RSS

Monday, September 7, 2015

இல் இல்லாதவர்..!!

இல் இல்லாதவர்..!!

மௌனச் சாரலின்
சில்லிட்ட உணர்வுகளால்
நிரம்பி வழியும் அந்தி!!

பொழுதெல்லாம் 
வெம்மையில் வெக்கி
நாணிச் சிவந்த முகில்!!

ஊடலும் கூடலுமாய்
மோனத்தில் கரைந்து
கானல் காட்டும் நிலா!!

அடுப்படி அழுத்தலில் 
அம்மாக்கள் பணித்திருக்க.. 
வழி தீரா பயணத்தில்
அப்பாக்கள் அரண்டிருக்க..
கூடு தேடும் குருவிகளாய்
சன்னல் சிறை சாய்ந்துறங்கும்
மின்மினிகள்..!!

அழுக்கேறிய உடையின்
சல்லடை நுழைக்காற்றின்
கூதலோடு போராடும்
சாலையோரத் துயிலோரை
அடித்தெழுப்பி கறக்கும்
விதிமுறை பாதுகாவலர்களை
அனைவரும் கடந்திருப்போம்..
இல் இல்லாதோரின் 
வலி உணராமலேயே!!

--பூமகள்.




Monday, August 17, 2015

சிலிர்ப்பு!

சிலிர்ப்பு!


வெம்மைச் சுவடுகளின்
இடுக்குகளில்
பன்னீர் தெளித்தது யார்??!!
மண் வாசத்துடன்
நண்பகல் வெயிலின் துளிகள்
பூமியின் தலை துவட்டும்
பூப்பொழிவான
ஒரு குட்டி மழை!!


-பூமகள்.

Thursday, March 5, 2015

காய்ச்சல் காலம்..!

நோயில் வீழ்ந்து 
கடக்கும் நாட்களில்
நம் வீடு நமக்கே 
புதிதாய் தெரிகின்றன..!

கலைந்து கிடக்கும் பொருட்களும்
துவைக்கப்படாத துணிகளும்
நிறைந்திருக்க..
சொல்லப்படாத மெல்லிய
காதல் இழையோடும்
அன்பானவர் அருகிருப்பின்
ஆண்டுக்கிருமுறையேனும்
வந்து செல்லலாம்
கொஞ்சூண்டு
காய்ச்சலும்
தடுமனும்..!!

--பூமகள்..!

Friday, October 3, 2014

How old are you??!!

How old are you?

     இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ்க்கையின் பதினான்கு ஆண்டுகள் சிறைபட்டு அலுவலகம், வீடு என உழன்று கொண்டிருக்கும் பெண்ணுக்குள் எத்தனை கனவுகள் இருக்கக்கூடும் என கதாநாயகி தன்னை தன் மகளிடம் பறைசாற்றுகையிலெல்லாம் நிதர்சனம் தரும் வலி நம்மையும் ஆட்கொள்கிறது. மெல்ல விரியும் கதைக்களத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் நம்மையோ, நம் வீட்டுப் பெண்களையோ கண்டிப்பாக நினைவுபடுத்தும்.. பேருந்துப் பயணத்து நட்பாய் விரியும் ஒரு பாட்டியுடனான கதாநாயகியின் சந்திப்பு யார் மனதையும் கலங்கடிக்கும்.. " என்னைத் தேடி என்னை மட்டும் பார்க்கவா வந்தாய்? ஏதேனும் வேலைக்காகவோ, ஆதாயம் தேடியோ மட்டுமே என்னைப் பார்க்க வருவார்கள்.. என்னைப் பார்க்க வீடு தேடி வரும் முதல் ஆள் நீதான்.." என் அந்த பாட்டி நெகிழ்கையில் நம் மனதையும் அசைத்துவிடுகிறது. மகளின் அந்த பதின்பருவ செயல்பாடுகளும், அம்மாவை அவ்வப்போது சுட்டிக் காட்டுவதையும் சமாளிக்கையில் மஞ்சு வாரியார் நிமிர வைக்கிறார். தம்மை எள்ளி நகையாடும் அலுவலர்களையும் சமூகத்தையும் தைரியமாக எதிர்கொள்ளும் இடத்தில் புது உத்வேகத்தை நம் உடலிலும் பாய்ச்சுகிறார். பல வருடங்கள் கழித்து மேடையில் ஏறிப் பேச எத்தனிக்கையில் நடக்கும் காட்சிகளின் மூலம் இயற்கை வேளாண்மை மற்றும் அதன் தேவையை அழகாய் கோர்த்து துவங்கும் இடம் உங்களை கட்டாயம் நிமிர்ந்தமரச் செய்யும்..

     வேலைக்கும் சென்று வீட்டையும் கவனிக்கும் பெண்ணாக வரும் கதா நாயகியையே கணவர் நடத்தும் விதமும் பார்க்கும் கோணமும் நம்மை யாரோ சம்மட்டியால் அடித்தது போல் வலிக்கறதென்றால், வீட்டில் இல்லத்தரசியாய் இருக்கும் பல பெண்களை சமூகமும், குடும்பமும் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்க வேண்டும் என்று யோசிக்கவும் வைக்கிறது..


     நாங்கெல்லாம் பெண்களை மதிப்பர்கள் என்று மார்தட்டும் பல ஆண்களும் தங்கள் வீட்டு மனைவியை, அவளுக்குள் இருக்கும் திறமையை கண்டெடுத்து அவர்கள் அதை நோக்கிப் பயணிக்க உதவுவார்களா அல்லது வழிவிட்டேனும் நின்று வேடிக்கையாவது  பார்ப்பார்களா??!! இதற்கு ஆம் என்றாலும் இல்லையென்றாலும் எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக எல்லா பெண்களும் போற்ற வேண்டிய படம்.

     How old are you??!! -- யார் பெண்களின் கனவுகளுக்கு Expiry date-ஐ நிர்ணயிப்பது ?? என்று கேட்டு நம்மை சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது படம்.


--பூமகள்.

Monday, July 7, 2014

நீங்கள் எத்தனை அழகானவர்??!!

நீங்கள் எத்தனை அழகானவர்??!!

எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையுடையோருக்கான மதிப்பும் அங்கீகாரமும் கொஞ்சம் நிறம் குறைந்த, மாநிறத்தில் இருப்பவர்களுக்குக் கிட்டுவது அவ்வளவு எளிதல்ல.

"கருவாயா", "கருவாச்சி" என்ற பட்டப் பெயர்கள் கொண்டு சிறு பிராயம் முதல் வளரும் குழந்தைகளின் மன நிலை எத்தகையதாக இருக்கும்??!!

நம்முடைய உடலும் உடல் கொண்ட உறுப்புகளும் செல்களும் நிறம், வடிவம், உயரம் என எல்லாமும் நம் பெற்றோர் முதல் முன்னோர் வரையானவர்களின் வடிவமைப்புதான். இதில் அழகாய் பிறந்ததற்கும், அழகாய் இருப்பதற்கும் ஒன்றுமே செய்யாத நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது??!! அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் மாநிறமான, கருத்த நிறமுள்ளவர்களை விட சிவந்த நிறமானவர்களுக்குத் தான் சூரிய ஒளியாலும் இன்ன பலவாலும் தோல் சம்பந்தமான பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்..

பெண் பார்ப்பதில் நமது முதல் எதிர்பார்ப்பு நல்ல நிறமான மணப்பெண் வேண்டும் என்பதே. புற அழகை மட்டுமே முன்னிருத்தி தேடப்படும் இன்றைய சூழல் பெரும் முதலாளிகளுக்குக் கொண்டாட்டமாகிறது. பல வண்ணங்களில் விதவிதமான கெமிக்கல் பூச்சுகள் விற்பனைச் சந்தையாக நம் நாடு மாறிவருவதற்கு முதல் துவக்கம் இந்த அழகு சார்ந்த நமது புரிதலே. நிறம் ஒரு தகுதியல்ல. படித்தவர், படிக்காதவர் என்ற பேதமின்றி இன்று ஒருவர் தன் உழைப்பாலும் முயற்சியாலும் தன் வாழ்வில் எத்தனை முன்னேறினாலும் அவருடைய நிறம் கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்துவிட்டால் அதை ஒன்றையே காரணம் காட்டி எள்ளி நகையாடுவதும் நடக்கவே செய்கிறது..

அழகு அகம் சார்ந்த விசயம் என்பது அந்த காலத்து மனிதர்கள் வாழ்ந்து காட்டி புரியவைத்தார்கள்.. நல்ல நிறமான, உயரமான அழகான தாத்தாவுக்கு சற்று கருத்த, உயரம் குறைந்த ஒரு பெண்ணை மணமுடித்து அவர்களுக்கு ஐந்து குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்ந்தார்கள்.. அங்கே அகம் சார்ந்த அழகே வாழ்வை செழிப்பாக்கியது.,

அழகு குறித்த நமது தெளிவு மாறினாலொழிய நம் ஊரில் ஒவ்வொரு மனங்களிலும் ஊறிப்போயிருக்கும் நிறவெறி மறையாது..

இனி ஒருவரை எங்ஙனம் பார்ப்பீர்கள்??!!  புற அழகையா? அக அழகையா??!!

-- பூமகள்.