RSS

Friday, November 18, 2011

இனிய உளவாக..!!


இனிய உளவாக..!!

இன்சொல் - இந்த வார்த்தையையே இக்காலத்தில் மறந்துவிட்டோமோ என்ற பயம் இந்த முறை இந்தியப் பயணத்தில் தோன்றியது.
வரவேற்பாளர்கள் முதல் செவிலியர் வரை அனைவரிடத்தும் கண்டதும் வருத்தமும் தோன்றியது. அழகாக, கனிவாக பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்..
எல்லாரும் ஏதோ ஒரு இறுக்கம் சூழ்ந்த உலகில் தன்னை சிக்க வைத்த மூச்சு முட்ட வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை எனக்கு எழுந்தது..

காரணங்களை ஆராய முற்பட்டேன்..

இக்கால பரபரப்பான சூழ்நிலை..
தன் மதிப்பை நிலை நாட்ட..
பொறுப்பற்ற மனநிலை..
அற்பணிப்பற்ற பணி..
மேலிடத்தின் நெருக்கடி..

இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போனாலும்.. விருந்தோம்பலுக்கும், மரியாதையும் அன்பும் கலந்த மொழியாளுமைக்கும் பெயர் பெற்ற நம் ஊரிலா இந்நிலை என்று
வருத்தமாக இருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம்..

ஒரு வரவேற்பாளினியை முக்கியமான ஒரு சான்றிதழுக்காக தொடர்பு கொள்ள நேர்ந்தது.. சரியாக பதில் சொல்லாமல் பட்டும் படாமல் பதிலளித்தவாறு இருந்தார். எப்படியோ நான் வருவதற்கு இன்னும் இரு நாட்களில் தயாரித்துத் தருவதாகச் சொல்ல.. நானும் அவருக்கு பத்து நாட்கள் முன்பே நினைவூட்டினேன்.
தேதி முதற்கொண்டு அனைத்தையும் தெளிவாக சொன்ன நிலையிலும்.. அவர் இரு நாட்கள் முன்பு நினைவூட்டுங்கள் என்று பதிலளித்தார். சரி என்று சரியாக 2 நாட்கள் முன்பு நினைவூட்ட மறுபடி அலைபேச, அவரோ.. நீங்கள்
வரும் நாளுக்கு முந்தைய நாள் நினைவூட்டுங்கள் என்று சொன்னார். நான் மறுபடியும் அடுத்த நாள் காலை அலைபேசியில் நினைவூட்ட.. மதியத்துக்கு மேலும் நினைவூட்டுங்கள் என்று பதில்.. எரிச்சலும் கோபமும் வந்தாலும் எனது
முக்கிய தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பதால் மனதை அமைதியாக்கிக் கொண்டு மீண்டும் மதியம் அழைத்து நினைவூட்ட.. பின் அடுத்த நாள் காலையில் கண்டிப்பாக இது பற்றி மேலதிகாரிக்கு புகார் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டே
சென்ற என்னிடம் நன்றாக பேசி கொடுத்து விட்டார்கள்.. ஒருவேளை நான் கோபத்தில் திட்டிவிடுவேனோ என்ற பயமோ என்னவோ தெரியவில்லை.. சொன்ன நேரத்துக்கு முன்பாகவே போன என்னைப் பார்த்து மகிழ்ந்துவிட்டார்கள் என்பது நேரத்துக்கு யாரும் வருவதே இல்லை என்ற புலம்பல் மூலம் எனக்கு பின் தான் தெரியவந்தது.

ஆனால் இதே இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் கட்டாயம் பெரிய தகராறு வந்திருக்கும்.. வயதில் மூத்தவர் என்ற மரியாதைக்காக ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே போல் பேசிய என்னிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை..

இது போலவே மருத்துவரைக் காணச் செல்கையிலும் எரிச்சலான பதிலை செவிலியரிடம் இருந்து பெற நேர்ந்தது.. எல்லாருக்கும் பிரச்சனை சகஜம் தான்.. ஆனால் இவ்வாறு எரிச்சலோடும் சிடுசிடுப்போடும் பதில் சொன்னால் அந்த இடத்தில் அமருவதற்கான தகுதியை அவர்கள் இழக்கிறார்கள் என்று தானே பொருள்..

நம் மொழி அழகானது.. அதனை முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், மக்களை நேரடியாக சந்தித்துப் பணியாற்றும் வகை வேலையில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பணிக்கான தகுதியுடனும் பயன்படுத்த வேண்டும். நம் பேச்சு தான் நம் மரியாதைக்கான முதல் படி. அதனை தவறாகப் பயன்படுத்தினால் மிஞ்சுவது அவமானமே.

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று."

-கனிவுடன் பூ.



Friday, October 14, 2011

புரட்டாசியும் புன்னகைக்கும்..!! - 2


பூக்கள் நிறமிழக்கின்றன - உன்
குளிர்கூந்தல் விடுத்து
கோடை பதம் சேர்ந்ததால்..!


-பூமகள்.


புரட்டாசியும் புன்னகைக்கும்..!!


பாதி எழுதிய பல்பம்..
எழுதாமலே பழுதான ஃபவுன்டன் பேனா..
தொலைந்து போன பொம்மை அழிப்பான்..
தேடிப் பிடித்தேன் அம்மா வீட்டில்.. - நான்
உன்னில் தொலைந்ததை அறியாமல்..!!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


விண் தாண்டும் வேலையின் கடிது - உன்
உளக்கண் தாண்டும் வேலை..!!

-பூமகள்.


Saturday, June 11, 2011

நட்பு..!!



தீராது பேசி
தீண்டிய நட்பொன்று..
தீயாய் பறக்கிறாள்..
காகிதத்தை இரையாக்க....

பொழுதெல்லாம் பிரியாமல்..
விழுதாகத் தொடர்ந்தவள்..
தன் வீழ்ச்சிதனை சுமந்து
தலைகாட்ட மறுக்கின்றாள்..

நகை கொடுக்கும் அமுதவாய்க்காரி..
நெஞ்செங்கும் நெருங்கியவள்..
கல்யாணம் கண்டதும்
கல்மனம் காட்டுகிறாள்..

இருந்தாலும் நீயின்றி
ஓர் நினைவும் இல்லையடி..
வாழ்க்கைச் சுழற்சியிலே
சந்திப்போமா சொல்லடி...!!

--பூமகள்.


Thursday, May 19, 2011

அறிமுகமில்லாதவள்..!!



அவசரம் பூசி
அவதியாய் பேருந்தேற..

நடுவயது யுவதி
நட்பில் மலர்ந்தாள்
இதழ்..

நட்பு காட்ட
என் கையிலும்
மழலைச் சிரிப்பு..

நல்ல ஆங்கிலம்
பேசும் சீனப் பெண்
அவள்..

ஹோம் அலோன்
படத்தில் புறாக்களுக்கு
உணவூட்டும்
தாய் முகம் நினைவூட்டியது
அவள் முகம்..

பேருந்தேறும்
அனைவரோடும்
பேசினாள்..

அன்பு, கண்டிப்பு
என அளவாய்
வாயாடினாள்..

முதியவரும், இளைஞனும்
ஒருங்கே ஏற..
இளைஞன் இருக்கையை
எழுப்பி முதியவர்
அமரச் செய்தாள்..

எதிரமர்ந்து நாம்
தலையசைக்க..
எதையெல்லாமோ
புலம்பினாள்..

கால் பட்ட புண் காட்டி..
அலைபேசி படம் காட்டி..
அருகமர்ந்த குழந்தை மிரட்டி..
என் மழலை அடம் நிறுத்தி..

இப்படியாக
அவள் வாய் மட்டும்
ஓயவே இல்லை..

திடீரென எனைப் பார்த்து,
இந்தியரா என்றாள்..
என் பதிலசைப்பில்..
"செக்சன் இலக்கம் பகர்ந்து,
பெண் கொடுமை,
வரதட்சணை சட்டம் தெரியுமா?"
என்றாள்..

அவளளவு சொல்ல
தெரியாததால்
தெரிந்தும் தெரியுமென
சொல்ல வெட்கப்பட்டது
மனம்..

ஏதேதோ பேசி..
காற்றில் பாதி கரைய..
மீதி எங்களுக்கு புரிய..
இறங்கும் இடம் வர..
விடைபெற்றாள்..

அருகிருப்போர் மிரட்சியில்
சொன்னார்கள்..
அவள் ரொம்ப பேசுகிறாள்..
பைத்தியம் போல..

எனக்கும் மட்டும்
அன்பும் கண்டிப்பும் மிகுந்த
அற்புத ஆசானாகத் தான்
அறிமுகமாகியிருந்தாள் அவள்..!!

--பூமகள்.