நகைக்காய் வாங்கும்
பொருளா பெண்கள்??

வரதட்சணை வடிவம்
வேரோடு பிணைந்து
இப்படி ஒரு நிலை வரலாம்..!

பெண் உள்ள வீட்டின் முன்
'பெண்கள் விற்கப்படும்'
பலகையும் மாட்டப்படலாம்..!

--பூமகள்.

Thursday, July 10, 2008

மலர்ந்தவையும் மலராதவையும்..!


மலர்ந்தவையும் மலராதவையும்..!



மலர்ந்தும்
எங்களில் வாசமில்லை...!

மலராத
எங்களில் நேசமில்லை...!

மலர்ந்ததால்
உலர்ந்தது..
எங்களின்
வாழ்க்கை..!

மலராததால்
புலரவேயில்லை
எங்களின்
வாழ்க்கை..!

காய்க்காத பூவானது
எம் குற்றமா??

மலராத மலரானது
எம் குற்றமா??

பூ காய்ந்தாலும்..
காயாது
எங்கள் மேலான பழி..!

மொட்டவிழ்ந்தாலும்
அழியாது
எங்கள் மேலான சுழி..!

உருவாக்காததால்
நாங்கள்
இல்லத்தில் இருந்தும்
இல்லாமலானோம்..!

உருவாகாததாலே
நாங்கள்
இல்லத்தில் இருக்காத
இல்லாதவர்களானோம்..!

அறிவியல் விடியலில்
மூச்சுப் பிடித்து
காத்திருப்போம்..!!

மலர்தலும்
காய்த்தலும்
புலரும் நம்
வாழ்வில் வா...!!

__________________
--- பூள்.

Thursday, April 3, 2008

விடியல் தேடி..!



அதிகாலை பனியில்
இருள் தலைதுவட்டி
இமை திறக்காமல்
காத்திருந்தது.!!


மெல்ல கண் மலர்கிறேன்.!
முகத்தோடு புன்னகை
ஒட்டும் ரோஜாவனத்துக்கு
தண்ணீர் ஊற்றுகிறேன்..!!


வாசலின் முகம் கழுவி
தென்னங்கீற்றால் தலைவாரி
பச்சை வண்ணமிட்டு
வெண் பொட்டிடுகிறேன்..!!

புள்ளிகள் தானே
கோடிட்டு கோலமாகின்றன
கற்பனை முகடில்!!


எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!

புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!

__________________
~பூள்.

Tuesday, March 4, 2008

கலைந்த புன்னகைகள்..!

கலைந்த புன்னகைகள்..!!


எப்படி இருக்கே..
இந்தியாவில் பார்த்தது..
எப்போ இங்கு வந்தே...!!


(கண்கள் பார்த்து தோழி கேட்டு நின்றாள்)

இப்ப தான் மேரேஜ் ஆச்சு..
உன்ன பார்ப்பேன்னே நினைக்கல..
எப்படி இருக்கே நீ??
ஏதும் விசேசம்??


(எண்ணவோட்டத்தை பிடித்து பதில் கொடுத்தாள்)

ஆமாம்.. இப்ப தான் கன்பார்ம் ஆயிருக்கு..
2 மாசம்..


(நாணம் செவ்விதழில் சிந்தி பளிங்கு முழுக்க சிதறியது)

(வெட்கி சிவந்து, பின் அவளே பேசலானாள்.)

இந்தியாவே பார்ப்பது மாதிரி உன்ன பார்த்தது..
வா உன்னோடு நிறைய பேசனும்..

கண்டிப்பா வர்றேன்..
ஆனா இப்போ இயலாத சூழல்..
அவர் காத்திட்டு இருப்பார்..
அவசரமா போனும்..!


(அலைபேசி இலக்கங்கள் இடமாறின..விடைபெற்று கிளம்பினேன்..)

ஒரு மாதமிருக்கும்..!
மீண்டும் காண்கிறேன்..!

ஹே... எப்படி இருக்கே??

(உற்சாகத்தில் நான்..!)

ம்.... இருக்கேன்..!

(விழியோரம் கசிந்தது நீர்த்துளி... வார்த்தையில் வெறுமையுடன் அவள்..)

ஏன் என்னாச்சு?
உடம்பு சரியில்லையா?
டாக்டரைப் பார்த்தியா??

(பதறிய மனத்துடன் நான்..)

போன வாரம் தான்
பார்த்தேன்.. கடைசியா..!!


(கடைசியா- இந்த வார்த்தையில் இருந்த அழுத்தம்
ஏதோ விபரீதத்தை உணர்த்தியது)


என்ன சொல்றே நீ??

(பதட்டம் குறையாமல் நான்)

என் பொண்ணை சாவடிச்சிட்டேன்..!
சாவடிக்க வைக்கப்பட்டேன்..!


(எங்கோ பார்த்து அழுகிறாள்.. என் கண் பார்க்க திராணியில்லை)

ஏன் என்னாச்சு??
ஏன் ஏன்??

(புரியாமல் மூச்சடைத்து நான்..)

பெண் பிறவி கூடாதாம்
பெரும் செல்வம் தின்னுமாம்..
வேண்டாம் என்று கை கழுவிட
தினம் நெருப்பில் சுட்டு பாரு காயம்..!


(வெந்த புண்ணை காலில் காட்டி.. துன்ப சுமையை என் நெஞ்சில் ஏற்றினாள்)

துடித்த இதழில்
தவித்து மறித்தன
வார்த்தைகள்..!!


(ஆறுதல் சொல்ல வார்த்தை எழவில்லை..!
கண்களால் பேசி..கரைந்து நகர்கிறேன்..!)

இங்கிலாந்தின்
இந்தியர் நிலையாக
ஓராயிரம் புன்னகை - நிதம்
கலைத்துவிடும் கதை
கருத்தாய்வுடன் மாண்பு
குலைத்து நிற்கிறது..!


செய்தி:
கருத்தாய்வு முடிவு: "இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்களிலிடையே
பெண்சிசுக்கருக்கலைப்பு அதிகமாகிறது.."


__________________
~பூள்.

Thursday, February 7, 2008

ஐஸ்கிரீமும் நானும்..!

ஐஸ்கிரீமும் நானும்..!



மருத்துவமனை சுவர்களோடு
மனம் பேசும் வாசனை
பினாயில் நெடியோடு
கரைந்து போகும்..!

வெள்ளை உடுப்பிட்டு
புன்னகையை பூட்டி
அறைகளின் உயிருக்கு
பூ வைத்தியம்.!

இன்று முதல்
பூக்கள் நடுவில்
இரவுப் பணி..!

அந்த அறையை
அடையும் போதெல்லாம்
மனம் துடிக்கும்..!
வெள்ளை உடை தாண்டி
தாயுள்ளம் பரிதவிக்கும்.!

"சிஸ்டர்..! நீங்களே..எப்பவும் ஊசி போடுங்களேன்.
காலையில் வந்த சிஸ்டர்.. கை வலிக்க போடுறாங்க..!"

புன் சிரிப்பு ஒட்டவைத்து
மென் ஊசி போட்டு
உச்சி முகர்ந்து முத்தமிட்டு
உறங்கச் சொல்கிறேன்..!

மூன்று மாத கெடுவில்
முத்தான பிள்ளை
முகம் மாறா சிரிப்புடன்
சொல்கையில்
செவிலிப்பணி தாண்டி
சொல்லறுத்து விழி செல்துடித்து
அழுகிறது..!

மருத்துவ அறிக்கையில்
மாதம் இரண்டு கடந்து
பதினைந்து ஆகிருந்தது.!

"சிஸ்டர்.. எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடனும்..!
நாளை வாங்கி வருவீங்களா?"
ரகசிய குரலோடு சுற்றுமுற்றும் பார்க்கிறான்
பயமாய்..!

தலையாட்டி விடைபெறுகிறேன்..!

அடுத்த இரவுக்கு காத்திருந்தது
இருவரின் மழலை மனமும்
..!

ஐஸ்கிரீம் வாங்கி
பையில் பத்திரப்படுத்தி
ஓடிச் செல்கிறேன்
அறை நோக்கி..!

மருத்துவர் கூட்டம்
கூடி இருக்க..
அவசரப்பிரிவில்
அவதியுறும் மழலை..!

புற்றுநோயின் புற்றுக்குள்
புதையுறுகையிலும்..
என் முகம் கண்டதும்
கண்ணில் வெளிச்சம்..!

ரகசிய சம்பாசனையில்
"ஐஸ்கிரீம் இருக்கா?" ஆவல் வினா..!

ஆமென்று நான் தலையசைக்க
நிம்மதியொளி முகத்தில் தெரிய
மெல்ல மூடியது மழலைக் கண்கள்..!

ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!

__________________
~பூள்.

Wednesday, February 6, 2008

முள்ளாகும் முல்லைகள்..!

முள்ளாகும் முல்லைகள்..!



காலை அவசரத்தில்
நூடில்ஸ் சிற்றுண்டி..!
வாயில் பாதி..
தட்டில் மீதி..!

ஃப்ரி.கே.ஜி ரைம்
தேர்வு.. - மனனம்
மனத்தில்..!

மாலை வந்ததும்
பூட்டிய வீடு..!

சோர்ந்து சாவி வாங்கி
தொலைக்காட்சி காட்டில்
கார்டூன் நண்பர்கள்..!

துப்பாக்கி தூக்கி
சுட்டு வீழ்த்தும்
தீரர்கள்..!

நீரின்றி மழலை
இமைக்காமல் குடிக்கும்
வன்முறை பானம்..!

குடித்து தீர்ந்ததும்
குற்றுயிராய் கிடக்கும்
மனிதம் கீழே..!

அன்னையின் அன்பு
முத்தத்தோடு வாழும்..!
பேச நேரமின்றி இரவுணவு
சமைத்தலில் மாயும்..!

மறுநாள் பள்ளியில்..
சின்ன சலசலப்பு..!
வன்முறையில் முடியும்..!

முல்லைகள் முள்ளாவது
என்று புரியும் நமக்கு??




(வெளிநாட்டில் எல்.கே.ஜி குழந்தை துப்பாக்கியோடு பள்ளிக்குச் சென்று மற்றவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி அறிந்தேன். அதன் தாக்கத்தில் எழுதியது.)




__________________
~பூமகள்.

Saturday, January 26, 2008

பழையன கழிதல்..!

பழைய பேப்பரோடு
போட்டு மறக்க
முடியா சில..

கையெழுத்தோடு காதல் பேசிய
கடிதங்களும்...
வலி சொல்லி படபடக்கும்
விவாகரத்து பத்திரங்களும்..

மறக்க முடியாமல்
மறைக்கப்பட்டிருக்கும்
அலமாரியின் ஏதோவொரு
இடுக்கில்..!

தூசு தட்டி எடுத்து
தங்கமீன் குடம் வாங்க..
தயங்கியது மனம்..
கண்கள் குளமானதால்..!


~பூமகள்.

Friday, January 25, 2008

வலியின் விழி நீர்..!

வலியின் விழி நீர்..!



காலைப் பொழுதின்
துயில் கலக்க
பனித்திரை விடிகாலை..!

சுண்டி இழுக்கும்
அடிவயிற்று வலியால்
விழி தானாய் ஈரமாகும்..!

வன்வலியுணர்வு நரம்பு சுட..
பன்வலியோடு பறக்கும் கால்கள்..!

எட்டு மணி பேருந்து..
எட்டா தூரத்தில்..
சாய்ந்து வரும்..
கூட்டத்தினூடே..!

முட்டி மோதி..
மகளிர் கூட்டத்தில்
முழங்கை அழுத்த,
"ம்மா" என்ற அலரல்..
பேருந்து சத்தத்தில்
கரைந்து போகும்...!

நெரிசலில்
வயிற்றை பிடித்து ஒருகை...
கம்பி பிடித்து மறுகை..
கண்கள் மட்டும்
ஜன்னல் பார்க்கும்
கண்ணீரோடு....!

காலை உணவு
ரோட்டோரக் கடையில்
சுடச்சுட மணம் பரப்பும்..

வாசம் மட்டும் நுகர்ந்து
வாய் நிறைய சுவைக்கும்..
வலி கொஞ்சம் குறையும்..
வாசனை பிடிச்ச மகிழ்ச்சியில்..

ஒரு திடீர் நிறுத்தம்..
சட்டென ஏதோ அதிர
உள்ளிருக்கும் வலி
பளீர் என்று ஓங்கி அறையும்..!

வலி பொறுக்காமல்
உதடு கடிக்க..
பின்னிருந்து ஒரு கை..
உரசிப் பார்த்து
எக்காளமாய் சிரிக்கும்..!

திரும்பி முறைத்து..
முன்தள்ளி நிற்க..
திரும்பவோர் திடீர் வளைவில்
இடையில் மீண்டும் இடர்..

உள்வலி இடரும்..
அசதியின் கோபமும்
அந்நியள் ஆக்கும்..

திரும்பிப் பார்த்து
உரத்து ஒலிக்கும்
"தள்ளி நில்லுங்க...!"

பேருந்து ஸ்தம்பித்து
குரல் வந்த இடம்
பார்க்கும்..!

பார்வைக் கணைகள்
நெருப்பு கக்க,
கூனிக் குறுகி
பின்னவன் நிற்க..

நிம்மதி பெருமூச்சோடு
அடுத்த யுத்தத்துக்கு
தயாராகும் மனது..!

__________________
~பூமகள்.

Wednesday, December 26, 2007

நாம் யார்??







ரோஜாவின் செவ்விதழ்
தடவிய பனித்துளி
மிளிரும் புன்னகையோடு
பகலவன் முன்..!!


மகரந்த சூல்பையில்
மயங்கிய வண்டொன்று
பனித்துளி நோக்கி
படையெடுக்கும்
வைரம் திருட...!!

நொடிப்பொழுதில்
கரையும் பனித்துளி
வைரமென்றால்
காலத்தின் கையில்
நாம் யார்??


விடை தெரியா
வாழ்க்கை
விடைதேடும்
பூச்செடிகள் - நாம்!


__________________
~பூள்.

Wednesday, November 7, 2007

இருளும் ஒளியும்..!!



உன் வானம் தூரல் போட்டு கொண்டாடும் பூவானம்..!
என் வானம் துக்கத்தை மட்டுமே தூரலாக்கிச் சென்ற செவ்வானம்..!


உன் கனவில் நீ இளவரசர்களின் இதயமெட்டு..!
என் கனவில் நான் இம்சையரசரின் அடிமையிளஞ்சிட்டு..!


உன் காதுகளில் சந்தோசங்கள் சஹானா ராகம் பாடும்..!

என் செவிகளில் சங்கடங்களே சஹாரா முகாரி பாடும்..!



உன் கைப்பையின் சொச்சமாய் இருக்கும் நாணயங்கள்..!!
என் கிழிந்த சேலைநுனியின் மிச்சச் சொத்தாக நாணயங்கள்..!

சிதறும் உன் சிரிப்பில் மிளிரும் உன் செழுமை..!!
பதறும் என் பதபதைப்பில் மிரளும் என் வறுமை..!



உன் கூந்தல் சிங்காரமாய் செலவாக்கி சிவப்பாகியிருக்கும்..!

என் கூந்தல் செல்புசிக்கா எண்ணெயால் சிவப்பாகியிருக்கும்..!


உன் வாயில் கொரித்துச் சிதறும் துண்டுகள்..!

என் ஒரு வேளை ஆகாரத்துக்கு போதுமான துண்டுகள்..!!


உன் செல்ல நாய்க்குட்டியின் சோப்புச் செலவு..!

என் குடும்பத்தினரின் மொத்த உணவுச் செலவு..!

உன் கிழிக்கப்பட்ட ஆடையால் புலப்படும் அங்கம் நாகரிகச் சின்னம்..!
என் கிழிந்த உடையில் தெரியும் அங்கம் அவமானச் சின்னம்..!

உன் செருப்பின் ஒரு ஜோடி விலை..!

என் சேலையின் ஒன்பது ஜோடி விலை..!


செயற்கை வெளிச்சத்தில் உன் வீட்டு மேல்சுவற்றில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்..!!

இயற்கை வெளிச்சத்தில் என் வீட்டு மேல் கூரையின் சிரித்திடும் நட்சத்திரங்கள்..!!


உன் பார்வை வெயில் படாத கருப்பு கண்ணாடியின் பின்..!

என் பார்வை வெயில் பட்டும் கருத்த இருட்டின் முன்..!!


இருட்டான என் உலகில்
உன் வெளிச்சம் பதிக்க வரும்

ஒளியாண்டு எப்போது??

ஒளிந்திராமல் வருவாயோ??

-பூமகள்.

Monday, September 24, 2007

தேடல்..!!

காற்றின் சுவாசத்தில்
மூச்சிரைக்க
சுகந்த தென்றலின்
சொச்சம் தேடும்
நாசிகள் இரண்டும்..!!

பிம்பத்தின் விளிம்புகளில்
இடுக்கியிருந்து
வம்பு செய்யும் காட்சியின்
மிச்சம் தேடும்
கண்கள் இரண்டும்..!!

ஒலியலையின் ஓரத்தில்
வழிந்து வரும்
சங்கீத சங்கதிகளில்
நிசப்தம் தேடும்
செவிகள் இரண்டும்...!!

எண்ணங்களின் வழியில்
எடுத்து வரும் வார்த்தைகளில்
வண்ணவரிகள் தேடும்
வடிவிதழ்கள் இரண்டும்...!!

யௌவன தேசத்தின்
சந்துகளில் சிருங்காரிக்க
மோகன யோகம் தேடும்
இதயங்கள் இரண்டும்...!!

சிக்காத கணங்களை
சிறைபிடிக்க எண்ணி
அகன்ற வெளியில்
காத்து நின்று தேடும்
கைகள் இரண்டும்..!!

பாலைவன பரப்பில்
பூக்களின் களம் காண
பாதைகள் தேடும்
பாதங்கள் இரண்டும்..!!

-பூமகள்.

Friday, September 14, 2007

அவசரம்...!!


துரத்தப்படாத
அப்பிய
தூக்கம்
முகத்தில்
தூக்கலாய்...


அவசர நிலை
பிரகடணம்
நான்கு புள்ளி
கோலம்
வாசல் வரவேற்பாய்...


இம்சை செய்யும்
குழந்தைக்காய்
இரண்டு
இட்லி ஊட்டல்
போராட்டம்
மினி சீரியலாய்...


அள்ளி முடிந்த
அரையடி கூந்தல்
அவரசக் குளியல்
நேர மிச்சமாய்...


சேலை தவிர்த்து
சுடிதார் தரிப்பு
வேகக் கூட்டல்
வசதி மிக்கதாய்..


தலை
துவட்டலோடே
தொலைந்து போகும்
தினம்
பேருந்துப் பயணம்
தீரும் கணங்களாய்...


இரை உண்ண
மறந்ததை
இரைந்துரைக்கும்
இரைப்பையின்
வலி
நினைவூட்டலாய்....


இத்தனையும் தாண்டி
இன்முகம் காட்டும்
என் முகம்
அலுவலக
வரவேற்பாளினியாய்....!!

-பூமகள்.

Sunday, September 9, 2007

பிச்சைக்காரி...!!

பிச்சையெடுக்கும்
பிஞ்சுக் கைகள்
பிறந்ததே பாரமாய்
சுமக்கும் தாயின்
உடலும் உள்ளமும்...!

கங்காரு குட்டி போல்
கட்டியிருக்கும்
பிரியா பந்தம்..!

வேலையின்றி
வேலை செய்யும்
தெம்பிருந்தும்
பிச்சை கேட்கும் தாயே??? - உனைப் போல்
சோம்பேறிப் பிள்ளை
வளர்க்க எண்ணமா???

வியர்வை சிந்தி
வேலை செய்து
வாழ்ந்தால் உனை
வியந்து பார்க்கும்
உலகமல்லவா???!!!!!


காசு கேட்டு
காலம் தள்ள
சுடவில்லை
மனம் உனக்கு????

விருந்து கேட்காதே.. - இனி
வேலை கேள்..!
விருந்து படை உன்
வியர்வை வைரங்களால்!
-பூமகள்.

குறிப்பு:


நான் ஒரு சமயம் வெளியில் சென்றபொழுது ஒரு நிகழ்ச்சி என்னை பாதித்தது. அதன் தாக்கமே இக்கவிதை.

கடைத்தெருவில் ஒன்றரை வயது குழந்தையை வயிற்றைச் சுற்றி துணியால் கட்டிக் கொண்டு பிச்சைகேட்டாள் என்னிடம் ஒரு பிச்சைக்காரி..!
அவளின் நிலை கண்டு எனக்கு பரிதாபம் வரவில்லை. மாறாக கோபம் வந்தது. அதன் வெளிப்பாடே இந்தக் கவி. அதற்காக என்னை யாரும் இறக்கமில்லாதவள் என்று நினைக்கவேண்டாம். அவள் மிகவும் பலசாலியாகவே இருந்தாள், ஊனம் கூட இல்லை. ஆகவே தான் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.

இதோ இங்கே அந்தக் கவி உங்களுக்காய்..!

Friday, August 31, 2007

முகமூடி மனிதர்கள்...!!

மெல்லிய புன்னகை
வாஞ்சை பேச்சு
வஞ்சனை உள்ளம்
வசிய மனிதர்..!

நிஜ முகம் களைந்து
பொய் முகங்களின்
பேரூர்வலம்
தெருவெங்கும்.....

நிஜ முகங்கள் தேடி
நிதம் வாடும்
என் மனம்....!!

முகத்தில் சிரிப்பு
மொத்தத்தில் வெறுப்பு
முகம் காட்டா
அகம் ஏராளம்.....!!

யாரிடமும்
மெய்முகம் காட்ட
மறுப்பதென்ன
மானிடா???

உண்மையாய்
உறைவது
உறுத்துதோ
உனக்கு....??????????

உள்மன
அழுக்கை அகற்றி
ஆழ்மன அழகில்
லயித்துப்பார்
கொஞ்சம்........

ஆன்மா பேசும்
அமைதி மொழி...!
அறிந்து கொள்
அது நல் வழி...!

-பூமகள்.

Wednesday, August 22, 2007

ஒரு பத்திரிக்கையாளன் நிலை

நித்தம் நித்தம் புதுயுகம்
நிஜத்தைத் தேடி
பொய்யை எழுத
நிஜமாய் அலைவிக்கும்
பெருச்சாளிக் கூட்டம்
மேலதிகாரிகளாய்.......!


முதல் நாள்

இன்று
அரசியல் தலைவரோடு
பேட்டி


நிரம்பக் கேள்வி பல
நிரப்பி நேரில்
சென்றேன்
ஆர்வத்தோடே
அலுவலகத்திற்கு...


என் கேள்விகள் கூட
மீள்திருத்துகைக்குட்பட்டது
மேலதிகாரியால்..
மீளமுடியா துயர்கொண்டது
என் உள்ளம்...


பேசும் முன்பே
வார்த்தைக் களவா?
கேட்கும் முன்பே
கேள்வித் தடையா?
கேள்வியே தடையா?

விம்மித்தவித்து
வேகமாய்ச் சென்றேன்
பேட்டிக்காக..
முடிந்தது பேட்டி
சிரித்தார் தலைவர்....
அழுதது - என்
கொலையான வினாக்கள்..!


இரண்டாம் நாள்

நட்சத்திர பகுதிக்காய்
நாள் முழுக்க புரட்டி
முழுவிவரம் எடுத்து
அழகாய் கோர்த்தேன்
உண்மைச் செய்திகளை..
அழைத்தது மேலிடம்
கிசுகிசு குரலில்
பொய் எழுதச்சொன்னது..
மெல்ல என் பேனா
துடிதுடித்து இறக்க
எத்தனித்துக் கிடந்தது
என் சட்டைப் பையில்.....


மூன்றாம் நாள்..


அழைப்பு வந்தது
காவல்துறையிடமிருந்து....
ஆர்வமாய் போனேன்
சத்தியம் அங்கே
காக்கப்படுமென்ற
நம்பிக்கையோடே..

காசுக்கு மயங்கி
கதையெழுதச் சொன்னர்
அப்பாவி பற்றி....
திரும்ப வந்தேன்
தீர்க்கமான முடிவுடனே...


நான்காம் நாள்


வெள்ளைக்காகிதத்தில்
மெய்யெழுதினேன்
ஆம்...ராஜினாமாக் கடிதம்..


உண்மைகள் தற்கொலை
செய்வதில்
உடன்பாடில்லை
எனக்கென்றேன்..

பிழைக்கத் தெரியாதவன்
என்றனர்

நகைத்துத் திரும்பினேன்...


ஆமாம்...
யாரேனும் யோசித்துக்
கூறுங்களேன்...



புதுப் பத்திரிக்கைக்கு
என்ன பெயர்
வைக்கலாம்???!!!

-பூமகள்

Monday, August 20, 2007

அரசியல்


ஒட்டிய வயிறாயினும்
ஒட்டவில்லை
ஒட்ட எத்தனித்தும்
ஓட்டமெடுத்தது என் மனம்...!
ஓட்டுச் சந்தையில்,
பிரியாணிக்காய்
விற்றுப் போன
ஏழையின்
ஓட்டு கண்டு...!

-பூமகள்.

Saturday, August 11, 2007

நிதர்சன உண்மை..!

நாளைய கனவுகளை
இமைகளில் சுமந்து
இன்றைய தினங்களை
இல்லாமல் ஆக்குகிறேன்...!
நேற்றைய நினைவுகளை
நெஞ்சத்தில் சுமந்து
நிதர்சனங்களை
நிராகரிக்கிறேன்...!
நேற்றும் நாளையும்
இப்படியிருக்க,
இன்று மட்டும்
சிரித்தபடி செல்கிறது எகத்தாளமாய்...!
வெறும் கையுடன்...
நான்!



- பூமகள்.

Friday, August 10, 2007

வாழ்வின் அர்த்தங்கள்.....!


வாழ்வின்
அர்த்தங்கள்
அறியும்
வேட்கையில்
நான்...!!



* பூவின்
மகரந்தம்
திருடும்
தென்றல்
மெல்ல
எனை
வருடும் போதும்....


*புதுச்சட்டை
போட்ட
ஏழைச்
சிறுவனின்
சிரிப்பைப் போல
வானம்
மழையால்
நகையாடும் போதும்....


* மழையில்
நனையும்
குருவிக்குஞ்சை
சுருக்கென
இறகால்
பொத்தும்
தாய்க்குருவியின்
கதகதப்பின் போதும்....


* நாளைய
விடியலை
நம்பிக்கையோடு
பார்த்திருக்கும்
இரவு
உறங்கும் போதும்....

* சற்றே
முகம்
வாடினது
காணாமல்
வாஞ்சையாய்
கை பற்றி
அனுசரிக்கும்
ஸ்நேகத்தின் போதும்....

துளித்துளியாய்
அறிகின்றேன்..
வாழ்வின்
அர்த்தத்தை....!!


- பூமகள்.