RSS

Monday, October 1, 2007

"கவிதை!"

தலைப்பு - "கவிதை...!!"

கவிதை - I

மணல் குடைந்து
குழியாக்கி மாவாட்டும்
சில்வண்டின்
சித்திரம் கவிதை..!!

கருமேகம்
மழை சமைத்து
மண்ணில் பரிமாறும்
அருசுவை கவிதை..!!

வெள்ளி மின்னல்
வகுடெடுத்து
கார்கூந்தல் தலைசீவும்
வானவனிதை கவிதை..!!

நிலவொளிச் சிதறல்
நிதம் வந்து தரும்
நித்திய முத்தம் கவிதை..!!

கூட்டுப்புழு
பட்டாம்பூச்சியாய்
பரிணமிக்கும்
புதுப்பிரசவம் கவிதை..!!

விழியாலே விழிபேசி
யௌவனத்தில்
மொழியாகிப் போன
காதல் கவிதை..!!


கவிதை - II

சாரல் மழையில்
முகம் கழுவி
இளைப்பாறும்
இலைசொட்டும் நீரின்
ஈரம் கவிதை..!!

சமுத்திரக் கணவரின்
சீர்கொண்ட மார்பில்
துயில் கொள்ளும்
சூரியப்பெண்ணாள்
வெட்கிச் சிவக்கும்
கீழ்வானம் கவிதை..!!

கானல் நீராய்
வற்றிய மனத்தில்
சிரபுஜ்ஜி மழையாய்
பொழியும்
சந்தச் சங்கமம் கவிதை..!!

பிரளயமான பொழுதுகளை
பிரசவிக்கத் துடிக்கும்
தாயுள்ளத் தூரிகை
எழுத்தோவியம் கவிதை..!!


-பூமகள்.

0 comments: