RSS

Saturday, May 16, 2009

யாமம் - நாவல் விமர்சனம்

"யாமம்" - நாவல் விமர்சனம்

- ஒரு வரலாற்றுச் சமூக நாவல்
நூலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: 225/- ரூபாய்.



எஸ்.ரா அவர்களின் எழுத்துகளின் வீரியமும் ஆழமும் அறியப்பெற்ற பின் அவரின் அனைத்து படைப்புகளையும் படிக்கும் முனைப்பு மெல்ல மெல்ல என்னில் வேர்விடத் துவங்கியிருக்கிறது.

அவ்வகையில் இது அவரின் படைப்பில் நான் படிக்கும் மூன்றாவது புத்தகம். "நடந்து செல்லும் நீரூற்று", "ஏழுதலை நகரம்" என்ற இரு புத்தகங்களும் முதன் முதலில் நான் படித்த அவரின் புத்தகங்கள்.

யாமம் இவ்விரு புத்தகங்களிலிருந்தும் பெருத்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அது கொண்ட குறு பின் அட்டை விளக்க உரையே விளக்கியது.

"நடந்து செல்லும் நீரூற்று" - எஸ்.ரா அவர்களின் எதார்த்த வாழ்வின் முகங்களைக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு.

"ஏழுதலை நகரம்" - குட்டீஸ் விகடனில் வெளியான குழந்தைகளுக்கான மாயஜாலக் கற்பனை நகர் பற்றிய கதை.

இவ்விரு புத்தகங்களுமே என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. ஆயினும் அவற்றுக்கெல்லாம் விமர்சனம் எழுத ஏனோ என்னுள் தைரியம் இல்லாமல் இருந்தது. காரணம், அவரின் அத்தனை வலிமையான எழுத்தாளுமை.

ஆனாலும், நல்லப் புத்தக வாசிப்பு ஒரு சிறந்த நண்பருடன் உரையாடுவதை விட எனக்கு அதிக மனத் தெளிவைத் தந்துவருவதும் உணர்ந்த ஒன்று.

தனிமைக் கதவுகள் தாழிட்ட போதிலும்.. என்னைக் கற்பனையில் பிரபஞ்சம் அளக்கச் செய்பவை புத்தகங்களே.

அவ்வகையில் யாமம் பற்றிய என் உணர்வுகளையும் விமர்சனத்தையும் வழங்க நான் கடமைப்பட்டவளாகிறேன்.

யாமம் என்ற நாவல், புரியாத புதிர் போல மெல்ல மெல்ல நம் முன் விவரிக்கப் படுகிறது. வெவ்வேறு கிளைகள் பரப்பி அதன் மாட்சிமையை பிரம்மிக்கச் செய்கிறது.

யாமம் என்ற நாவலின் கதைக் களம் நான்கில் மூன்று பாகம், சென்னை என்றழைக்கப்படும் பண்டைய மதராப் பட்டிணத்தைச் சுற்றியே அமைந்திருக்கிறது. கப்பலில் வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயர் வசம் எப்படி மதராப்பட்டிணம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைக் குழைத்துக் கொண்டது என்பதை கற்பனையும் எதார்த்தமும் சரிவிகிதத்தில் கலந்தளித்து நம்மை எதார்த்ததைப் பிரித்தறிய இயலாதபடி அமைந்திருக்கிறது கதை.

நாவலின் மாட்சிமை பல கிளைகளோடு அமைந்திருந்தாலும், அதன் முக்கிய பாத்திரங்கள் நம் பயணமெங்கும் சரி விகிதத்தில் பங்கெடுக்கின்றனர்.

அவர்கள், அப்துல் கரீம், பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், சதாசிவப் பண்டாரம் ஆகியோர் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், யாமம் என்ற அர்த்தர்(வாசனைத் திரவியம்) மூலம் ஒருங்கே கூடி நம் நெஞ்சில் வாசத்தைப் பரப்புகிறார்கள்.

அந்த அர்த்தரின் காண இயலாத வாசனை போலவே இந்த நால்வரின் வாழ்க்கையும் பல புலப்படா சூட்சுமங்கள் நிறைந்து எவ்வகையில் முடிவுக்கு வருகிறது என்பதில் நாவல் எதார்த்தத்தைப் பின்னியிருக்கிறது.

ஆங்காங்கே,கரீம் கனவில் வரும் பக்கீர் என்ற மூதாதையரின் இரவுக்கும் கடலுக்குமான கேள்விகளும், விடைகளும் நம்மையும் ஆழ்ந்த சிந்தையில் ஆழ்த்துகின்றன. நாவலின் மிகச் சிறப்பான பகுதியாக இவைகளை நான் சொல்வேன்.

கரீம் கனவில் காணும் பக்கீர் அவருக்கு வழிகாட்டுவதும், "யாமம்" என்ற வாசனைத் திரவியம் மூலம் பெரும் செல்வந்தர் ஆவதும், அவரின் மூன்று மனைவிகளான சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகியோரை விட்டுப் பிரிந்து சென்ற பின் ஏற்படும் அந்த அபலை மனைவிகளின் நிலையும் நெஞ்சில் நீங்காமல் ஓர் இடம் பிடிக்கின்றன. கரீமின் குடும்பத்தோடு எல்லா நேரங்களிலும் அருகிருக்கும் சந்தீபா என்ற ஏழைச் சிறுவனின் குணம், அவனின் ஓர் நாளைய கனவு என நாவலின் நகைச்சுவைப் பகுதியும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.

தன் சொத்துக்கள் தமக்கே கிட்டவேண்டுமென்று போராடும் கிருஷ்ணப்ப கரையாளர், அவரின் அற்புத மனமாற்றத்துக்கு காரணமான மேல்மலையின் வனப்பு, அவரின் ஒரே சொத்தான மேல்மலையையும் யாரோ ஒரு விலைமகளான எலிசபத் என்ற ஆங்கியேய மங்கைக்குப் பெயர்மாற்றும் கரையாளர் குணம் என்று பிரம்மிக்க வைக்கும் இடங்கள் அதிகம். மேல்மலையைப் பற்றிய விவரிப்புகளும், வர்ணனைகளும் நம்மையும் மேல்மலையில் சில காலம் தங்கவைத்த உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை.

திருச்சிற்றம்பலம் என்ற அன்பும், பண்பும், அறிவும் நிரம்பிய தம்பி, அவரின் அன்பிற்கு அருகதையாகாத செயலைச் செய்த பின் வருந்தும் ஓர் அண்ணாக பத்ரகிரி, அவன் மனைவி விசாலா, திருச்சிற்றம்பலத்தின் ஆற்றலைப் புரிந்து கொண்டாலும், உடலாலும், மனதாலும் முதிராத அவன் மனைவி தையல். இவர்களின் தவறுகளும், அதற்கான தண்டனைகளும் மிகச் சிறப்பாகக் கதையில் கையாளப்பட்டிருக்கின்றன.திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம், பெருமை கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. உல்லாசக் களிப்பிற்காகவே ஏங்கும் திருச்சிற்றம்பலத்தின் நண்பனாக வரும் சற்குணம், பின் எப்படியெல்லாம் பண்படுத்தப்படுகிறார் என்று நாவல் மிக அழகாக விவரித்திருக்கிறது. சற்குணத்தின் முடிவு மட்டும் எழுதப்படமாலே வாசகர் யூகத்துக்கு விட்டுவிடப்பட்டிருக்கிறது.

சதாசிவப்பண்டாரம் என்ற பண்டாரத்தின் வாழ்க்கை மாற்றம், அவரில் தோன்றும் மனிதருக்கான இச்சைகள், திரு நீலகண்டம் என்று தாமே பெயரிட்டு அழைக்கும் ஒரு நாயின் வழியில் தன்னைச் செலுத்தி இறுதியில் முடிவென்ன என்று நம்மைக் காக்கச் செய்த விதம் என்று நாவலில் அனைத்தும் அருமை. இவரின் செயல்பாடுகளும், அதற்கான நாயின் கண் கவனிப்புமே பதிலாக்கி வாசகருக்குப் புரிவித்திருப்பது சிறப்பானது.

ஆக, இவ்வெல்லாப் பாத்திரங்கள் மூலமும் வரலாற்றுச் சான்றுகளை ஆங்காங்கே விவரித்ததோடு, மனித வாழ்க்கையின் எதார்த்த மீறல்களும், அதற்கான எதிர்மறை விளைவுகளையும் தெளிவாக்கியிருப்பது சிறப்பு.

எஸ்,ரா அவர்களின் மற்ற நாவல்கள் பற்றி நானறியேன். ஆயினும், இந்நாவல் படித்து, இரு நாட்களுக்கு என்னுள் இக்கதை மாந்தர்கள் இரவில் யாமம் என்ற வாசனைத் திரவியத்தோடு என்னைச் சூழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

எஸ்.ரா அவர்களின் இப்புத்தகம், நிச்சயம் பலரின் மனதிலும் அடர்ந்த வாசத்தை ஏற்படுத்தத் தவறாது.


$$$$$$$$$$$$$$$$$$$

Thursday, April 30, 2009

வெயில் கவிதைகள் - 2

நெருஞ்சிக் காட்டு
ஒற்றையடிப் பாதை முள்ளும்..

கோயில் தொடும்
கல் வழிப் பாதை கூர்மையும்..

பதம் பார்க்கும் குதியை
தன் கரங்களால்
பொடித் துகள்களாகச்
சுட்டுக் கொண்டிருந்தான்
துணையாக வந்த
வெப்பக் கதிரோன்..!!

வெயில் கவிதைகள் - 1

அலைந்து திரிந்து
பசித்த மதியத்தில்..
உச்சிக் கதிர்கள்
உச்சி வகிடு வழி
வழியத் துவங்கியிருக்கும்..

எப்போதும் நிற்கும்
மரத்தடி நிழலின்
புழுது படிந்த இலைகளின்
வடிகட்டிய குளுமை
வெப்பக் காற்றோடு
ஈர முதுகு சில்லிக்க வைக்கும்..

ஓரமாய் பானையோடு
கம்பங்கூல் தாத்தாவும்..
அவர் கொண்ட சுத்தமான
ஆறுவகை வற்றல் குவியல்களும்..

நினைவில் எழுந்து
நாவின் நீர் சுரப்பிக்க..
காத்துக் கொண்டிருக்கிறேன்..
அடுத்த வருட
வெயில் காலத்துக்காக...!!
__________________
-- பூமகள்.

Wednesday, April 29, 2009

மொட்டை மாடியும் சில இரவுகளும்...!!



"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம், அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது"

"இரெவென்னும் வினோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை."


- "யாமம்" நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்

கவிந்து,சூழ்ந்து, எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் ஆழ்ந்த இரவு ஒவ்வொரு முறையும் புதிய வடிவத்தில் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன..

அத்தகைய இரவுக்கும் எனக்குமான பந்ததுக்கு உற்ற துணையாக இருந்தது என் வீட்டு மொட்டை மாடி
("வெற்றுத் தளம்" என்று மொழி பெயர்க்கலாம் தானே?)யும் அது அளந்து கொண்டிருந்த வான்வெளியும்..

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மண்டை பிளக்கும் வெயிலுடன் ஒரு மதியப் பொழுதில் என் முதல் வெற்றுத் தள அறிமுகம் அமையப் பெற்றது..

மூன்று அடுக்கு வீட்டின் மேல் தட்டுக்கு தட்டுத் தடுமாறி கைபிடியற்ற படியேறி சாகசம் மேற்கொண்டு, நின்று முதன் முதலாக எல்லாக் கோணத்திலும் எங்கள் ஊரை நோட்டம் விடுகையில் அருகிருந்த தென்னை மரத்தில் சுனாமிக் காற்று தாக்குதல் திக்குமுக்காடச் செய்தது..

என்னை கைபிடி சுவரற்ற தளத்திலிருந்து கீழே சாய்க்கும் முனைப்போடு தொடர்ந்து புயல் காற்று அடித்துக் கொண்டிருக்க நடுக்கத்தோடே இறங்கினேன்.. முதன் முதலில் காதலன் விரல் பிடித்த காதலியிடம் ஏற்படும் நடுக்கம் போல அந்த நடுக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது... அதன் பின் எனக்கு அந்த மூன்றாவது வெற்றுத் தளம் ஒரு அதிபயங்கர மரணக் குகை போலவே தோன்றியது...

இரவுகளும் அது கொண்ட ரகசியங்களும் எப்போதும் அதன் வழியில் சென்று கொண்டே இருக்க காலம் நகர்ந்து கொண்டே இருந்தது..

(இரவுகளின் வாசனைகள் தொடரும்...)

Monday, April 13, 2009

அயன் - திரை விமர்சனம்

வாரணம் ஆயிரம் படத்துக்கு அடுத்ததாக சூர்யா நடித்து வெளிவந்திருக்கும் படம் அயன். மிகப் பெரிய எதிர்பார்ப்போடு அயன் பார்க்க ஆர்ப்பாட்டம் செய்து எப்படியோ நேற்று பார்த்தே விட்டேன்..

சூர்யா, பிரபு, தமன்னா ஆகியோர் நடிப்பில் அதிரடி திரைப்படமாக வந்திருக்கிறது.

பத்து நிமிட தாமதத்தில் சென்றதால் சில காட்சிகள் எங்கள் கண் படாமல் தப்பி விட்டிருந்தன.. வருத்தத்தோடு அமர்ந்து பார்க்கத் துவங்கினால் சூர்யாவின் தாய் சூர்யாவுக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டி திட்டு மழை பொழியத் துவங்கியிருந்தார்..

தப்பி ஓடிய சூர்யா தொடர்ந்து பாடத்துவங்கினார்.. "பளபளக்கும்....." என்று ஏதோ ஒரு பாடல் குத்தாட்டத்தோடு திரையை நிறைக்கிறது..

தேவா(சூர்யா), சிட்டி இரு நண்பர்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் தொடர்ந்து பறந்த வண்ணமே இருக்கின்றனர்.. எதற்காக சுற்றுகிறார்கள்.. ஏன் சுற்றுகிறார்கள்.. என்று அடுத்தடுத்தக் காட்சிகளில் முடிச்சி அவிழ்கிறது..

பிரபுவுக்காக வேலை செய்யும் தேவா, அவன் தோழன் சிட்டி, உடன் வேலை பார்க்கும் கருணாஸ் இப்படி ஒரு பெரும் படை செய்யும் வேலையோ அன்டர் வேல்ட் தொழில்..

எதிரியாக வரும் ஹிந்தி பேசும் குடும்பத்து பையன் மிரள வைத்திருக்கிறார்.. பாடி லேங்குவேஜும் அவரின் தலை அலங்காரமும் அதிர வைக்கிறது..

தமன்னா அவ்வப்போது வந்து தமது பாடல்க் காட்சி நடனங்களைச் செவ்வனே செய்து சென்றிருக்கிறார்.. தமன்னா, நடிப்பு... அப்படின்னா என்று இன்னும் கேட்கும் நிலையில் இருப்பது வேதனை + வேடிக்கை..

ஆனால், ஒரு பாடல் கூட படம் விட்டு வெளிப்படுகையில் நினைவில்லை...

காதல் வசனங்கள் ஒன்று கூட மனம் தொடும்படி இல்லை.. பெரும் ஏமாற்றத்தை பக்கத்தில் நெளிந்து கொண்டே படம் பார்ப்போரைக் காணுகையில் உணர்ந்தேன்..

ஒரு எதிர்மறை வாழ்க்கைச் சூழலில் சிக்கிக் கொண்டு திறமையாக சாதிக்கும் இளைஞனாக வரும் சூர்யா, பொன் வண்ணனிடம் மாட்டிக் கொண்ட பின் வரும் காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார்.. பொன்வண்ணன், வழக்கம் போல் தன் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்..

தேவையற்ற இடங்களில் இரைச்சலான ஆடைக்குறைப்பு பாடல்கள்...

மனம் குமையச் செய்யும் வன்முறைக் காட்சிகள்..

அழுத்தமே இல்லாத வசனங்கள்...

ஆழப் பதியாத பாடல் இசை..

இவையனைத்தும் சேர்ந்து படம் விட்டு வெளிப்படுகையில் தலைவலியை உடன் அழைத்து வர வைத்துவிட்டன.

நிறைய இடங்களில் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தேன்... அத்தனை வன்முறைக் காட்சிகள்..

உங்கள் இதயம் பூப் போன்ற மென்மையானதெனில்... இப்படம் உங்களுக்கான படம் அல்ல..

ஆக்சன், த்ரில்லர் எல்லாம் இருந்தும்... குமட்டுமளவுக்காக காட்சிகள் இருப்பதால் பெண்களும் குழந்தைகளும் பார்க்காமல் இருப்பதே நலமெனக் கருதுகிறேன்..

சூர்யா சிக்ஸ் பேக்கில் வந்து இளமையைக் காட்ட முனைந்திருந்தாலும்.. கன்னம் வற்றி பார்க்க ஏனோ அழகாகவே இல்லை..

இப்படியான கதைகளை இனி சூர்யா தொடர்ந்து ஒப்புக் கொள்வாரேயானால்.. விஜய் வரிசையில் இவரையும் மசாலாப் படம் பண்ணுபவர் லிஸ்டில் சேர்க்க வேண்டியிருக்கும்..

படத்தின் பலம்.. வித்தியாசமான நாடுகளில் எடுக்கப்பட்ட அதிரடி காட்சியமைப்புகள்..

ஏவிஎம் இவ்வகை படம் எடுத்து ஏன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டதென்று வருத்தப்பட்டேன்..

படம் பார்த்ததும் நான் எடுத்த ஒரு தீர்க்கமான முடிவு..

இனி டைரக்டர் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் இவர்கள் படம் மட்டுமே பார்ப்பது..!

நல்ல படமென எல்லாரும் சொன்ன பின் மட்டுமே ஒரு படத்தைப் பார்ப்பது...!

ஆக மொத்தம்.. அயன்... உங்களின் தலையை அயன் செய்து தலைவலியை உண்டாக்கிவிடும் என்பது மட்டும் திண்ணம்..

தப்பிச்சிக்கோங்க மக்களே....!!
__________________
-- பூமகள்.