RSS

Friday, April 11, 2014

அடையாளம்..!

அடையாளம்

வீழ்ந்து கிடக்குமொரு
தெருவோரப் பொருள்
யாரின் பிரயத்தனத்தையும்
விட்டுவைக்கவில்லை..

கடந்து சென்ற
சிறார் கூட்டமொன்று
கல்லெறிந்துவிட்டு
சிரித்தபடி சென்றது..

சில நகர்வுகளுக்கு பின்
வலிமுணகலேதுமின்றி
சுரத்தற்றிருந்தது..

சுட்டெரிக்கும் சூடேற
நிழலுக்காய் ஒதுங்கிய மூதாட்டி
வழியும் செந்நிற வெற்றிலைச் சாற்றை
கையொதுக்கி அதில் தேய்தபடி
சென்றுவிட்டிருந்தாள்..

ஆங்கொன்றும் இங்கொன்றுமாய்
நடமாடுமெவரும் அதைக்
கவனித்ததாய் தெரியவில்லை..

இருள் படர்ந்ததொரு பொழுதில்
தடுமாறும் போதைசூழ் மனிதனின்
கால்விரலைப் பதம் பார்த்ததில்
வெகுண்ட அவன்
அதை வசைபாடி வீசியதில்
புதரொன்றில் வீழ்ந்து
காணாமலே போனது
பொலிவிழந்த ஊரின்
பெயரழிந்த பெயர்ப்பலகை..!!

--பூமகள்.

Saturday, March 15, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும்..!!



நிஜத்தில்
எளிமையாய் இருப்பது
எளிதான காரியமில்லை..

அடங்கிப் போனால்
அலட்சியப் பார்வையையும்..
அமைதியாய் போனால்
ஏமாளியாகவும் நடத்தும் 
சுற்றம்...

இறுதியில்
எளிமையாய் இருப்பதும்
பெருமைக்காய் என்பர்.....!

இறுமாப்பு நிறைந்த
இதயத்துக்கு..
வறியோரின் நேச உணவு
ருசிப்பதில்லை..

ஏதுமில்லாதது போல்
இருத்தலும் ஓர்
ஜென் நிலைதானோ..??!!
--பூமகள்.

Thursday, March 13, 2014

ஞாயிறு திங்கள்..!

இரவு கடந்த விடியல்
வழிந்திருக்கும் ஊரில்..
உறக்கம் தெளிந்த விழிகள்
காணக்கிட்டுவதில்லை..
ஞாயிறு காலைகள்..!!

பால் வாங்கவோ,
கறி, மீன் வாங்கவோ
விரையும் மனிதர்கள்
சொல்லிவிடுகிறார்கள்
தனது ஏதேனுமொரு செய்கையில்..
விடுமுறைக் களைப்பை..!

பசித்தலின் உணர்வு
அடக்கியாளும் குழந்தையின்
நீண்ட தூக்கம் அதன்
விடுமுறை நாள் விடியலாகிறது..!!

ஏழு நாட்களும் ஒன்றென்று
சமைத்தலின் விதி புரிந்த
மங்கையர் மனம்
ஏங்கும்
எட்டாத எட்டாவது
விடுமுறை நாளுக்காக..!

                    --பூமகள்.

Friday, December 20, 2013

உப்பு மழை..!!

மழை பார்க்கையிலெல்லாம்
நினைவில் நீ..!
நீயெனைக் கடைசியாய்
கடக்கையில்
நனைத்த மழை
உப்புக்கரித்தது தெரியுமா??!!

உன் ஊரில்
பெய்யும் மழையின்
இறுதித் துளியேனும்
நினைவூட்டுமா எனை??''

              --பூ.

Thursday, October 17, 2013

துளித்துளியாய்..! - 2

மழையின் வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது
மனத்தின் வெப்பம்..!!

&&&&@@@@&&&&&

இடியின் இடிபாடுகளின் வழி
மேக முறைப்புகளுக்கு பயந்து
தம் துயரெல்லாம் கவிழ்ந்து வடிக்கும்
ஓர் செம்பருத்திப் பூவின்
மகரந்தத்தில் ஒடிங்கியிருக்கும்
ஓர் மழைத் துளி..!

&&&&

இருளெல்லாம் நனைக்கிறது
இரவுப் பணி முடித்து
எழுப்புகிறது விடியலை - மழை..!!

--பூ.