RSS

Thursday, May 19, 2011

அறிமுகமில்லாதவள்..!!



அவசரம் பூசி
அவதியாய் பேருந்தேற..

நடுவயது யுவதி
நட்பில் மலர்ந்தாள்
இதழ்..

நட்பு காட்ட
என் கையிலும்
மழலைச் சிரிப்பு..

நல்ல ஆங்கிலம்
பேசும் சீனப் பெண்
அவள்..

ஹோம் அலோன்
படத்தில் புறாக்களுக்கு
உணவூட்டும்
தாய் முகம் நினைவூட்டியது
அவள் முகம்..

பேருந்தேறும்
அனைவரோடும்
பேசினாள்..

அன்பு, கண்டிப்பு
என அளவாய்
வாயாடினாள்..

முதியவரும், இளைஞனும்
ஒருங்கே ஏற..
இளைஞன் இருக்கையை
எழுப்பி முதியவர்
அமரச் செய்தாள்..

எதிரமர்ந்து நாம்
தலையசைக்க..
எதையெல்லாமோ
புலம்பினாள்..

கால் பட்ட புண் காட்டி..
அலைபேசி படம் காட்டி..
அருகமர்ந்த குழந்தை மிரட்டி..
என் மழலை அடம் நிறுத்தி..

இப்படியாக
அவள் வாய் மட்டும்
ஓயவே இல்லை..

திடீரென எனைப் பார்த்து,
இந்தியரா என்றாள்..
என் பதிலசைப்பில்..
"செக்சன் இலக்கம் பகர்ந்து,
பெண் கொடுமை,
வரதட்சணை சட்டம் தெரியுமா?"
என்றாள்..

அவளளவு சொல்ல
தெரியாததால்
தெரிந்தும் தெரியுமென
சொல்ல வெட்கப்பட்டது
மனம்..

ஏதேதோ பேசி..
காற்றில் பாதி கரைய..
மீதி எங்களுக்கு புரிய..
இறங்கும் இடம் வர..
விடைபெற்றாள்..

அருகிருப்போர் மிரட்சியில்
சொன்னார்கள்..
அவள் ரொம்ப பேசுகிறாள்..
பைத்தியம் போல..

எனக்கும் மட்டும்
அன்பும் கண்டிப்பும் மிகுந்த
அற்புத ஆசானாகத் தான்
அறிமுகமாகியிருந்தாள் அவள்..!!

--பூமகள்.





Tuesday, May 3, 2011

தோர்(Thor) - திரை விமர்சனம்




நேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்..

படத்தில் அசத்தல் நடிப்பை வெளிக்காட்டினர் அனைவரும்.. படத்தை பத்து நிமிட தாமதத்தில் பார்த்ததால் முதல் சண்டைக் காட்சியைக் காணும் வாய்ப்பை இழந்தேன்.

வெகு நாட்களாகவே எல்லோராலும் பலத்த எதிர்பார்ப்பைக் கொண்ட படம் தோர். இது போன்ற படங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமென்றாலும்.. வன்முறை அதிபயங்கரமாக இருந்ததால் பெரியவர்களே சில இடங்களில் பயப்படலாம்.. நான் சொல்வது வளர்ந்த குழந்தைகளாகவே இருக்கும் பெரியவர்கள்..



வேற்று கிரகத்தில் ஒரு தந்தை அரசராகவும், அவரின் இரு மகன்களும் இருக்க..அரசராகும் வாய்ப்பு இருவருக்கும் இருக்கிறது என்று சொல்கிறார் தந்தை.. கோர முக எதிரி வம்சத்தை அழிக்க தன்னிடம் தந்தை கொடுத்த சக்தியை அவசரப்பட்டு பயன்படுத்தி தன் குழுவோடு எதிரிகள் கிரகம் செல்லும் மூத்த மகனான ஹீரோவும் அவருடன் செல்லும் தம்பி மற்றும் குழுவும் போடும் சண்டை கண்ணுக்கு விருந்து..

மகனை இழக்கும் நிலை வர.. தந்தை வந்து மகனைக் காப்பாற்றி தன் கிரகத்துக்கு உடன் அழைத்துச் சென்று.. அவர் அளித்த பல சக்திகளையும், பல சக்திகளை உள்ளடக்கிய சுத்தியலையும் பிடுங்கி பூமிக்கு எறிகிறார் தந்தை. மகன் சாதாரண மானிடனாக விழ, சுத்தியலோ வேறொரு இடத்தில் மணலில் பதிந்து விடுகிறது.. அதைச் சுற்றி வட்டமாக பெரும் பள்ளவடிவ வளையமே ஏற்பட.. அவ்வழியே வருவோர் போவோர் எல்லாம் வந்து அந்த சுத்தியலை எடுக்க படாத பாடு படுவது நகைக்க வைக்கிறது..



சாதாரண மானிடனாக விழும் நம் ஹீரோ கிரிஸ் ஹேம்ஸ்வொர்த் என்ன பாடு படுகிறார்.. தன் ஹீரோயினியை சந்தித்தாரா.. காதல் வயப்பட்டாரா.. அந்த சுத்தியலை அடைந்தாரா.. கோர முக சிவப்பு கண் எதிரிகளால் அவர் கிரகத்துக்கு வரும் ஆபத்து என்ன.. அதை எப்படி முறியடிக்கிறார்.. கதாநாயகனும் கதாநாயகியும் இறுதியில் சேர்ந்தார்களா.. என்பவற்றை திரையில் கண்டால் தான் சுவைகரமாக இருக்குமென்பதால் கதைச் சுருக்கத்தை இதோடு முடிக்கிறேன்.. இனி விமர்சனத்துக்கு வருகிறேன்..

ஒற்றைக் கண் அரசரான தந்தையாக வரும் நடிகர் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் மூத்த மகன் தான் நம் ஹீரோ.. சொல்லவே வேண்டாம்.. கட்டுமஸ்தான தன் உடம்பாலும் அமைதியான அதே சமயம் வீரமான நடிப்பாலும் அசர வைக்கிறார்.. மாய ஜாலக் கதைகள் வீடியோ கேமாக வந்தது போல் இருக்கும் இப்படத்தைக் கண்டால்..



வானவில் போல் கடலுக்கு மேல் இருக்கும் பாலம்.. அதைக் கடந்து போனால் வேற்று கிரகத்துக்கு செல்ல உருளும் உருளை வடிவ கருவி.. அதற்கு காவலாளியாக இருக்கும் இன்ரிஸ் எல்பா.. இவர் நடிப்பும் அசத்தல்.தீ கக்கும் முகமற்ற இயந்திர மனிதன் என என்னைக் கவர்ந்தவை ஏராளம்..

கதாநாயகி சிறிது நேரமே வந்தாலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர் தந்தை மற்றும் தங்கை நல்ல நகைச்சுவையைக் கொடுத்திருக்கிறார்கள் சில இடங்களில்..

முப்பரிமாணத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்த்து சொல்லுங்கள்.. டிஜிட்டலில் பார்த்ததால் படத்தின் பின்னணி இசை மிரட்டுகிறது.. நல்ல துல்லியமான படமும் சேர்த்து அசத்துகிறது..

நல்ல உழைப்பு தெரிகிறது.. இன்னும் கொஞ்ச நேரம் படம் இருந்திருக்கலாம்.. அப்படி இருந்தது படம்.
__________________
-- பூமகள்.


Sunday, May 1, 2011

உழைப்பாளர் திருநாள் வாழ்த்துகள்..!!




உலகம் துவங்கிய காலம் முதல்..
பாறை கல்லாகவும்..
கல் மணலாகவும்..
மணலில் உயிர் உருவாகவும்..

உயிர் அமீபாவாகவும்..
அமீபா இருசெல்லாகவும்..
இருசெல் பல்லுயிராகவும்..

எல்லாமும் ஆக..
எல்லாவிடத்தும் என்றும்
இருந்து கொண்டே இருப்பது..

இன்றும்.. என்றும்..
உருவாக்கங்களின் பின்னால்
உருவமற்று ஒளிந்திருக்கும்
ஓர் அற்புதம்..
உழைப்பு..

அவ்வுழைப்பின் மகத்துவம் போற்றாதோர் யாருளர்??

சாக்கடை அள்ளுபவர் முதல்..
சால்னா செய்பவர் வரை..

வீதி கூட்டுபவர் முதல்..
பத்தி விற்பவர் வரை..

தார் சாலை போடுபவர் முதல்..
கூரை போடுபவர் வரை..

படிப்பவர் முதல்..
படிப்பிப்பவர் வரை..

உழுபவர் முதல்..
பயிர் அறுப்பவர் வரை..



இன்னும் ஆயிரம் ஆயிரம் வேலைகள் தன் கடமை தவறாது உழைக்கும் மனிதம் ஏராளம்..

எல்லாரிடத்தும் குவிந்து கிடக்கும் உழைப்புக்கு என் வாழ்த்துகள்..!!


உலகத்தினைப் புரட்டிப் போடும் வன்மை கொண்ட உழைப்பை சீரிய முறையில் சிறப்புற செய்யும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்..!!

உலகம் உண்மை உழைப்பாளர்களை என்றும் வணங்கட்டும்..!!

--பூமகள்.