RSS

Monday, November 26, 2007

அழகான ஹிந்தி பாடல் - சுராலியா..!! 1973 - யாதோக்கி பாராத்


Thursday, November 15, 2007

அக்னி என்ற தலைப்பில் பூமகள்

அக்னி என்ற தலைப்பில் பூமகள் பற்றிய அறிமுகம்..!


நான் பூமகள்...!

புதிதாய் பிறந்த
அக்னிப் பிழம்பை
இதழாக்கி வந்தவள்..!!

நேசத்தில் மெந்தீபம்..!
நெருடினால் தீப்பந்தம்..!

உண்மைக்கு உற்றவள்..!
பொய்மைக்கு ஊசியிவள்..!

பூவைப் பெற்றெடித்த
பூந்தாய் அன்பின் எரிமலை..!

பூந்தந்தை அறிவின் எரிமலை..!

பூந்தமையன் பேசா வன்மலை..! -ஆயினும்
பவித்திர சுடர்மகன்..!

நான் பூமகள்...!!

பூ இங்கு நெருப்புக் கொத்தாய்..!
பூ விரும்புவது கவிநெருப்பு சத்தாய்..!

பூ படிக்க விழைவது தாவர நுண்ணியல்...!
படித்தது கண்ணில் தீப்பொறி பறக்கும் கணினி பொறியியல்..!

நான் பூமகள்..!!

***************************************************

நான் பூமகள்..!

அக்னி சிறகுகளை
உருவாக்க
வறுமைவலி பொறுத்தவள்..!

தேளாய்க் கொட்டும்
தீயோரை நெருப்பாய்
சுட நினைப்பவள்..!

நான் பூமகள்..!

அறிவின் அக்னியை
எங்கேனும் கண்டால்
ஜூவாலையில்
ஐக்கியமாகிவிடுபவள்..!


எப்போது வெடிப்பேனென்று
தெரியாத அமைதியான
சுனாமி..!


தீங்கு கண்டு
பொங்குபவள்..!
தன்னைத் தாக்கினாலும்
தகர்ப்பவள்..!

நான் பூமகள்..!

~ பூமகள்

Wednesday, November 14, 2007

BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்

தொலைக்காட்சியில் எப்போதும் சில நல்ல ஹிந்தி படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் எனக்கு உண்டு.

சில மாதங்கள் முன் தற்செயலாய் தொலைக்காட்சியின் அலைவரிசைகளை மாற்றி கொண்டிருந்த வேளையில் சோனி மேக்ஸில் "பாஃபன்" என்ற படம்
ஓடிக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது.

அழகான உணர்வுகளை சமகால நிகழ்வுகளை அழகாய் எடுத்து இயம்பிய அந்த படத்தைப் பற்றி இங்கு விமர்சிக்க பெரும் ஆவல் கொண்டு உங்கள் முன் என் எழுத்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்.


BHAHBAN - பாஃபன் திரைப்பட விமர்சனம்

நடிப்பு: அமிதாப் பச்சன், ஹேமா மாலினி


ஒரு ஆதர்ஷ வயதான தம்பதிகளின் குடும்பத்தினைக் காட்டியவண்ணம் துவங்குகிறது படம். குடும்பத்தின் தலைவர் அமிதாப். அலுவலகத்தில் பலவருடம் கணக்கராகவே வேலை செய்து
ஓய்வு பெற்று பல லட்சம் ரூபாய்களுடன் வீடு வருகிறார் அமிதாப். தனது மூன்று மகன்களுக்காய் தனது பங்கிற்கு அவர்களுக்கு படிப்பு முதல் வேலை வரை
எல்லா விதத்திலும் பாடுபட்டு வளர்த்து நல்ல நிலையில் அவர்களை வைத்திருக்கிறார்.

இரு மகன்களும் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வேறு வேறு ஊரில் வசிக்க, கடைசி மகன் படிப்புக்காய் வேறு இடத்தில் இருக்க, அபிதாப்பினைப் பார்க்க அனைத்து மகன்களும் வருகின்றனர்.
பல லட்சம் ஓய்வு பெற்று வைத்திருக்கும் தந்தையிடம், வேலைக்காகவும், படிப்புக்காகவும், சொந்த தொழில் துவங்கவும் எல்லா மகன்களும் கேட்டு பணத்தை வாங்கிக் கொள்கின்றனர்.
மகன்கள் மீது வைத்திருக்கும் பாசத்தாலும் அன்பாலும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அமிதாப்பும், ஹேமாமாலினியும் பெற்றவர்களின் அன்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பர்.

அமிதாபின் அனைத்து பணத்தையும் வாங்கிக் கொண்ட மகன்கள், தம்மோடே வந்து தங்கும் படி கேட்டுக் கொள்கின்றனர். அமிதாபும் ஹேமாமாலினியும் சரி என்று ஒப்புக் கொள்ள கிளம்பி பெட்டியெல்லாம் எடுத்து வைத்து காரில் ஏறும் சமயம், மூத்த மகன் சொல்கிறார். அப்பா என்னோடும் அம்மா இளைய மகன் வீட்டிற்கும் போவதால் தம் தாயை இளைய மகன் காரில் ஏறச் சொல்கிறார். அதுவரை பிரிவையே பார்த்திராத அந்த வயோதிக தம்பதிகளின் கண்ணில் உண்மைக் காதலை அழகாய் காட்டி கலங்க வைத்திருப்பார் படத்தின் இயக்குனர்.
3 அல்லது 6 மாதம் கழித்து மீண்டும் இடமாற்றம்.. அப்பா இளைய மகன் வீட்டிலும் அம்மா மூத்த மகன் வீட்டிலும் என திட்டம் போட்டு இருப்பர் மகன்கள்.

பிரிந்து வாழும் கணவர் மனைவி இருவரும் புகைப்படத்தைப் பார்த்து வருந்தும் காட்சியிலும், தொலைபேசி அழைப்புக்காய் காத்து கண்ணீர் மல்க பாசத்தைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியிலும் ஹேமா மாலினி மற்றும் அமிதாப்பின் நடிப்பு முத்திரை இப்படத்தில்.

எப்போதும் மூத்தவர்களைத் தான் சாப்பாடு மேசையின் நடு நாயகமாய் அமர்த்தும் மரியாதை வழக்கம். அப்படி மகனது வீட்டில் அமிதாப் எப்போதும் போல் நடு நாற்காலியில் அமரும் போது, மருமகள் எழச் சொல்லி அது தன் கணவரும்
அமிதாப்பின் மகனுக்குத் தான் அவ்விடம், அவர் தான் வீட்டின் நாயகர் என்று சொல்லும் போது ஒரு வயோதிக தந்தைக்கு கிடைக்க வேண்டிய மரியாதை என்ன என்பதையும் அவர் கிடைக்காததால் படும் துயரையும்
இந்த சிறு காட்சியில் தெளிவாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.

தனக்கென எப்போதும் கூடவே வைத்திருக்கும் தட்டச்சு இயந்திரத்தை வைத்து இரவு மனைவிக்காய் தட்டச்சு செய்து கொண்டிருப்பார் அமிதாப். மருமகள் தூக்கத்திலிருந்து எழுந்து கணவரிடம் அச்சிறு சத்தத்தைக் கூட பொறுக்காமல் திட்ட, தன் மகன் வந்து திட்டி அப்பாவை அவமதிக்கும் காட்சியில் அமிதாப் உறக்கமின்மையால் தான் தட்டச்சு செய்வதாய் கூறி தன்னிலை விளக்கும் முன்னரே மகன் கதவடைத்து தன் படுக்கையறைக்கு சென்ற காட்சியில் அதிர்ந்து கலங்கி அசத்தியிருப்பார்.

அடுத்த நாள் முதல் காஃபி சாப்பிட வெளியில் செல்ல... அங்கே பழக்கமாகும் ஒரு அழகான தம்பதிகளின் நட்பு. பல நகைச்சுவையான சம்பவங்கள் இந்த தம்பதிகள் செயலிலிருக்கும். அந்த சிற்றுண்டி கடையை நடத்தி வரும் தம்பதிகளின் நகைச்சுவைப் பேச்சில் கலந்து அவர்களின் அன்பிற்கு பாத்திரமாய் மாறி 'மோட்டா பாய்' என்று அழைக்கப்பட்டார் அமிதாப்.

இவரது எழுத்துப் பணியை அங்கு வைத்தே செய்ய முற்படுகையில் அவர்கள் தமது சிற்றுண்டி நிறுவனத்தின் கணக்குகளையும் அவரிடம் ஒப்படைத்து பார்க்கச் சொல்லி மரியாதை செய்வர். அமிதாப்பின் உள்ளக் குமுறலை அவர் மனைவியின் நினைவு தரும் வலியை அழகாக அந்த தம்பதிகளிடம் பகிரும்காட்சி அருமை.

அமிதாப்பின் பேரனால் மூக்குக் கண்ணாடி உடைந்துபோகையில், தன் மகனிடம் கேட்பார் கண்ணாடி மாற்றித் தரும்படி. சரியாக அதே சமயம் மனைவி ஹேமா மாலினியிடம் இருந்து கடிதமும் வரவே, அந்த கடிதத்தைப் படிக்க இயலாமல் கஸ்டப்படும் காட்சியிலும், தன் பேரன் அப்பாவிடம் ஷூவுக்காய் பணம்
வாங்கி தன் தாத்தாவிடம் கொடுத்து கண்ணாடி மாற்றம் படி கூறும் காட்சியும் அருமை.

அந்த கடிதத்தை படிக்க ஆவலாய் இருக்கும் அமிதாப் அந்த சிற்றுண்டி நிறுவன தம்பதிகளிடம் சென்று கடிதத்தைப் படிக்கச் சொல்கிறார்.
அந்த கடிதத்தைப் படித்துக் காட்டுகையில் கண்ணீர் மல்க அதற்கு மேல் படிக்க இயலாமல் அழுதுவிடும் காட்சி கண்ணீர் வரவைக்கும் அனைவரையும்.

தனக்கான நேரத்தை இந்த கடையிலேயே மோட்டா பாய் ஆக கழிக்கும் அமிதாப். இறுதியாக அவர்களிடம் விடைபெற்று செல்லும் காட்சியில் அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை ஏற்க மறுக்கிறார். அவர் செய்த வேலைக்காய் கொடுத்து கண்ணீருடனும் பாசத்துடனும் அனுப்பும் காட்சி அசத்தல்.

ஹேமா மாலினியும் அமிதாப்பும் தொடர்வண்டியில் இரு மகன்களின் வீட்டிற்கும் மாறும் தருணம் வந்தது. பயணிக்கையில் ஒரு நகரத்தில் 10 நிமிடம் இருவரின் ரயிலும் வந்து ஒன்றாய் நிற்கும் என்பதைச் சொல்லி... அந்த சில நிமிடமேனும் பார்த்துக் கொள்ளும் ஆவலில் பயணிக்கும் அமிதாப் மற்றும் ஹேமா மாலினியின் நடிப்பு அருமை.

குறிப்பிட்ட ஸ்டேசன் வர, இருவரும் ஓடி வந்து சேர்ந்து கொள்ள, சில வினாடி கண்ணீர்... பின் பேச்சு என்று நேரம் கரைய... ரயில் மெல்ல நகர ஆரம்பிக்க.. இருவரும் ஒரு முடிவு எடுத்தவர்களாய் ரயில் பயணிக்காமல் அந்த நகரிலேயே தங்குகின்றனர்.

சிறு வயதில் சூபாலிஸ் வேலைசெய்து வந்த சல்மான்கானின் படிப்புக்கு உதவி முன்னேற்றிய அமிதாப் எதிர்பாராத விதமாக சல்மான்கானைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்களை அடையாளம் தெரிந்து கொண்ட சல்மான் அவர்களை வீட்டிற்கு அழைத்து, தான் சமீபத்தில் தான் வெளிநாட்டிலிருந்து வந்து அவர்களைத் தேடினதாகவும் கூறுகிறார். சல்மானின் வற்புறுத்தலில் அவரது வீட்டிற்குச் செல்கிறார் அமிதாப் மற்றும் ஹேமா. நல்ல பாசமிக்க மகனாய் நடந்து கொள்கிறார் சல்மான்.

சல்மான் தம்மோடே இருக்கச் சொல்ல அதைத் தவிர்த்து தம் வீட்டிற்குச் செல்ல உத்தேசித்து செல்ல முற்படுகையில் அமிதாப்பின் கனவு காரை பரிசாக தருகிறார் சல்மான்.

வீட்டிற்கு சென்று வசித்திருக்கையில், மோட்டா பாய் என்ற அழைத்த தம்பதிகள் ஓட்டோடி வருகின்றனர் அமிதாப்பை பார்க்க. அவர் எழுதிய சுயசரிதையை "பாஃபன்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு பல லட்சம் பரிசாக ஒரு நிறுவனம் தருவதாக கூறி பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இறுதியில் என்ன ஆயிற்று, தம் மகன்கள் வந்தார்களா அமிதாப்பைத் தேடி என்று பல விசயங்களோடு மீதிக் கதை முடிகிறது.

இன்றைய நவீனத்துவத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பல மகன்களுக்கு பாடம் புகட்டும் வண்ணம் அமைந்த படம் என்னை கவர்ந்ததால் இந்த படத்தைப் பற்றி விமர்சிக்க உத்தேசித்தேன்.


இப்படத்தில் கணவர் மனைவியின் ஆழ்ந்த அன்பையும் புரிதலையும் மகன் தந்தை உறவையும் அழகாய் காட்டியிருப்பர். நல்ல சமூகச் சிந்தையுள்ள படம்.

~ பூமகள்.

Monday, November 12, 2007

தாய்க்கிழவியின் தவிப்பு..!

தாய்க்கிழவியின் தவிப்பு..!

கரிசக்காட்டு மண் போல
காத்துடம்பு சுருங்கிடுச்சு..!

ராசா உன் நினைப்பு மட்டும்

நிதம் என்னை எழுப்பிடுச்சு..!


நீசத்தண்ணி நான் குடிச்சி
காசுபணம் சேர்த்து வச்சேன்..!
நீ உண்ண பன் ரொட்டி

வரும் நாளில் சேர்த்து வச்சேன்..!



காருல நீ வருவன்னு

என் மவ சொல்ல காத்திருந்தேன்..

தேருல நான் போகுமுன்னே

தேடி என் முகம் பார்க்க வருவாயா??



நீசத்தண்ணி குடிச்சதாலே

நீர் கோர்த்த நெஞ்சாச்சு..!



மூச்சடச்சு நான் கிடக்க

தொண்டைக்குழியில் பேராண்டி

உன் பாசம் வந்து விக்கிச்சு..


வர முடியா கண்டத்தில்

மவராசா நீயிருக்க..

நிழல்படத்தில் முகம் கண்டு

மறுகி அம்மாயி
(அம்மாவின் அம்மா) நானிருக்கேன்..!


பல்லு போயி எல்லாம் போயி

பாதி உயிரான உடம்பால

பலூன் ஊதச் சொல்லி

மிச்ச உயிர பறிக்கிறாங்க..!



நெஞ்சுக்கூட்டில் குழாவிட்டு

நீர் எடுக்க பார்த்துப்புட்டு

தூர்விட்டு போயி

நுரையீரல் சுருங்கிடுச்சாம்..!

மருத்துவர் கை விரிச்சாச்சு..!


உன் பூமுகத்தைப் பார்த்துப் புட்டா

சொர்க்கம் உன் மடியாச்சு..!


ஏதேதோ நெனப்பு வந்து

கண்ணு மட்டும் கலங்கிடுச்சு..!


நல்வாக்கு வாயில் வந்து

வாழ்த்திட்டு விம்மிருச்சு....!


போனில் நீ சொன்ன சொல்லு

காதில் இன்னும் ஒலிக்குதிங்கு..!


அந்த சத்தம் காதுல இன்னும்

அடிச்சுக்கிட்டே காக்குதிங்கு..!


உன் பாசம் காத்தில் வந்து

கண்ண தொடச்சி விட்டுடிச்சி..!

ஊசி வலியும் ஊமைப்

புண்ணும் உன் நேசத்தால மறஞ்சிருச்சி..!


உடம்பு எல்லாம் வலியாச்சு..!

உசிரு எல்லாம் நீயாச்சு..!



கண்ணு மூடி போயிட்டேனா

அழாதேடா ராசாக்குட்டி..!

சாமியா நானிருந்து

காத்து நின்னு பார்த்துக்குவேன்

அழாதேடா ராசாக்குட்டி..!



குறிப்பு:

பூமகளின் கவிதையில் இது அழுவாச்சிகாவியம். ஆம்.. இது என் பாசமிகு அம்மாயிக்காக எழுதப்பட்ட அர்பணக் கவிதை..!

உயிர் பிரிந்த தருவாயில்
அவர் அருகே நானிருந்து
நெஞ்சில் ஏற்றிவைத்த
வலிகளை கவி வரிகளாக்கி
வடித்திருக்கிறேன்..!

வார்த்தைகள் சொல்லும் சேதி
உண்மை..!
சொல்ல நினைத்த சேதி
பன்மை..!
பாதித்த சில நிகழ்வை
'பா' வாக்கி படைத்திருக்கிறேன்..!

சொர்க்கம் எட்டும் இக்கவி
என்றே நம்புகிறேன்.

இதைப் படிக்கும்
என் அம்மாயி
ஆன்மா அமைதியடையும் என்று
பிராத்திக்கிறேன்.

__________________
~ பூமகள்.

Wednesday, November 7, 2007

இருளும் ஒளியும்..!!



உன் வானம் தூரல் போட்டு கொண்டாடும் பூவானம்..!
என் வானம் துக்கத்தை மட்டுமே தூரலாக்கிச் சென்ற செவ்வானம்..!


உன் கனவில் நீ இளவரசர்களின் இதயமெட்டு..!
என் கனவில் நான் இம்சையரசரின் அடிமையிளஞ்சிட்டு..!


உன் காதுகளில் சந்தோசங்கள் சஹானா ராகம் பாடும்..!

என் செவிகளில் சங்கடங்களே சஹாரா முகாரி பாடும்..!



உன் கைப்பையின் சொச்சமாய் இருக்கும் நாணயங்கள்..!!
என் கிழிந்த சேலைநுனியின் மிச்சச் சொத்தாக நாணயங்கள்..!

சிதறும் உன் சிரிப்பில் மிளிரும் உன் செழுமை..!!
பதறும் என் பதபதைப்பில் மிரளும் என் வறுமை..!



உன் கூந்தல் சிங்காரமாய் செலவாக்கி சிவப்பாகியிருக்கும்..!

என் கூந்தல் செல்புசிக்கா எண்ணெயால் சிவப்பாகியிருக்கும்..!


உன் வாயில் கொரித்துச் சிதறும் துண்டுகள்..!

என் ஒரு வேளை ஆகாரத்துக்கு போதுமான துண்டுகள்..!!


உன் செல்ல நாய்க்குட்டியின் சோப்புச் செலவு..!

என் குடும்பத்தினரின் மொத்த உணவுச் செலவு..!

உன் கிழிக்கப்பட்ட ஆடையால் புலப்படும் அங்கம் நாகரிகச் சின்னம்..!
என் கிழிந்த உடையில் தெரியும் அங்கம் அவமானச் சின்னம்..!

உன் செருப்பின் ஒரு ஜோடி விலை..!

என் சேலையின் ஒன்பது ஜோடி விலை..!


செயற்கை வெளிச்சத்தில் உன் வீட்டு மேல்சுவற்றில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்..!!

இயற்கை வெளிச்சத்தில் என் வீட்டு மேல் கூரையின் சிரித்திடும் நட்சத்திரங்கள்..!!


உன் பார்வை வெயில் படாத கருப்பு கண்ணாடியின் பின்..!

என் பார்வை வெயில் பட்டும் கருத்த இருட்டின் முன்..!!


இருட்டான என் உலகில்
உன் வெளிச்சம் பதிக்க வரும்

ஒளியாண்டு எப்போது??

ஒளிந்திராமல் வருவாயோ??

-பூமகள்.

Monday, November 5, 2007

தீபத் திருநாள்..!








தீப ஒளி எங்கும் மேவ
தீபாவளி வந்தததுவே..!

பட்டாசு வெடிகளில்
பிரபஞ்சம் மறக்கலாமோ??

ஓசோன் மழலை வயிற்றில்
ஓட்டையாக்கும்
ஓங்கியொலிக்கும்
ஓய்யார புகைவெடி தேவையா??

கொஞ்ச புகையும்
மிஞ்சா சத்தமும்
நெஞ்சை அதிரா வெடியில்
பிஞ்சின் மகிழ்வை
விஞ்சியது உளவோ??

வெடித்து பின்
தவிப்பது தகுமோ?
பார்...!
தாங்குமோ பார்??

ஆகாயத்து நட்சத்திரங்களை
கூரை ஓட்டையின் வழி
கண்டு எண்ணும்
ஏழையின் வீட்டில்
விருந்து படைத்து
விமர்சியாய் கொண்டாடலாமே??

பளிச்சிடும் தீப ஒளியில்
பள்ளி செல்ல ஏழை மழலைக்கு
கல்வி ஒளி ஏற்றலாமே??

சிந்தித்தால் தடுக்கப்படுவது
பிரபஞ்ச நஞ்சும்
புதிதாய் தொடுக்கப்படுவது
பாச மனித நேயமும்..!

-பூமகள்.


Saturday, November 3, 2007

வௌவால் காவியம்...!!

சமீபத்தில் செய்தி ஒன்றில் கேட்ட விசயம் என்னை இக்கவி எழுத இசைத்தது.

வௌவால்களின் மீது இரக்கம் காட்டி அதற்கு அடைக்களம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் ஒரு தம்பதிகளைப் பற்றி சொன்னார்கள். உலகிலேயே பெரும்பான்மையினரால் வெறுக்கப்படும் ஒரு உயிரியான வௌவால்கள் மேல் கருணை காட்டிய முதல் தம்பதிகள் அவர்கள் தானாம்.



அநேகமாக வௌவாலுக்காக எழுதிய முதல் கவிதை இது தான் என்று நினைக்கிறேன்..!!

இயற்கையின் படைப்பு பலருக்கும் பிடிக்காத வௌவாலும் ஒன்று..!

படைத்தல் இயற்கை என்பதால் பாவப்பட்ட உயிர் வௌவால் என்ன செய்யும்??




வௌவால் காவியம்

பகலவன் துயில விரையும்
மாலை ஆறஞ்சு
நேரம்..!
பாழடைந்த மண்டபம் அருகில்

தனிமைப் பயணம்..!



சட்டென்று குதித்தது
சருகுகள் இடையே அந்த

சின்ன கரிய வௌவால்..!



மெல்ல என் கண்ணோக்கி

மெதுவாக தமிழ் பகர்ந்தது...!


"நீர் கவியென்று யாமறிவோம்."

நிதானமாக சொல்ல விழைந்தது.


"எவையெல்லாமோ கவிக்கரு
எய்தி முக்தி அடைகையில்
எம்மையும் வைத்து பாடுவீரோ??!!"

கெஞ்சி நின்று கேள்வி கேட்டது

பிஞ்சு குட்டி வெண்ணுள்ள
வௌவால்..!!

பார்த்து புன்னகைத்து
பகலவனின் பளிங்கு
வெளிச்சம் அணையுமுன்
பக்கத்தில் அமர்ந்து
பையில் துலாவி
காகித பதிவில்
எழுத முனைந்தேன்..!


காத்திருந்தது தலைகீழாக
கள்ளமில்லா
வௌவால்..!

"எலியும் பறவையும்
எடுத்து வைத்ததுபோல்
இறக்கையும் எலி உருவமுமாய்
உண்டான விசித்திரம்..!!

வேகத்திலும் விசையறிந்து
திசை குறி தப்பாது
பறக்கும் அற்புதம்..!!

சந்துபொந்தில் இல்லை
உறக்கம்... அந்தரத்தில்
அரும்பும் தூக்கம்..!!

தண்ணீர் தேசத்தில்
எலி நாயகருக்காய்
கண்ணீர் விடவைத்தார்
வைரக் கவிஞர்..!!

வருந்தி வாழும்

வௌவாலுக்கும் காவியம்
வடிப்போம் வள்ளல்
நெஞ்சுடையீர்..!

தலைகீழாய் பிறந்து
நேராய் நீ வாழ்கையில்
தலைகீழாய் வாழும்
தாயுள்ள வௌவால்
நேராய் கேட்கிறது
அன்பு வைக்க ஏன்
அருளில்லையென்று..!"


எழுதுகோலின் இடைபற்றி

சிந்தித்துக் கிடக்கையில்

சங்கடம் சொல்லி

தன்கடன் முடித்து

துக்கத்தில் அழுதது

துள்ளும் வௌவால்..!


சாத்தானின் கூட்டமென்று

சாத்திரம் சொல்லி

சற்றும் புத்தியின்றி

கல் கொண்டு

தன்னை சாத்தி

சங்கடப்படுத்தும்

சங்கதி சொன்னது..!


"மண்ணில் இருக்கும்
மண் புழு கூட
உழவரின் நெஞ்சில்
புதல்வராய் இருக்கையில்
தம் உயிர் மட்டும்
தாழ்வா??"
என்று
வௌவால் வடிவாக

கேட்பது போல்

எழுதி முடித்தேன்.


வாசித்துக் காட்டி

வரிகள் விளக்கையில்

வடிந்தது வெள்ளம்

வௌவாலின் கண்களில்...!


வருந்திப் பதைத்து நான்

ஏனென வினவ..


வருத்தமில்லை அது

வௌவாலின் நன்றி

நவிலல் என்று

வகையாய் உரைத்து

புகையாய் பறந்தது..!



__________________

~ பூமகள்.