RSS

Wednesday, August 22, 2007

ஒரு பத்திரிக்கையாளன் நிலை

நித்தம் நித்தம் புதுயுகம்
நிஜத்தைத் தேடி
பொய்யை எழுத
நிஜமாய் அலைவிக்கும்
பெருச்சாளிக் கூட்டம்
மேலதிகாரிகளாய்.......!


முதல் நாள்

இன்று
அரசியல் தலைவரோடு
பேட்டி


நிரம்பக் கேள்வி பல
நிரப்பி நேரில்
சென்றேன்
ஆர்வத்தோடே
அலுவலகத்திற்கு...


என் கேள்விகள் கூட
மீள்திருத்துகைக்குட்பட்டது
மேலதிகாரியால்..
மீளமுடியா துயர்கொண்டது
என் உள்ளம்...


பேசும் முன்பே
வார்த்தைக் களவா?
கேட்கும் முன்பே
கேள்வித் தடையா?
கேள்வியே தடையா?

விம்மித்தவித்து
வேகமாய்ச் சென்றேன்
பேட்டிக்காக..
முடிந்தது பேட்டி
சிரித்தார் தலைவர்....
அழுதது - என்
கொலையான வினாக்கள்..!


இரண்டாம் நாள்

நட்சத்திர பகுதிக்காய்
நாள் முழுக்க புரட்டி
முழுவிவரம் எடுத்து
அழகாய் கோர்த்தேன்
உண்மைச் செய்திகளை..
அழைத்தது மேலிடம்
கிசுகிசு குரலில்
பொய் எழுதச்சொன்னது..
மெல்ல என் பேனா
துடிதுடித்து இறக்க
எத்தனித்துக் கிடந்தது
என் சட்டைப் பையில்.....


மூன்றாம் நாள்..


அழைப்பு வந்தது
காவல்துறையிடமிருந்து....
ஆர்வமாய் போனேன்
சத்தியம் அங்கே
காக்கப்படுமென்ற
நம்பிக்கையோடே..

காசுக்கு மயங்கி
கதையெழுதச் சொன்னர்
அப்பாவி பற்றி....
திரும்ப வந்தேன்
தீர்க்கமான முடிவுடனே...


நான்காம் நாள்


வெள்ளைக்காகிதத்தில்
மெய்யெழுதினேன்
ஆம்...ராஜினாமாக் கடிதம்..


உண்மைகள் தற்கொலை
செய்வதில்
உடன்பாடில்லை
எனக்கென்றேன்..

பிழைக்கத் தெரியாதவன்
என்றனர்

நகைத்துத் திரும்பினேன்...


ஆமாம்...
யாரேனும் யோசித்துக்
கூறுங்களேன்...



புதுப் பத்திரிக்கைக்கு
என்ன பெயர்
வைக்கலாம்???!!!

-பூமகள்

0 comments: