RSS

Friday, November 18, 2011

இனிய உளவாக..!!


இனிய உளவாக..!!

இன்சொல் - இந்த வார்த்தையையே இக்காலத்தில் மறந்துவிட்டோமோ என்ற பயம் இந்த முறை இந்தியப் பயணத்தில் தோன்றியது.
வரவேற்பாளர்கள் முதல் செவிலியர் வரை அனைவரிடத்தும் கண்டதும் வருத்தமும் தோன்றியது. அழகாக, கனிவாக பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்..
எல்லாரும் ஏதோ ஒரு இறுக்கம் சூழ்ந்த உலகில் தன்னை சிக்க வைத்த மூச்சு முட்ட வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை எனக்கு எழுந்தது..

காரணங்களை ஆராய முற்பட்டேன்..

இக்கால பரபரப்பான சூழ்நிலை..
தன் மதிப்பை நிலை நாட்ட..
பொறுப்பற்ற மனநிலை..
அற்பணிப்பற்ற பணி..
மேலிடத்தின் நெருக்கடி..

இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும்.. விருந்தோம்பலுக்கும், மரியாதையும் அன்பும் கலந்த மொழியாளுமைக்கும் பெயர் பெற்ற நம் ஊரிலா இந்நிலை என்று
வருத்தமாக இருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம்..

ஒரு வரவேற்பாளினியை முக்கியமான ஒரு சான்றிதழுக்காக தொடர்பு கொள்ள நேர்ந்தது.. சரியாக பதில் சொல்லாமல் பட்டும் படாமல் பதிலளித்தவாறு இருந்தார். எப்படியோ நான் வருவதற்கு இன்னும் இரு நாட்களில் தயாரித்துத் தருவதாகச் சொல்ல.. நானும் அவருக்கு பத்து நாட்கள் முன்பே நினைவூட்டினேன்.
தேதி முதற்கொண்டு அனைத்தையும் தெளிவாக சொன்ன நிலையிலும்.. அவர் இரு நாட்கள் முன்பு நினைவூட்டுங்கள் என்று பதிலளித்தார். சரி என்று சரியாக 2 நாட்கள் முன்பு நினைவூட்ட மறுபடி அலைபேச, அவரோ.. நீங்கள்
வரும் நாளுக்கு முந்தைய நாள் நினைவூட்டுங்கள் என்று சொன்னார். நான் மறுபடியும் அடுத்த நாள் காலை அலைபேசியில் நினைவூட்ட.. மதியத்துக்கு மேலும் நினைவூட்டுங்கள் என்று பதில்.. எரிச்சலும் கோபமும் வந்தாலும் எனது
முக்கிய தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பதால் மனதை அமைதியாக்கிக் கொண்டு மீண்டும் மதியம் அழைத்து நினைவூட்ட.. பின் அடுத்த நாள் காலையில் கண்டிப்பாக இது பற்றி மேலதிகாரிக்கு புகார் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டே
சென்ற என்னிடம் நன்றாக பேசி கொடுத்து விட்டார்கள்.. ஒருவேளை நான் கோபத்தில் திட்டிவிடுவேனோ என்ற பயமோ என்னவோ தெரியவில்லை.. சொன்ன நேரத்துக்கு முன்பாகவே போன என்னைப் பார்த்து மகிழ்ந்துவிட்டார்கள் என்பது நேரத்துக்கு யாரும் வருவதே இல்லை என்ற புலம்பல் மூலம் எனக்கு பின் தான் தெரியவந்தது.

ஆனால் இதே இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் கட்டாயம் பெரிய தகராறு வந்திருக்கும்.. வயதில் மூத்தவர் என்ற மரியாதைக்காக ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே போல் பேசிய என்னிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை..

இது போலவே மருத்துவரைக் காணச் செல்கையிலும் எரிச்சலான பதிலை செவிலியரிடம் இருந்து பெற நேர்ந்தது.. எல்லாருக்கும் பிரச்சனை சகஜம் தான்.. ஆனால் இவ்வாறு எரிச்சலோடும் சிடுசிடுப்போடும் பதில் சொன்னால் அந்த இடத்தில் அமருவதற்கான தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்று தானே பொருள்..

நம் மொழி அழகானது.. அதனை முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், மக்களை நேரடியாக சந்தித்துப் பணியாற்றும் வகை வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணிக்கான தகுதியுடனும் பயன்படுத்த வேண்டும். நம் பேச்சு தான் நம் மரியாதைக்கான முதல் படி. அதனை தவறாகப் பயன்படுத்தினால் மிஞ்சுவது அவமானமே.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று."

-கனிவுடன் பூ.